கார்பன் வணிகம் பல்வேறு நாடுகளும் தங்களிடமுள்ள கார்பன்-டை ஆக்சைடு அல்லது பசுமை இல்ல வாயுக்களை சுற்றுச்சூழலில் விடுவதற்கான உரிமையை விற்பனை செய்தல் மற்றும் வாங்குதல் சம்பந்தப்பட்டதுதான் கார்பன் வணிகம் ஆகும். ஜப்பானில் கியோட்டோ ஒப்பந்தத்தில் 180 நாடுகள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கார்பன் வணிகம் தொடங்கியது. உலகில் உள்ள தொழில்மயமான 38 நாடுகளும் அவை வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை குறைக்க வேண்டும் என்று கியோட்டோ ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு அனைவரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. அதிவேக வளர்ச்சியும் தொழில் மயமாக்கலும் இந்தப் பிரச்சினையை அதிகரிக்கத் தான் செய்திருக்கிறது. நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருட்களில் கார்பன் அதிக அளவில் உள்ளது. இந்த எரிபொருட்கள் எரிக்கப்படும் போது கார்பன்-டை-ஆக்சைடு அதிக அளவில் வெளியாகிறது. கார்பன் வணிகம் என்பதும் மற்ற சந்தை வணிகங்களைப் போன்றது தான். கார்பனுக்கு பொருளாதார மதிப்பு தரப்பட்டிருப்பதால் அதை பொதுமக்களும் நிறுவனங்கள் அல்லது நாடுகளும் வணிகம் செய்கின்றன. ஒரு நிறுவனம் கார்பனை வாங்கும் போது அதை எரிப்பதற்கான உரிமையைப் பெறுகிறது. அதே போல், கார்பன் மதிப்பை ஒரு நாடு விற்பனை செய்யும் போது, அதை எரிப்பதற்கான உரிமையை விட்டுக் கொடுக்கிறது. கார்பனின் மதிப்பு என்பது அதை வைத்துள்ள நாடு அதை இருப்பு வைப்பதற்கான திறன் மற்றும் அதை வளிமண்டலத்தில் விடாமல் தடுத்து வைப்பதற்கான திறனின் அடிப்படையில் அமைகிறது. ஆதாரம்: திட்டம் மாத இதழ்