தெரிந்து கொள்ள வேண்டியவை மின் இணைப்பு பெறுவதற்கு வழங்கப்படும் உரிய படிவங்களில் விண்ணப்பிக்கவும். விண்ணப்ப படிவங்களில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும். மின்னினணப்பு கோரும் இடத்திற்கு சொந்தக்காரர் என்று நிருபிப்பதற்கு உரிய ஆவணங்கள்/பதிவேடுகள் கொடுக்கப்பட வேண்டும். வாடகைதாரராக இருக்கும் பட்சத்தில், அவ்விடத்திற்கு சட்டப்படி பொறுப்பேற்றுள்ளதற்கான சான்று கொடுக்கப்படவேண்டும். மின் கம்பி அமைப்பு பணியினை உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் கொண்டு மட்டுமே செய்யப்பட வேண்டும். இருப்பிடத்திற்கு மின் கம்பி அமைக்கும்போது சொந்தமான மின் கம்பிகள், மின்கம்பி இணைக்கருவிகள் தகுந்த திறன் மற்றும் நல்ல தரமுள்ளவையாக இருத்தல் வேண்டும். நல்ல நிலயிணைப்பு கொண்ட மும்முனை குழல் உறைகளில் மட்டுமே மின் உபகரணங்களை பொருத்த வேண்டும். மின்னிணைப்பு விண்ணப்பங்களை நேரடியாக இளநிலை/உதவி பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தேதியிட்ட ஒப்புதல் பெற வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் அனுப்பலாம். காப்பீட்டுத் தொகை மற்றும் மின்னிணைப்பிற்குரிய கட்டணத் தொகைகளை விண்ணப்பங்கள் ரத்தாவதை தவிர்க்க நிர்ணயித்த தேதிக்குள் செலுத்த வேண்டும். எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும். மின்னிணைப்பு கொடுக்கப்பட்ட உபயோகத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் (எ.க.) வீட்டு மின்னிணைப்பு வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இருப்பிடத்தில் உள்ள வாரியத்தின் மின்னளவி மற்றும் உபகரணங்களைப் பாதுகாக்க வேண்டும். கட்டிடங்கள் கட்டும்போது இந்திய மின்சார விதிகள் 1956ன் படி உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகளிலிருந்து போதிய இடை வெளிவிட்டு கட்ட வேண்டும். மொத்த இணைப்புச்சுமை (Connected load ) 4000 வாட் அளவிற்கு மிகும்போது ஒற்றை தறுவாயிலிருந்து (Single Phase) முத்தறுவாய் அமைப்பிற்கு (3 Phase) மாற்றப்பட வேண்டும். மின்விபத்துக்களை தவிர்க்க உரிய பாதுகாப்புகள் எடுக்க வேண்டும். பழுதுற்ற மின் பொருத்தங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக மாற்ற வேண்டும். மின்னளவி சார்ந்த கட்டணங்கள் மற்றும் கூடுதல் காப்பீட்டுத் தொகை போன்றவைகளை உடனடியாக கட்டவும். நுகர்வோர் மின் அளவி வெள்ளை அட்டையை மின் அளவி பொருத்தியுள்ள இடத்தில் வைக்கவும். அது கணக்கீடு எடுக்க வரும் கணக்காளர் பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். கணக்காளர் பயனீட்டு அளவு கணக்கு எடுக்க வரும் போது நுகர்வோர் மின் அளவி வெள்ளை அட்டையில் செய்யும் பதிவே கேட்புக்கு நிகராகும். தனியாக பட்டியல் ஏதும் அனுப்பப்படமாட்டாது. மின் கட்டணத்தை மாத முதல் தேதிகளில் கட்டவும். இவ்வாறு கட்டினால் இறுதி நேர நெரிசலை தவிர்க்கலாம். மின்னளவி அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ள தகவல்களை படிக்கவும். நுகர்வோர் மின் அளவி வெள்ளை அட்டை மற்றும் பணம் செலுத்திய ரசீதை தங்களுடைய மின் இணைப்பிற்குரியதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். தங்களின் மின் இணைப்பு மின்கட்டணம் செலுத்த தவறியதற்காக மின் துண்டிப்பு செய்யப்பட்டால் மின் கட்டணத்துடன் துண்டித்து மீள இணைப்பதற்கான செலவினங்களையும் சேர்த்து செலுத்தி விட்டு பிரிவு அலுவலர்/கணக்கீட்டாய்வாளரிடம் தெரிவித்து மறு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். மின் அளவி பழுது அல்லது ஓடவில்லை என்பது கண்டறியப்பட்டால் புது மின் அளவி மாற்றித்தர பிரிவு அலுவலரிடம் எழுத்து மூலம் தகவல் தெரிவிக்கவும். மின் பாதை. மின் அளவி, மின் கட்டை அல்லது பிற மின் சாதனங்களை நிலைகுலைப்பு செய்யக்கூடாது. உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு அடியில் தகுந்த இடைவெளியில்லாமல் எந்த கட்டிடங்களும் கட்டக் கூடாது. மின் அளவி அல்லது மின் அளவி பொருத்தும் பலகை உரிய வாரிய ஒப்பளிப்பின்றி இடமாற்றம் செய்யக்கூடாது. மின் திருட்டை தவிர்க்கவும். மாடிப்படிக்கு அடியிலோ அல்லது கட்டிடத்திற்கு வெளியேயோ மின் அளவி பொருந்துவதற்கு இட ஓதுக்கீடு செய்வதை தவிர்க்கவும். உங்கள் வீட்டில் குடியிருப்போரிடம், வாரியம் அறிவித்த மின் கட்டணத்திற்கு அதிகமான தொகையினை வசூலிக்கக் கூடாது. கணக்காளர் மின் பயனீட்டு அளவு கணக்கெடுக்க வரும் போது அவரிடம் மின் கட்டண தொகையினை கொடுக்க வேண்டாம். உயர் அழுத்த மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம் - 4-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும். கேள்வி பதில் 1. ஒருமுனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற நான் செய்ய வேண்டியது என்ன? தங்களிடம் உள்ள அனைத்து "இணைக்கப்பட்ட மின் திறன்களை" மும்முனை இணைப்புகளுக்கு சமமாக பகிர்தளிக்கும் வகையில் (அதன் கூட்டு மின்திறன் 4KW மற்றும் அதற்கும் மேலாக இருக்கும்படி) வயரிங்கை தக்கவாறு செய்து கொள்ள வேண்டும், பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும். 2. மின்தடை நேரத்தில் நான் யாரிடம் புகார் செய்யவேண்டும்? தங்களுடைய புகாரை தங்கள் பகுதியில் உள்ள மின்தடை நீக்கும்மையத்திலோ (FOC) (அ) தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் இடத்தில் பதிவு செய்யலாம். அல்லது கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும்மையம் தொலைபேசி எண் 155333 மூலமாகவும் பதிவு செய்யலாம். 3. மின் இணைப்புக்குரிய பெயர் மாற்றம் செய்ய வேண்டிய முறைகள் என்ன? மாற்றப்படும் உரிமத்திற்கு உரிய தேவையான ஆவணங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி எடுத்துக் கொண்டு தங்களின் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலர் அவர்களை மற்ற விவரங்களுக்கு அணுகவும். 4. மின் அளவி (Meter) பதிவில் முரண்பாடு இருப்பின் நான் செய்ய வேண்டியது என்ன? தாங்கள் சந்தேகிக்கும் வகையில் மீட்டர் பதிவில் அதிகப்டியாகவோ (அ) குறைந்த படியாகவோ நிகழ்வு ஏற்பட்டால், தங்கள் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களிடம் எழுத்து மூலம் முறையிடவும். மேலும் மற்ற விவரங்களுக்கு மேற்சொன்ன அலுவலரை அணுகவும்,அதுபோல்,தங்கள் மீட்டரில் எந்த நுகர்தலின் பதிவு நிகழவில்லையென்றாலும் உடனடியாக அலுவலரிடம் தெரிவிக்கவும். 5. எனது மின் மீட்டர் எரிந்து விட்டால் உடனடியாக நான் என்ன செய்ய வேண்டும்? முதலில் பாதுகாப்பு விதிகளின்படி தீயை அணைத்துவிட்டு தங்கள் பகுதி உட்பட்ட மின் உதவி பொறியாளரிடம் எழுத்து மூலமாக விண்ணப்பம் கொடுத்து மீட்டருக்கு உண்டான பணத்தை செலுத்தி புதிய மின் மீட்டரை பெறலாம். 6. வீதப்பட்டி மாற்றம் செய்ய நான் என்ன செய்யவேண்டும்? தங்கள் பகுதியின் பிரிவு அலுவலரை சந்தித்து வீதப்பட்டி மாற்றம் செய்வதற்கான காரணத்தை விண்ணப்பமாக கொடுத்து, அதற்கு உண்டான பணத்தை செலுத்தி, வீதப்பட்டியல் மாற்றம் செய்யலாம். ஆதாரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்