நோக்கம் கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். நிதி ஆதாரம்: இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது. ஓவ்வொரு ஆண்டும் 60,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அலகுத் தொகை - ரூ. 2,10,000/- ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000/- சூரிய சக்தி விளக்கிற்கான தொகை ரூ. 30,000/- மொத்தம் ரூ. 2,10,000/- தகுதி வாய்ந்த பயனாளிகள் கிராமப் பகுதிகளில் வீடு இல்லாத, வீட்டு மனை பட்டா உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகள் ஆவர். சிறப்பு அம்சங்கள் 1.ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும். 2.ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, தாழ்வாரம் மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும். 3.ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும். 4.ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தியில் எரியும் 5 அடர்குறு விளக்குகள் பொருத்தப்படும். 5.கூடுதல் வசதியாக ஒவ்வொரு பயனாளியும் தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மீட்டர் மற்றும் மின்மாற்றிப் பொருத்தப்பட்ட மின் இணைப்பும் பெறலாம். 6.வீடுகள் கட்டும் பணியினை நேரடியாக பயனாளிகள் மேற்கொள்ளலாம். 7.சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படும். 8.இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கான நில எடுப்பு ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே தகுதியானவர்கள். 9.அமைக்கப்படும் சூரிய சக்தி விளக்குகள் மற்றும் அத்துடன் கூடிய இதர உபகரணங்களை பயனாளிகள் முறையாக பயன்படுத்தும் விவரங்களைத் தெரிவிக்கும் சிற்றேடுகள் விநியோகம் செய்யப்படும். 10.ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுர அடிக்கு மிகாமல் இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்டவாறு கட்டப்படவேண்டும். இதன் வடிவமைப்பில் மாறுதல்கள் அனுமதிக்கப்படமாட்டாது. 11.இருப்பினும் அனுமதிக்கப்பட்ட வீட்டின் பரப்பளவான 300 சதுர அடியில் வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல், சமையலறை மற்றும் படுக்கை அறை ஆகியவற்றை இட அமைவிற்கேற்ப மாற்றி அமைக்க அனுமதிக்கப்படும். 12.பயனாளிகள் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ளலாம். பயனாளிகளால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்ய இயலாத நிலையில், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்து வழங்கிவிட்டு அதற்கான தொகையினை திட்ட நிதியிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். 13.இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலும் முழு சுகாதார திட்ட நிதி ஒதுக்கீட்டினை ஒருங்கிணைத்து அனைத்து வீடுகளிலும் ஒரு கழிவறை அமைக்கப்படும். 14.செராமிக் ஓடுகளில் இத்திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்ட சின்னம் அனைத்து வீடுகளிலும் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்படும். 15.இத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் வீடு கட்டப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் வண்ணத்தினால் எழுதப்படவேண்டும். வீடுகள் ஒதுக்கீடு செய்தல் 1.மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர், கிராம ஊராட்சி வாரியாக கட்டப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கையை முடிவு செய்வார். 2.கிராம சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்களின் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும். பணிகளுக்கான உத்தரவு வழங்குதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களால் நில உரிமை, இடம் ஆகியவை சரிபார்க்கப்பட்டதை உறுதி செய்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) வேலை உத்திரவினை வழங்குவார். திட்ட செயலாக்கம் •ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். •வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மூலம் திட்டம் செயல்படுத்தப்படும். •பயனாளிகள் வீடுகளைக் கட்டுவதற்கு ஒன்றிய / உதவி பொறியாளர்கள் தேவையான தொழில்நுட்ப உதவி புரிவார்கள். பயனாளிகளின் தகுதி இத்திட்டத்தில் பயனாளிகள் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். •சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். •சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். •300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை இடத்திற்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும். •குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டுமனை பட்டா இருக்க வேண்டும். •அந்த கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட வீடு எதுவும் இருக்கக் கூடாது. •அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது. பயனாளிகள் தேர்வு •பயனாளிகள் தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போது, மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், ஹெச்ஐவி/எய்ட்ஸ்/டிபி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ் பெற்றவர்கள், வெள்ளம், தீ விபத்து ஆகிய இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கும் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். •தகுதியுள்ள ஏழை ஒருவரின் பெயர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் விடுபட்டிருப்பின், விடுபட்ட நபர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநர் நிலையில் உள்ள அலுவலர், விண்ணப்பித்தவரின் விவரங்களை சரிபார்த்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் அவரது பெயரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற செய்து அதனை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். இத்தகைய நபர், நிரந்தர காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகு பயனாளிகள் தேர்வு செய்யப்படும்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார். •வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர் அடங்கிய குழு, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும். கிராம வாரியான வீடுகள் ஒதுக்கீடு செய்தல் உள் ஒதுக்கீடு : இத்திட்டத்திற்கென தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட விகிதாச்சாரத்தில் பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 1. ஆதிதிராவிடர் - 29ரூ 2. பழங்குடியினர் - 1 ரூ 3. இதர பிரிவினர் - 70ரூ திட்டச் செயலாக்கம் 1.பசுமை வீடுகளின் கட்டுமானத்தை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவியுடன் பயனாளிகளே மேற்கொள்வர். 2.தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையுடன் ஒருங்கிணைந்து சூரிய சக்தி விளக்கு அமைக்கும் பணியை மேற்கொள்ளும். திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள் மாநில அளவில்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15 மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார அளவில்: வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிராம ஊராட்சி அளவில்: கிராம ஊராட்சித் தலைவர் ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்