அடுத்த தலைமுறை கணினிகளில் ஆற்றல் நுகர்வைக் குறைப்பதற்கு ஒலி அலைகளைப் பயன்படுத்தலாம் ஒலி அலைகளைப் பயன்படுத்தி சுழல் மின்னோட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துவதற்கான ஒரு புதிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஆற்றல் நுகர்வைக் குறைப்பதுடன், குவாண்டம் கணினித்துறையில் பயன்பாட்டு வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. அத்துடன் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கும் பங்களிக்கும். நவீன தொழில்நுட்பத்தில், வேகமான, சிறிய, அதிக ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பாரம்பரிய மின்னணுவியல் சாதனங்கள் மின்னூட்டத்தின் இயக்கத்தைச் சார்ந்துள்ளன. இது வெப்ப உருவாக்கம், ஆற்றல் இழப்புக்கு வழிவகுக்கிறது. இதை நிவர்த்தி செய்ய, ஆராய்ச்சியாளர்கள் தகவல்களைக் கடத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். ஒரு நம்பிக்கைக்குரிய திசை ஸ்பின்ட்ரானிக்ஸ் ஆகும். இதில் தகவல்கள் மின்னூட்டத்திற்குப் பதிலாக ஒரு சுழற்சியால் கடத்தப்படுகின்றன. இந்தச் சூழலில், பொருட்களுக்குள் ஏற்படும் காந்த அலைகளான மேக்னான்கள், தகவல்களைக் கடத்தும் ஆற்றல் மிக்கவையாக உருவாகி வருகின்றன. எலக்ட்ரான்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த ஆற்றல் இழப்புடன் செயல்பட முடியும் என்பதால், அவை சிறப்பானவையாக உள்ளன. அறிவியல், தொழில்நுட்பத் துறையின் [Department of Science and Technology (DST)] தன்னாட்சி நிறுவனமான, மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் [Institute of Nano Science and Technology (INST), Mohali] ஆராய்ச்சியாளர்கள், மேற்பரப்பு ஒலி அலைகளை [Surface Acoustic Waves (SAWs)] பயன்படுத்தி மேக்னான் அடிப்படையிலான சுழல் மின்னோட்டங்களை (சுழல் அலை கிளர்ச்சிகள்) உருவாக்கி கட்டுப்படுத்துவதற்கான ஒரு புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆற்றல் நுகர்வைக் குறைப்பது ஒரு முக்கிய இலக்காக உள்ள அடுத்த தலைமுறை கணினித்துறைக்கு இந்த ஆய்வு மிகவும் பொருத்தமானதாக விளங்குகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270690®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்