மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கான நுண்ணிய மருந்தியல் முறை ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம், டீக்கின் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து, மார்பக புற்றுநோய் சிகிச்சை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அமையும் வகையில், அதிநவீன நுண்ணிய மருந்தியல் முறையை உருவாக்கியுள்ளனர். இந்த நவீன சிகிச்சை முறை நோயாளிகளின் சிகிச்சைக்கான மருந்துகளை மிகச்சிறந்த முறையில் அளிக்க வகை செய்கிறது. நானோ ஆர்க்கியோசோம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்து, உறைப்பூச்சு சிலிக்கான் நுண் குழாய் வாயிலாக பாதிக்கப்பட்ட உடற்பகுதிகளில் மட்டும் துல்லியமாக செலுத்தப்படுவதன் மூலம், உடலில் உள்ள இதர ஆரோக்கியமான செல்களுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் பெண்களின் சுகாதார பாதிப்புகளுக்கு மார்பக புற்றுநோய் மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதன்மூலம் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மேலும் கீமோதெரபி, கதிர்வீச்சு போன்ற வழக்கமான நடைமுறையில் உள்ள சிகிச்சைகள், பாதிக்கப்படாத பிற திசுக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சிலிக்கான் வேஃபரில் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட நுண்ணிய குழாய்களில் புற்றுநோய்க்கான மருந்துகள் உறிஞ்சப்பட்டு வெப்ப ரீதியாக நிலையான நுண் ஆர்க்கியோசோம்களைப் பயன்படுத்தி, புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான டாக்ஸோரூபிசினை பாதிக்கப்பட்டுள்ள செல்களில் நோடியாக செலுத்தும் ஊசியை கண்டறிந்துள்ளனர். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்