<div id="MiddleColumn_internal"> <h3>முன்னுரை</h3> <p style="text-align: justify;">பல்வேறு வகை நிலங்களின் பயன்பாடுகளில் வனவியல் இயற்கை தன்மையோடும் தானே புதுப்பித்து கொள்ளும் தன்மையுடையதாகவும் விளங்குகிறது. வன வளத்தினையும் பசுமை போர்வையினையும் பாதுகாத்து மாநில மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வழங்குவதில் தமிழகம் தொன்று தொட்டு சிறந்து விளங்குகிறது. அளவிடமுடியாத பல்லுயிர் பரவலை பறை சாற்றும் பலவிதமான தாவரவகைகள் மற்றும் வனவிலங்குகளை தன்னகத்தே கொண்டு தமிழகத்தின் வனச்சூழலமைப்பு விளங்குவதால் நிலைமாறாத சுற்றுப்புறச்சூழல் மற்றும் உணவு ஆதார பாதுகாப்பிற்கு இன்றியமையாததாகிறது. உலகத்திலுள்ள உயிரினங்களின் வாழ்க்கையில் வனங்கள் பெரும் பங்கு வகிப்பதோடு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் இயற்கையின் வள மேலாண்மைக்கும் உறுதுணையாக உள்ளது. வனங்கள் மண் அரிப்பினை தடுப்பதுடன் விவசாயத்தின் வளர்ப்புத்தாயாகவும் செயல்படுகிறது. நச்சு வாயுக்களின் கொடிய விளைவு, விளை திறன் குறைவு, அதிகரித்து வரும் மாசு, உலக வெப்பமயமாதலால் ஏற்படும் நிலை மாற்றங்கள், மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு வனங்களே தீர்வு என்ற உண்மை உணரப்பட்ட காரணத்தால் முன்பில்லாத அளவிற்கு வனங்களின் முக்கியத்துவம் தற்போது மிகவும் உணரப்படுகிறது.</p> <h3>வனங்களின் பரப்பளவு</h3> <p style="text-align: justify;">தமிழகத்தில் 22,877 சதுர கி.மீ. பதிவு செய்யப்பட்ட வனப்பரப்பளவு உள்ளது. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 17.59 விழுக்காடாகும். தேசிய வனக்கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவான 33.33 விழுக்காட்டில் தமிழகத்தின் வனப்பரப்பு, மற்றும் மரங்களின் பரப்பளவு தற்போது 22.04 விழுக்காடு உள்ளது. எனவே, மாநிலத்தின் வனங்களின் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.</p> <h3>வனப்பரப்பு (ம) பசுமைப் போர்வை</h3> <p style="text-align: justify;">தொழிற்சாலைகளின் வளர்ச்சியாலும், நகரத்தின் தாக்கத்தினாலும், மாநிலத்திற்கு மாநிலம் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு வேறுபடுகிறது. இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாநிலமும் தன்னகத்தே கொண்ட மொத்த நிலப்பரப்பளவில் பசுமை பரப்பளவினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. வனங்களின் பரப்பளவினை அதிகரிப்பதோடு வனங்களுக்கு வெளியேயும் மரங்கள் நடுவதை ஊக்குவிப்பதன் மூலம் பசுமை பரப்பளவை அதிகரிக்க இயலும்.</p> <p style="text-align: justify;">மூன்று ஆண்டுகளில் வனங்களின் மற்றும் மரங்களின் பரப்பளவினை அதிகரித்து பசுமை போர்வையினை அதிகரிப்பதில் தமிழகம் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. மாநிலத்தில் 2007-08ஆம் ஆண்டிலிருந்து துவக்கப்பட்ட தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டம் துவங்கப்பட்டு அவ்வருடத்தில் 28,760 ஏக்கர் பரப்பளவிலும் 2008-09 ஆம் ஆண்டில் 25800 ஏக்கர் பரப்பளவிலும் மரங்கள் உற்பத்தி செய்யப்பட்டதால் மரங்களின் பரப்பளவினை 54560 ஏக்கர் அளவிற்கு அதிகரிக்க இத்திட்டம் உதவியாக இருந்தது. இந்நடவடிக்கைகளில் மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட ஆற்றுப்படுகை மற்றும் கால்வாய் கரையோரங்களில் தேக்கு மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் 12,626 எக்டர் பரப்பளவில் மரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு மரங்களின் பரப்பளவு அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p> <h3>வனப்பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">மாநிலத்தின் வனங்கள் கடுமையான சமுதாயத்தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு காரணங்களால் வன வளங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இவற்றில் சந்தனமரத் திருட்டு, திருட்டு மரவெட்டு, ஆடு மாடு மேய்ச்சல், கஞ்சா பயிரிடுதல், வன நில ஆக்கிரமிப்பு, மருத்துவ செடிகளின் திருட்டு போன்றவைகள் அடங்கும். பல்வேறு திட்டங்களின் மூலமாகவும் பெரும் திட்டங்களை தீட்டியும் இது போன்ற பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. வனப்பணியாளர்களுக்கு நவீன தளவாடங்களை கையாளுதல் மற்றும் எதிர்ப்புகளை முறியடிக்கும் பயிற்சி ஆகியவை ரோந்துப்பணி யுத்திகள் மற்றும் குற்றங்களை கண்டுபிடிக்கும் முறைகள் குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. வனங்களை ஒருங்கிணைக்க வன எல்லைகளில் எல்லைக்கற் தூண்களை நடுதல், புதிய தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், பழைய தீ தடுப்புக் கோடுகளை பராமரித்தல், கூட்டுவன நிர்வாக அடிப்படையில் உள்ளூர் மக்களின் உதவி கொண்டு தீ தடுப்புப்பணிகளை மேற்கொள்ளுதல், தீ நிகழ்வினை கண்டறிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், மலைவாழ் மக்களை கொண்டு வறண்ட காலங்களில் ஒவ்வொரு வருடமும் தீ தடுப்பு பணிகளில் ஈடுபட வைத்தல் போன்ற வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளோடு வனவிலங்கு வேட்டைத் தடுப்புக் காவலர்களை பணியில் அமர்த்துதல் மற்றும் வன நிலங்களில் கஞ்சா பயிர் பயிரிடுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் யாவும் வனப்பாதுகாப்பில் அடங்கும்.</p> <h3>பல்லுயிரின பரவல் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">தமிழக வன நிர்வாகத்தில் பல்லுயிரின் பரவல் பாதுகாப்பிற்கென முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இம்மாநிலத்தின் 9 வன உயிரின சரணாலயங்கள், 5 தேசிய பூங்கா, 12 பறவைகள் சரணாலயங்கள் மற்றும் ஒரு பாதுகாக்கப்பட்ட புகலிடம் உட்பட 4309 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பளவினை பாதுகாக்கப்பட்ட வளையத்தின் கீழ் ஒதுக்கியுள்ளது. மேலும், வன உயிரின பாதுகாப்பிற்காக தமிழகத்தில் 1 உயிரின பூங்காவும் 8 உயிரின் காட்சி சாலைகளும் உள்ளன. இதைத்தவிர நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்ச்சூழல் காப்பகம் மற்றும் அகத்தியர்மலை உயிர்ச்சூழல் காப்பகம் ஆகிய மூன்று உயிர்ச்சூழல் காப்பகங்களை இம்மாநிலம் தன்னகத்தே கொண்டுள்ளது. 1988ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் புகலிட காப்பகப் பகுதியாக அறிவிக்கை செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு ஆனைமலை வன உயிரின சரணாலயம் மற்றும் முதுமலை வன உயிரின சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் புதிய புலிகள் காப்பகமாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. மேலும் 2008ம் வருடம் சத்தியமங்கலம் வன உயிரின சரணாலயம் ஒன்றும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அநேக வனஉயிரினங்களின் வாழும் உறைவிடங்களையும் அவ்விடத்திற்கே உரித்தான உயிரினங்களையும், தன்னகத்தே கொண்டுள்ளன. மேலும் பாலூட்டியின் பெரிய விலங்குகள் வாழும் பகுதிகளையும் முக்கிய இயற்கை வனப்புடைய நிலம் மற்றும் வன உயிரின வழித்தடங்களை உள்ளடக்கி கொண்டுள்ளன. மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவினை மாநிலத்து வனங்களின் பரப்பளவில் 25 விழுக்காட்டிற்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்லுயிர்பரவல் பாதுகாப்பு, கல்வி, பொழுதுபோக்கு, வரலாற்று முக்கியத்துவம், தனித்துவம் வாய்ந்த நில மற்றும் நீர் அமைப்புகள் போன்றவற்றுக்காக இப்பாதுகாப்பு பகுதிகள் மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify;">உலக அளவிலான பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் கொண்ட 25 இடங்களுக்குள் ஒன்றாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இது இந்தியாவிற்கே உரித்தான உயிரினங்களடங்கிய 3 பல்லுயிர் பெருக்க பெரு மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கன்னியாகுமரி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை, முதுமலை, முக்குருத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பாதுகாப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் வனங்களின் அரிய தாவரவகை மற்றும் விலங்கினங்களுக்கு புகலிடங்களாகவும் விளங்குகின்றன. சரணாலய மேலாண்மைத் திட்டங்கள் மற்றும் அனைத்து வனக்கோட்டங்களின் வன்செயல் திட்டங்கள் இம்மாநிலத்தின் உயிரின் பரவல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கின்றன.</p> <h3>தட்பவெப்பநிலை மாறுபாட்டினால் ஏற்படும் தாக்கங்களை தணிக்கும் வனங்கள்</h3> <p style="text-align: justify;">அதிகமான வாகனங்களின் போக்குவரத்தினாலும் துரிதமான தொழில் வளர்ச்சி மற்றும் நகர்புற வளர்ச்சியாலும் ஏற்படும் தாக்கங்களினால் நிலையான தட்பவெப்பத்தினை சீர்குலைக்க வழிவகுக்கின்றன. பனிப்பாறை உருகுதல் அதனால் கடல் நீர்ப்பரப்பு உயர்தல், கடல் நீர் அமிலத்தன்மை அடைதல் ஆகியவற்றைச் சார்ந்த இயற்கை பேரழிவு போன்ற அபாய நிகழ்வுகள் உண்டாக தட்பவெப்ப நிலை மாற்றமே காரணமாகும்.</p> <p style="text-align: justify;">பசுமைக்குடில் வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் இந்நூற்றாண்டின் முடிவில் பூமியின் வளிமண்டல வெப்பம் 6.4 டிகிரி உயர்ந்து தட்பவெப்பநிலையில் பெருமாற்றங்கள் ஏற்படும் என பன்னாட்டு அரசு ஒன்றிணைந்த முகமை எச்சரித்துள்ளது. 1993 ஆம் ஆண்டிலிருந்து கடல் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடல் நீர்மட்டத்தின் அளவு 1961 லிருந்து 2003 வரையிலுள்ள இடைபட்ட காலங்களில் வருடத்திற்கு சராசரியாக 1.8 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்ததை விட 1993-2003ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் வருடத்திற்கு சராசரியாக 3.1 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்து இருமடங்காகியுள்ளது. கடல் மட்டத்தின் உயர்ந்து வரும் பதட்டம் நிறைந்த 27 நாடுகளில் இந்திய நாடும் ஒன்றாகும் என ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. கடல் மட்டம் உயர்வால் 1076 கி.மீ நீளம் கடற்கரையைக் கொண்ட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;">தட்பவெப்ப நிலை, மழை ஆகியவைகளை ஊக்குவிக்கும் வனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த உயிரினங்கள் தட்பவெப்ப நிலை மாற்றங்களினால் ஏற்படும் உலக வெப்பமயமாதலினால் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">இம்மாநிலத்திலுள்ள தொடர்ச்சியில்லாத துண்டுகளாக காணப்படும் வனங்களில் வாழும் அநேக தாவர இனங்களும், விலங்கினங்களும் தட்பவெப்பநிலை மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் அழிந்துபோக நேரிடும். தொழில்மயமாதலுக்கு முன் இருந்த கரியமிலவாயுவின் அடர்த்தி பத்து இலட்சத்திற்கு 280 துகள்கள் என்ற நிலையிலிருந்து தற்போது பத்து இலட்சத்திற்கு 430 துகள்கள் என்ற அளவினை எட்டியுள்ளதை ஒப்புநோக்குங்கால் கரியமில வாயுவின் அடர்த்தியினை பத்து இலட்சத்திற்கு 400 துகள்கள் என்ற அளவிற்கும் அதற்கு கீழும் கொண்டுவருவது அவசியமென உலக நாடுகளுக்கிடையே கருத்தொற்றுமை அதிகரித்து வருகிறது.</p> <p style="text-align: justify;">வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவை உறிஞ்சி எடுத்து தாவரங்களிலும் நிலத்திலும் நிலைபெற செய்ய காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு உதவுகின்றன. வீட்டினை சுற்றியுள்ள 3 முதிர்ந்த மரங்கள் 50 விழுக்காடு வரை குளிர்சாதன தேவையினை பூர்த்தி செய்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், வீடு மற்றும் வியாபார வளாகங்களில் மரங்களை நட்டு அதிகப்படியான மின்சார செலவினை சேமிக்க முடியும்.</p> <p style="text-align: justify;">குறைந்த பராமரிப்புடன் கூடிய திறன் மிகுந்த சாதனமாக வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு செயல்பட்டு கரியமில வாயுவை உட்கொள்வதால், பசுமைகுடில் வாயுக்களின் அதிகரிப்பை முறியடிக்கவும் செய்கின்றன. வனங்கள் கரியமில வாயு பெட்டகங்களாக செயல்பட்டு வளிமண்டலத்தை வெப்பமயமாக்கும் வாயுக்களை கட்டுப்படுத்த உதவுவதுடன், உலகிலுள்ள உயிரினங்களை குறிப்பாக மனித இனத்தை உலக வெப்பமயமாதலினால் ஏற்படும் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் பணியினையும் செய்கின்றன.</p> <h3>வனக்கொள்கை</h3> <p style="text-align: justify;">1988ம் வருட தேசிய வனக்கொள்கையில் வன நிர்வாகம் பற்றிய அடிப்படை நோக்கம், அவசியம் மற்றும் திறனாய்வு ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. தேசிய வனக் கொள்கையின் முக்கிய குறிக்கோள் சூழலமைப்பினை நிலைப்படுத்துதல், மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கு ஆதாரமான சூழல் சமநிலை மற்றும் வளி மண்டல சமன்பாட்டுடன் கூடிய சூழலமைப்பை நிலை நிறுத்தி பராமரிப்பதாகும். இதனால் வனங்களின் வளங்களை நேரடியாக பொருளாதார பயனுக்காக பயன்படுத்துதல் <span style="text-align: justify;">என்பது மேற்கூறிய முக்கிய குறிக்கோள்களுக்கு அடுத்தபடியாகவே கருத வேண்டியுள்ளது.</span></p> <p style="text-align: justify;">சூழலியலை நிலைநிறுத்துதல், வனங்களை பாதுகாத்தல், வன உயிரினங்கள், சூழல் அமைப்பு மற்றும் மரபியல் வளங்கள் ஆகியவற்றை பாதுகாத்தல், இயற்கைக் காடுகளைப் பராமரித்தல், வன உற்பத்தித் திறனை அதிகரித்தல், வனங்களின் நீர்வளங்களை பெருக்க நீர்ப்பிடிப்பு பகுதிகளை செழிப்பாக்குதல் மற்றும் மாநிலத்தின் வனங்கள் / மரங்களின் பரப்பளவினை அதிகரித்தல் ஆகியவை மாநில வனக்கொள்கையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.</p> <h3>வன மேலாண்மை குறிக்கோள்கள்</h3> <ul style="text-align: justify;"> <li>மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் நிலைத்தன்மையினை உறுதிப் படுத்துதல்,</li> <li>பல்லுயிர்ப் பரவல் தன்மை வன உயிரினம் மற்றும் மரபியல் வளங்களைப் பாதுகாத்தல்,</li> <li>தரங்குன்றிய வனங்களை மீட்டு புனர்வாழ்வளித்தல், கடலோரச்சூழல் அமைப்பு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, வனவள மேலாண்மை மற்றும் பெருக்கத்திற்கான வனப்பாதுகாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காக வனங்களுக்கு வெளியே மரங்கள் அடர்ந்த பகுதிகளை விரிவுபடுத்துதல்,</li> <li>வனப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பிடிப்புப்பகுதி மேலாண்மை மூலம் நீர்வளத்தினை பெருக்குதல், பொருளாதார செழுமை மற்றும் சூழலியல் நிலைத்தன்மையினை உறுதிப்படுத்த பழங்குடியினர் மேம்பாடு,</li> <li>அறிவியல் ரீதியான வன மேலாண்மைக்கான தொழில்நுட்ப உதவி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி,</li> <li>மரங்களின் பரப்பினை அதிகரிக்க வன விரிவாக்கம், வன உயிரின் மேலாண்மை சார்ந்த விழிப்புணர்வு கல்வி, ஊரக எரிசக்தி பாதுகாப்பிற்கான வனவியல்,</li> <li>பாதுகாப்பு சார்ந்த சூழல் சுற்றுலா, வனவியல் மேலாண்மைக்கான மனித வள மேம்பாடு, தட்பவெப்பநிலை மாறுபாட்டிற்கான தீர்வு.</li> </ul> <h3>வனச் சட்டங்கள்</h3> <p style="text-align: justify;">வனக்கொள்கையின் நோக்கங்களை நடைமுறைபடுத்த தமிழ்நாடு வனச் சட்டம் - 1882, தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் 1949, தமிழ்நாடு மலை பகுதி (மா பாதுகாப்பு) சட்டம், 1955, வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972, வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, பல்லுயிரின் பரவல் சட்டம் 2002 போன்ற பல சட்டங்கள் இயற்றப்பட்டு வனத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வனங்களுக்கு வெளியே பசுமைப் போர்வையினை நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p> <h3>தனியார் நிலங்களில் மரம் வளர்த்தல்</h3> <p style="text-align: justify;">வனங்களுக்கு வெளியே மரங்களை வளர்த்தலை ஊக்குவிப்பதற்காக சிறு, குறு விவசாயிகளின் நிலங்களிலும், வரப்புகளிலும், வயல்களின் நடுவே உள்ள காலி இடங்களிலும் மரங்களை நடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கு தேவைப்படும் மரக்கன்றுகள், விதைப்பண்ணைகளிலிருந்து தருவிக்கப்பட்ட விதைகள் மூலம் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளின் வருமானம் பெருகுவதுடன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கூழ்மரங்களை வருங்காலங்களில் சீராக கிடைக்கவும் மரச்சாமான்கள் செய்ய தடிமரங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கவும் இத்திட்டம் உறுதி செய்கிறது. கிராமப்புறங்களில் மரங்களின் அடர்த்தி உயருவதால் சுற்றுசூழல் சீரடைவதுடன் கிராமபுறமும் மேம்பாடடைய இத்திட்டம் வழிவகை செய்கிறது.</p> <h3>நகர்புற வனவியல்</h3> <p style="text-align: justify;">விரைவாக பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாதலின் விளைவாக தமிழ்நாட்டின் பத்து மாநகரங்களில் மாசின் அளவு உயர்ந்துள்ளது. மரங்கள் மாசினைக்கட்டுப்படுத்துவது மட்டுமின்றி கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்களை உறிஞ்சும் பெட்டகமாகவும் விளங்கும் ஆற்றல் படைத்தவை. எனவே காற்று, நீர் மற்றும் ஒலி மாசுக்களின் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்தி நகரத்தின் அழகான தோற்றத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு நகர்புற வனவியல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் கீழ், சாலை ஓரங்களிலும், முக்கிய சாலை வளைவுகளிலும், வேம்பு, புங்கன், பாதாம், மகிழம், சரக்கொன்றை, மந்தாரை, புண்ணை, தூங்குமூஞ்சி, வாகை, இயல்வாகை மற்றும் நாகலிங்கம் போன்ற மரவகைகள் நடப்பட்டுள்ளன. இவ்வகையான மரக்கன்றுகளை சாலையின் அழகான தோற்றத்திற்கும் நிலத்தின் தன்மைக்கேற்றவாறும் தேர்வு செய்யப்பட்டு நடப்பட்டுள்ளன. இம்மரக்கன்றுகளின் உரிய பாதுகாப்பிற்கென கம்பிவேலிகளும் அமைத்து தரப்பட்டுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்தத் தேவையான நிதிச்செலவிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தன்னுடைய பங்குதொகையை வழங்கியுள்ளது.</p> <h3>படுகை நிலங்களில் தேக்கு மரங்கள் வளர்த்தல்</h3> <p style="text-align: justify;">மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஈரமான மற்றும் உலர்ந்த இடங்களில் தேக்கு மரங்கள் இயற்கையாக வளர்ந்து காணப்படுகின்றன. இத்திட்டமானது, மாநிலத்தின் மரத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், ஆற்றுப்படுகை ஓரங்களில் மண் அரிப்பை தடுக்கவும் பசுமைப் போர்வையினை அதிகரிக்கவும், காப்பு காடுகளுக்கு வெளியே தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் பாசன கால்வாய் ஓரங்களில் தேக்கு மரங்கள் நடப்பட்டு வருகின்றன.</p> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">அரசு நிறுவனங்களுக்கும் <span style="text-align: justify;">உள்ளாட்சி</span> </span>அமைப்புகளுக்கும் செடிகளை இலவசமாக வழங்குதல். அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகர்ப்புறங்களுக்கு குடி பெயர்தல் போன்ற காரணங்களால் நகரங்களில் வியத்தகு அளவிற்கு மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது. மனித இனத்திற்கு முறையாக தேவைப்படும் இயற்கை வளங்களை முறையின்றி மிக அதிகமாக பயன்படுத்தியதால் மாசு அளவு ஏற்பு அளவைவிட அதிகமாகியுள்ளது. முக்கியமாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சுக்கலந்த புகைகள் மாசுப்படுத்தி நகர்ப்புற மக்களின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. பள்ளிகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நிலைய வளாகங்களில் நடுவதற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.</p> <h3>வன விரிவாக்க மையங்கள்</h3> <p style="text-align: justify;">மரங்கள் வளர்ப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை மக்களுக்கு வழங்குவதற்காக நமது நாட்டிலேயே தனிதன்மை வாய்ந்ததாக முப்பது மாவட்டங்களில் வன விரிவாக்க மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. வன விரிவாக்க மையங்களின் மூலம் நல்ல வருமானம் தரும் மரங்களாகிய முள்ளில்லா மூங்கில், சவுக்கு, தேக்கு, வீரிய ஒட்டுப்புளி மற்றும் நெல்லி, பெருமரம், வேம்பு, மலைவேம்பு போன்ற மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு கொடுக்கப்பட்டு விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் தனிநபர் நிலங்களில் நடப்பட்டு விளைநிலங்களில் செயல்விளக்கத் தோட்டங்களாக திகழ்கின்றன.</p> <h3>தரங்குன்றிய காடுகளை மக்கள் பங்கேற்புடன் மீட்டுருவாக்குதல்</h3> <p style="text-align: justify;">தரம் குன்றிய காடுகளில் மீண்டும் மரங்கள், புதர் மூலிகை மற்றும் பிற தாவர வகைகளின் அடர்த்தியினை அதிகரித்தல் பல்லுயிரினப்பரவலை முழுவதுமாக மீட்டல், வனங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் வனம் சார்ந்து வாழ்வோரின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகிய முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு வனம் சார்ந்து வாழ்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு வாழ்வாதராமாக வனங்கள் திகழ்வதால் தமிழகத்திலுள்ள தரங்குன்றிய காடுகளை அவர்தம் பங்கேற்புடன் மேம்படுத்துவதும் அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதும் அவசியமாகிறது. எனவே தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டம், தேசிய காடு வளர்ப்பு திட்டம், மேற்கு தொடர்ச்சிமலை அபிவிருத்தித்திட்டம் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் முதலிய முக்கிய திட்டங்கள் மாநிலத்து வனப்பரப்பளவினை அதிகரிக்கச்செய்யும் முக்கிய பங்கினை ஆற்றுவதாக அமைகின்றன.</p> <h3>தேசிய காடு வளர்ப்புத் திட்டம்</h3> <p style="text-align: justify;">கிராமங்களில் மேம்பாட்டு பணி வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்தல் மற்றும் வனங்களை பாதுகாத்தல் ஆகிய முக்கிய நோக்கங்களை மத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் 100 விழுக்காடு மத்திய அரசு நிதியுதவியுடன் 1140 கிராமங்களில் கூட்டுவன மேலாண்மை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த குழுக்களின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென 32 வன மேலாண்மை முகமைகள் மாவட்டங்களில் இயங்கி வருகின்றன.</p> <h3>சுனாமி புணரமைப்புத் திட்டம்</h3> <p style="text-align: justify;">சுனாமியின் போது பெற்ற அனுபவம், கடலோர தொடர் தடுப்பு தோட்டங்கள் மற்றும் அலையாத்தி மரத் தோட்டங்களின் பயன்பாட்டை உணரச்செய்தது. கடலோர பகுதிகளில் வாழும் சமூகத்தினருக்கு பாதுகாப்பு நல்கவும், அவர்தம் உடைமைகளை பாதுகாக்கவும், நகரும் மணல் மேடுகளை நிலைநிறுத்தவும், நீர்வளத்தை பாதுகாக்கவும், கடல்சார்ந்த பகுதிகளை காக்கவும், தமிழக கடற்கரை மாவட்டங்களில் சுனாமி மறுசீரமைப்புத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <h3>மேற்கு தொடர்ச்சிமலை அபிவிருத்தி திட்டம்</h3> <p style="text-align: justify;">மேற்கு தொடர்ச்சிமலை பகுதியிலுள்ள வனங்களின் சூழல் அமைப்பினை மேம்படுத்தி மரங்கள் அடர்ந்த பகுதிகளை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காடுவளர்ப்பு, மண்வள பாதுகாப்பு பணிகள், வேட்டைத் தடுப்புப் பணிகள், மருத்துவ தாவரங்களின் பாதுகாப்பு, சூரிய மின்வேலி அமைத்தல் போன்ற சில முக்கிய பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <h3>மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் மூலம் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் சுற்று சூழல் அமைப்பினை செம்மைப்படுத்தி மேம்படுத்த இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் காடு வளர்ப்பு மட்டுமன்றி, நீலகிரி மாவட்டத்திலுள்ள தரங்குன்றிய சோலைக்காடுகள் மற்றும் வன்பரப்பினை மேம்படுத்தவும், அந்த மாவட்டத்தின் சூழலமைப்பின் மீதான தாக்கத்தினை குறைப்பதற்காக, மண்வளப்பாதுகாப்பு பணிகள், சோலைக்காடுகளைச் சுற்றி வேலி அமைத்தல் போன்ற இதர பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <h3>பல் உயிரின் பரவல் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">மாநிலத்திலுள்ள வன உயிரினங்கள் வாழும் உறைவிட பகுதிகளை மேம்படுத்துவதற்காக பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முறையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் தமிழகத்திலுள்ள வன உயிரினம் வாழுமிடங்களும் மற்றும் பறவைகள் சரணாலயங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வன உயிரின் செழிப்பு நிறைந்த பகுதிகளில் அவைகளின் பாதுகாப்புக்காக மண்வள பாதுகாப்பு மற்றும் நீர்வள பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வன உயிரின் உறைவிடங்களில் வனவிலங்கு காவலர்கள் நியமிக்கப்படுவதுடன் வேட்டை தடுப்பு கோபுரம் மற்றும் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h3>சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள்</h3> <p style="text-align: justify;">1972ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி சரணாலயங்களும், தேசிய பூங்காக்களும் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4309 சதுர கி.மீ. அளவிலான நிலப்பரப்பில் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இதில் 9 வன உயிரின சரணாலயங்களும், 5 தேசிய பூங்காக்களும் 12 பறவைச்சரணாலயங்களும் அடங்கும். வனவிலங்குகளை பாதுகாத்து பேணுவதற்கும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் சூழலியல் கல்வி அறிவை ஊட்டுவதற்கும் விலங்குகளை கண்டு மகிழ்வதற்கும் தமிழகத்தில் 8 உயிரினக் காட்சி சாலைகள் மற்றும் 1 உயிரியல் பூங்காவும் செயல்படுகின்றன. விலங்கினங்களின் முக்கியத்துவத்தை கருதி நீலகிரி, மன்னார் வளைகுடா மற்றும் அகத்தியர் மலை ஆகிய பகுதிகள் பல்லுயிர்ச்சூழல் காப்பகங்களாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">மாநிலத்தில் வன உயிரினங்களை பாதுகாக்கும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் கீழ்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளன.</p> <h3>மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்</h3> <p style="text-align: justify;">மத்திய அரசின் 100 விழுக்காடு நிதி உதவியுடன் பல்வேறு வன உயிரின உய்விடங்களின் மேம்பாடு மற்றும் தேசிய பூங்காக்களின் மேம்பாடு பணிகள் மேற்கொள்வதற்காக 34 வகையான மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுள் தமிழகத்திலுள்ள புலிகள் திட்டம், யானைகள் திட்டம், சாம்பல் நிற அணில் சரணாலய மேம்பாடு, அலையாத்தி காடுகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, கோடியக்கரை ஈரநிலக்காடுகளின் மேம்பாடு (மற்றும்) பாதுகாத்துப் பேணுதல், நீலகிரி பல்லுயிர் சூழல் காப்பகச் செயல் திட்டம் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வன உயிரின மேம்பாட்டுத் திட்டங்களாகும்.</p> <h3>புலிகள் திட்டம்</h3> <p style="text-align: justify;">புலிகளையும் அவற்றின் புகலிடங்களையும் பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கோவை மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய மூன்று புலிகள் காப்பகங்கள் உள்ளன. புலிகள் பிற விலங்குகளை வேட்டையாடக் கூடியத்திறன் படைத்தவை. எனவே, புலிகள் ஒரு சூழல் அமைப்பில் இருந்தால், அச்சூழல் அமைப்பு ஆரோக்கியமான ஒன்று என புலிகள் அடையாளம் காட்டுபவையாக விளங்குகின்றன. எனவே புலிகளின் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது புலிகள் வாழும் சரணாலயத்தின் மேலாண்மை மற்றும் பராமரிப்பிற்கென மத்திய அரசு 100 விழுக்காடு (தொடரா செலவினம் மற்றும் 50 விழுக்காடு மாநில நிதிப் பங்கு தொடரும் செலவினம் பணிக்காக) திட்ட நிதி உதவியினை வழங்கி வருகிறது. சூழல் மேம்பாட்டுப் பணிகள் பாதுகாப்பு, வனத்தீ தடுப்பு நடவடிக்கைகள், நீர் ஆதார மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி, மனித வன உயிரின் மோதல் கட்டுப்பாடு மனித வள மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு மேற்கொள்ளப்பட்டது.</p> <h3>யானைகள் திட்டம்</h3> <p style="text-align: justify;">யானைகள் திட்டமானது நீலகிரி கிழக்குத்தொடர்ச்சிமலை, யானைகள் காப்பிடம், கோயம்புத்தூர் யானைகள் காப்பிடம், பெரியார் யானைகள் காப்பிடம் மற்றும் ஆனைமலை யானைகள் காப்பிடம் என நான்கு யானைகள் காப்பிடங்களாக செயல்படுத்தப்பட்டு யானைகளின் எண்ணிக்கையிலும் அதன் உறைவிடங்களை மேம்படுத்துவதிலும் தமிழகம், இந்தியாவின் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள சுமார் 24,000 யானைகளில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4015 யானைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 100% நிதி உதவியினை மத்திய அரசிடமிருந்து பெறப்படுகிறது. இத்திட்டத்தில் யானைகளின் பாதுகாப்பு, அவைகளின் புகலிடங்களை மேம்பாடு செய்தல், தீ தடுப்புப் பணிகள், தண்ணீர் வசதி செய்தல், யானைகளால் ஏற்படும் பொருள் மற்றும் உயிர்ச் சேதங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டும்.</p> <h3>சாம்பல் நிற அணில்கள் சரணாலய மேம்பாடு</h3> <p style="text-align: justify;">சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு அணில்கள் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்பட்டது. இச்சரணாலயம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரியார் புலிகள் காப்பகத்தின் தொடர்ச்சியாகவும், மேகமலை காப்புக்காடு வடமேற்கிலுள்ள பகுதியாகவும் அமைந்துள்ளது. இச்சரணாலயத்தின் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும் மற்றுமுள்ள பகுதி மதுரை மாவட்டத்திலும் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல்பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளன. இச்சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 48,637.51 எக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தனித்தன்மை மற்றும் அரியவகை சாம்பல் நிற அணில் இனத்தைச் சார்ந்த சாம்பல் நிற அணில்களின் கடைசி வாழ்விடமாகத் திகழ்வதால் இந்த அணில்களின் பெயரிலேயே இச்சரணாலயம் விளங்கி வருகிறது. இச்சரணாலயம் அரிய வகை அணில்களைத் தவிர யானைகள், காட்டு எருமைகள், நீலகிரி வரையாடு, மான் வகைகள் ஆகியவற்றுக்கு வாழ்விடமாகவும் திகழ்கிறது.</p> <h3>அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா</h3> <p style="text-align: justify;">சென்னைக்கு அருகே வண்டலுாரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் 51 வகை பாலூட்டி இனங்கள், 66 வகை பறவையினங்கள் மற்றும் 30 வகை ஊர்வனயினங்கள் ஆக மொத்தம் 147 வன உயிரினங்கள் அடங்கிய 1369 விலங்குகள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வருகை தரும் 15 இலட்சம் பார்வையாளர்களை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மகிழ்வித்து வருகின்றது.</p> <h3 style="text-align: justify;">ஈர நிலப்பகுதி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு</h3> <p style="text-align: justify;">ஈரநிலப்பகுதிகளானது, வெள்ளப்பெருக்கு கடலோர அரிமானம் போன்றவற்றை தடுத்தும், கடல் அலைச் சீற்றம் மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கத்தை குறைத்தும், மழைநீரை தேக்கிவைத்தும், நிலத்தடி நீர் ஆதாரங்களைப் புதுப்பித்தும், நீர்வாழ் பறவைகளுக்கு வாழ்வாதாரத்தை அளித்தும், பாலூட்டிகளுக்கு உணவு உறைவிடங்கள் அளித்தும், பலவித மாசுக்களை அகற்ற உதவும் இயற்கைத் தேக்கமாகவும் திகழ்ந்து இலட்சக்கணக்கான மக்களுக்கு பலவித சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வழங்கிவருகின்றன. இந்தியாவில் 94 ஈரநிலப்பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு ஈரநிலப்பகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அவைகள் கோடியக்கரை, கழுவேலி, பள்ளிக்கரணை மற்றும் முத்துப்பேட்டை ஈரநிலப்பகுதிகளாகும். ஈரநிலப்பகுதிகளில் வாழும் பிராணிகளுக்கு இயற்கையான வாழ்விடத்தை அளிக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. வன உயிரின பாதுகாப்பு மற்றும் ஈரநிலப்பகுதிகளின் அருகில் சுற்றுச் சூழல் மேம்பாடு, வன உயிரின் மேம்பாடு, விழிப்புணர்வு, இயற்கை கல்வி ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <p style="text-align: justify;">பள்ளிக்கரணை சென்னைக்கு அருகாமையிலுள்ள ஓர் தனித்தன்மை வாய்ந்த நன்னீர் ஈர நிலமாகும். எண்ணற்ற நீர் வாழ் பறவையினங்களுக்கு முக்கிய உறைவிடமாக அமைந்துள்ளது. சென்னையின் அருகாமையில் உள்ள இத்தனித்தன்மை வாய்ந்த பகுதி ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் அபாயத்தில் உள்ளது.</p> <h3>மனித வன உயிரின மோதலைத் தவிர்த்தல் மற்றும் நிவாரணம் வழங்குதல்</h3> <p style="text-align: justify;">மக்கள் தொகை அதிகரிப்பாலும் தொழிற்சாலை வளர்ச்சியாலும் வனவிலங்குகளுக்கான உறைவிடங்கள் கடந்த நூற்றாண்டில் குறைந்த காரணத்தினால் அவை காட்டை விட்டு மனிதர்களின் குடியிருப்பை நோக்கி வரத்தொடங்கியுள்ளன. இதனை தடுப்பதற்கு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் சூரிய மின்வேலி அமைத்தும், வனப்பகுதியில் வன உயிரினங்களுக்கு தேவையான நீராதார வசதிகளை ஏற்படுத்தியும், உயிரினங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும், பயிர்சேதம் மற்றும் உடைமைகள் சேதம் போன்ற பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உரிய காலத்தில் நிவாரண நிதி வழங்கியும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.</p> <h3>பழங்குடியினர் மேம்பாடு</h3> <p style="text-align: justify;">வனங்களின் நலன் காப்பதை தலையாய கடமையாகக் கொண்டுள்ள வனத்துறை, அந்த வனங்களில் வாழும் பழங்குடியின மற்றும் இதர மக்களின் மேலான்மையினையும் அதன் முதன்மையான குறிக்கோள்களாக நிர்ணயிக்க வேண்டியுள்ளது.</p> <p style="text-align: justify;">வனத்துறை, தமிழகத்தில் பழங்குடியினருக்காக 2 மேல்நிலைப்பள்ளி, 1 உயர்நிலைப்பள்ளி, 8 நடுநிலைப்பள்ளி, 8 ஆரம்பப்பள்ளி, 1 நடுநிலை இருப்பிடப்பள்ளி ஆக மொத்தம் 20 பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் சுமார் 5000 மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு குடி நீர் வசதி, ஆய்வக உபகரணங்கள், பெண்களுக்கான தனி கழிவறை வசதி, விளையாட்டு உபகரணங்கள், வகுப்பறை அறைகலன்கள், கற்பிக்க உதவும் உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>பழங்குடியினர் மற்றும் இதர மரபு வழி வன வாழ்மக்கள் (வன உரிமைகள்) சட்டம் 2006</strong></p> <p style="text-align: justify;">பன்னெடுங்காலமாக வனப்பகுதியில் தங்களின் உரிமைகள் பதிவு செய்யப்படாத நிலையில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் மற்றும் 75 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் இதர மரபுவழி வனவாழ் மக்கள் வாழ்ந்து வரும் வன நிலங்கள் மீது அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கவும் மற்றும் வனங்களில் தொடர்ந்து வாழ்ந்து வருவதால் அவர்கள் வாழ்வாதாரத்திற்கான உரிமைகளை பாதுகாக்கவும், இச்சட்டம் 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பழங்குடியினர் நலன் கருதி இயற்றப்பட்டுள்ள இச்சட்டம் தொடர்பான செயலாக்க பணிகள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்து முடிக்க வனத்துறை அனைத்து வகை ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது.</p> <h3>நீர் பிடிப்பு பகுதி மேலாண்மை</h3> <p style="text-align: justify;">மண் நீர், தாவரம் போன்ற இயற்கைவள ஆதாரங்களை பாதுகாக்க மனிதவளத்தை உரிய முறையில் பயன்படுத்தி, நீர்பிடிப்புப் பகுதியில் வாழும் மக்களது மேன்மையை உறுதி செய்வதும் அதே நோக்கத்தில் நல்ல பலன்களைத் தொடர்ச்சியாக கிடைக்க உறுதி செய்யும் வகையில் நல்ல பல திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்துவதும் நீர்பிடிப்புப் பகுதி மேலாண்மையின் குறிக்கோளாகும். இந்த கொள்கையின் அடிப்படையில் வனப்பகுதியிலும் அதனை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளிலும் மேலாண்மை பணிகள் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம், மக்களின் பேராதரவினையும் பங்கேற்பினையும் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நீர்வள ஆதாரத்தை பெருக்கி நிலத்தடி நீரை உயரச் செய்ய தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டம் நிலை (1ன் கீழ் 817.53 மில்லியன் கன அடிக்கு மேலான கொள்ளளவு கொண்ட 23,454 தடுப்பணைகள் மற்றும் 2201 கசிவு நீர்க்குட்டைகளும், இத் திட்டத்தின் நிலை (2ன் கீழ் 801மில்லியன் கன அடிக்கு மேலான கொள்ளளவு கொண்ட 4152தடுப்பணைகள் மற்றும் 1177 கசிவு நீர்க்குட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக இதுவரை தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 27,606 தடுப்பணைகளும், 3378 கசிவு நீர் குட்டைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்புகளில் 1619 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க இயலும். இத்தகைய பயன்மிக்க நீர்பிடிப்பு பகுதிகளின் மேலாண்மை நடவடிக்கைகள் நடப்பு 2009-10 ஆண்டிலும் செயல்படுத்தப்படும். சுமார் 450 தடுப்பணைகளும், 150 கசிவு நீர்க்குட்டைகளும் கட்டப்படும்.</p> <h3>ஒருங்கிணைந்த வனபாதுகாப்புத் திட்டம்</h3> <p style="text-align: justify;">வனங்களில் நில ஆக்கிரமிப்புகளை தடுக்க வன எல்லைகளை நிர்ணயித்து, நிலையான எல்லைத் கற்துாண்கள் நடுதல், வனத்தீத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், சாலை மேம்பாடு, சிறப்பான தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்தி வன வளத்தினை காப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தீவிர வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழகத்தின் வனப்பரப்பு மற்றும் அவற்றின் அடர்த்தி அதிகரித்ததுடன் பல்லுயிரின பரவலும் மேம்பாடு அடைந்துள்ளது. இத்திட்டத்திற்கென 2008-09 ஆம் ஆண்டில், ரூ.3.31 கோடி செலவு செய்யப்பட்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லைக்கற்துாண்கள் வனநிலங்களில் ஆக்கிரமிப்புகளை தவிர்க்கும் பொருட்டு வன எலலைகளை நிர்ணயத்து 1,38,716 எல்லை துாண்கள் நடுவதற்கு தேவை ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது வரை ரூ.2.56 கோடி செலவில் 31998 எல்லைக்கற் துாண்கள் நடப்பட்டுள்ளன.</p> <h3>வன ஆராய்ச்சி</h3> <p style="text-align: justify;">தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல், விதை உயிரியல், மருத்துவச் செடிகள் பாதுகாப்பு, தடிமரம் அல்லாத வனப்பொருட்கள் மற்றும் அறுவடைக்குப்பின் நேர்த்தி செய்யும் தொழில்நுட்பம் ஆகிய வனப்பணிகளில் புதிய பரிமாணத்தை வன ஆராய்ச்சி வழங்கியுள்ளது. வனப்பாதுகாப்பினை அதிகரித்தல், உற்பத்தித் திறனைப் பெருக்கி மக்களின் பயன்பாட்டிற்காக மேலும் பல பொருட்களையும் சேவைகளையும் பரிசோதனைகளின் மூலம் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பரிசோதனைகள் சிறந்த தாவர வகைகளை கண்டறிவதற்கும், பல்வேறு விதமான தட்பவெப்பநிலை மற்றும் மண்நிலைக்கேற்ப சிறந்த மற்றும் உகந்த மறு உற்பத்தி தொழல்நுட்பங்களை கண்டறிவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொளப்பாக்கம் மாநில வனவியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பிற ஆராய்ச்சி மையங்கள் தனியார் நிலங்களில் மரங்கள் வளர்க்கப் பல்வேறு புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. 2008-09ஆம் ஆண்டில் ஆராய்ச்சி பணிகளுக்கென ரூ.2.05 கோடி செலவில் நடைமுறைபடுத்தப்பட்டன. 2009-10ஆம் ஆண்டில் இதற்கென ரூ.2.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனங்களுக்கு வெளியே காணப்படும் தடிமரங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் வனவியல் ஆராய்ச்சிகளை மீண்டும் துவக்குதல் போன்றவைகளை ஆராய்ச்சி திட்டங்களின் முயற்சிகளாகும். வனவியலின் மற்றும் பண்னைத் தோட்டங்களின் மேன்மைக்காக, வன ஆராய்ச்சி பிரிவு மற்றும் வனவிரிவாக்க மையங்கள் இணைந்து செயல்பட்டதன் விளைவாக ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புக்களைச் செயல்படுத்துதல் வனம் சார்ந்த தகவல்களைப் பரப்புதல், தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய செயல்கள் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.</p> <h3>வனமேலாண்மையை முனைப்புடன் செயல்படுத்துதல்</h3> <p style="text-align: justify;">ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒருங்கிணைந்த வனப்பாதுகாப்புத் திட்டத்தினை மிகப்பரந்த நோக்குடன் உருவாக்குவதற்காக இந்திய அரசு இத்திட்டத்தினை முனைப்புடன் செயல்படும் வன மேலாண்மை திட்டமாக மாற்றி உள்ளது. ஏற்கனவே உள்ள செயலாக்கப்பணிகளுடன் நான்கு புதிய இனங்கள் செயலாக்கப்பணிகள் கீழ்வருமாறு இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">புனிதத் தலங்களில் உள்ள மரங்கள் அடர்ந்த சோலைகளைப் பாதுகாத்துப் பேணுதல், தனித்தன்மை வாய்ந்த காடுகள் மற்றும் சூழல் அமைப்புகளையும் பாதுகாத்தல் மற்றும் மீட்டுதல் வனங்களில் ஆக்கிரமித்துள்ள களைத் தாவரங்களை அகற்றுதல் மற்றும் கட்டுப்படுத்துதல். மூங்கில் காடுகள் பூப்பதால் ஏற்படும் கடும் விளைவுகளை எதிர்கொள்ள தயார்நிலை படுத்துதல் மற்றும் மூங்கில் காடுகளின் மேலாண்மையை சீர்படுத்துதல். 2009-10 ஆம் ஆண்டில் புதிய நான்கு பணிகள் ரூ.4.10 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.</p> <h3>மகளிர் மேம்பாடு</h3> <p style="text-align: justify;">காடுகளை புதுப்பித்தல், கூட்டுவன நிர்வாகம், வனவளத்தினை பங்கிடுதல் வேலைவாய்ப்பு அதிகரித்தல் போன்ற பணிகளில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மகளிரின் பங்கு உறுதுணையாக உள்ளதென்ற உண்மையினை வனத்துறையின் திட்டங்கள் நிரூபித்துள்ளன. கிராம வனக்குழுக்களின் உறுப்பினர்களில் குறைந்தது 50 விழுக்காடு மகளிர் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு செயற்குழுக்களின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மகளிராக இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள 2,167 கிராம் வனக்குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ள 6,61,609 மொத்த உறுப்பினர்களில் 3,31,974 உறுப்பினர்கள் பெண்களாவர். 121 கிராம வனக்குழுக்களை பெண்கள் தலைமையேற்று நடத்துகின்றனர். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைப்பதன் மூலம் கிராமப்புற பெண்களிடையே பொருளாதார எழுச்சிக்கு வழி ஏற்பட்டுள்ளது. சேமிப்பு மற்றும் சிறுகடன் பெற்று வரவு செலவு பணிகளை மேற்கொள்வதன் மூலம் குடும்ப நிதியினை கையாள்வதிலும் பெண்கள் திறமை பெற்றவர்களாக விளங்குகின்றனர். வனத்துறையில் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மகளிரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு அரசு</p> </div>