<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">உலகம் பல்வேறு காரணங்களில் வெப்பமயமாகி வருகிறது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியன, வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. உலக வெப்பமயமாதலை குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், தமிழக அரசு, சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான், முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்.</p> <h3 style="text-align: justify;">மானிய விபரம்</h3> <p style="text-align: justify;">தனி நபர்கள் ஒரு கிலோவாட்டுக்கான சூரிய மேற்கூரையை அமைப்பதற்கு, தமிழக அரசு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற தனிநபர்கள், தங்கள் வீட்டின் மேற்கூரையில், குறைந்த பட்சம் 100 சதுர அடி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.</p> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">மேலும், வீட்டு உபயோகிப்பாளர்கள், நிகர அளவு திட்டத்தின் கீழ் பயன்பாட்டிற்கு பின் மின்கட்டமைப்பில் செலுத்தும் மின்சாரத்திற்குரிய மின் வரவைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர வீட்டு உபயோகிப்பாளர்கள் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிர்ணயித்த விலையில் அதிகபட்சமாக 30 விழுக்காடு மைய அரசின் நிதியுதவியைப் பெறலாம். </span></p> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தின் (teda.in) மூலம் ஆன்லைனில் பெறப்பட்டு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முதல் என்ற அடிப்படையில் (first come first serve basis) ஒப்பளிப்பு அளிக்கப்படும். </span></p> <h3 style="text-align: justify;">நன்மைகள்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் மூலம் பெருமளவு மின்கட்டணம் குறையும் என்பதுடன், வெப்பமயமாதலையும் தவிர்க்க முடியும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை</p> </div>