<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">சூரிய மின்சக்தி</h3> <p style="text-align: justify;">வீடு, அலுவலகம் என அனைத்து வகை கட்டிடங்களிலும் ஏற்கனவே மழைநீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தின் அளவைப் பராமரிப்பதில் மழைநீர் சேகரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பை போல சூரியமின் சக்தியை உற்பத்தி செய்யவும் அரசு ஊக்குவித்து வருகிறது. சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மானியங்களையும் அளித்து வருகிறது.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/Untitled.jpg" /></p> <h3>சூரிய மின்சக்தி</h3> <ul> <li style="text-align: justify;">இந்நிலையில் புதிதாக கட்டப்பட இருக்கும் நான்குமாடி கட்டிடங்களில் சோலார் பேனல்களை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட மாடிகளைக் கொண்ட கட்டிடங்களில் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல் அமைப்பு இருந்தால் மட்டுமே இனிமேல் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி.யின் அனுமதியை பெறமுடியும். சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மொட்டைமாடியின் மூன்றில் ஒரு பங்கு பரப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.</li> <li style="text-align: justify;">அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பேனல்கள் அமைப்பதற்கான செலவு கட்டுமான செலவில் சேர்த்துக் கொள்ளப்படும். தொடர்ந்து அதைப் பராமரிப்பதற்கான செலவு மாதாந்திர பராமரிப்பு செலவில் சேர்க்கப்படும். சோலார் பேனல்கள் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும்போது அவற்றின் தயாரிப்பும் அதிகரிக்கும். படிப்படியாக விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.</li> </ul> <h3 style="text-align: justify;">மின் உற்பத்தி</h3> <ul> <li style="text-align: justify;">சோலார் பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறைக்கு ‘போட்டோ வோல்டாய்க்’ என்று பெயர். இம்முறையில் ஒளி மின் விளைவை (போட்டோ எலக்ட்ரிக்) பயன்படுத்தி சூரிய ஒளி மின் சக்தியாக மாற்றப்படுகிறது. இதற்காக சோலார் பேனல்களில் செலினியம் பூசப்படுகிறது.</li> <li style="text-align: justify;">எனவே அதன்மீது சூரிய ஒளி விழும்போது, மின்னணுக்கள் தூண்டப்பட்டு, மின்சாரமாகிறது. நேர்மின்சக்தியாக இருக்கும் அம்மின்சாரத்தை இன்வெர்ட்டர்களைக் கொண்டு ஏ.சி. மின்சாரமாக மாற்றி வீடுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.</li> </ul> <h3 style="text-align: justify;">கூடுதல் மின்சாரம்</h3> <ul> <li style="text-align: justify;">பகலில் கிடைக்கும் மின்சாரத்தை பாட்டரிகளில் சேமித்து, அதை இரவு நேரங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைக்குத் தகுந்தபடி பாட்டரிகளைக் கூடுதலாகவும் இணைத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 10 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு, 10 யூனிட் சோலார் செல் பேனலோடு 5 அல்லது 10 ஆம்பியர் மின்சார பாட்டரி தேவை.</li> <li style="text-align: justify;">இம்முறையில் குறைந்த அளவில்தான் மின்சாரம் தயாரிக்க முடியும். அதை வீட்டின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் சூரிய ஒளியிலிருந்து இன்னும் நம்மால் அதிகளவில் மின்சக்தியைப் பெற முடியும். நீர், காற்று ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சக்தியைக் காட்டிலும் கூடுதலாகவும் பெறமுடியும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>தொடர்ந்து பயன்படுத்தலாம்</strong></p> <ul> <li style="text-align: justify;">சூரிய மின்சக்தி அள்ள, அள்ளக் குறையாத ஆற்றல் வளமாகும். பூமி உள்ளவரை, வானம் உள்ளவரை நம்மால் சூரிய மின்சக்தியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.</li> <li style="text-align: justify;">இருந்தாலும் சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஆற்றலில் நாம் பயன்படுத்துவது கொஞ்சம்தான். அதேவேளையில் மாற்று முறைகளைப் பயன்படுத்தி மின்சக்தி தயாரிப்பது காலத்தின் கட்டாயம்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தினத்தந்தி நாளிதழ்</p> </div>