பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள் சமையல் அறை சாதனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. அதிலும் நிறைய வீடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. அதனை அவ்வப்போது கழுவி சுத்தமாக துடைத்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கி விடும். அதனை போக்குவதற்கும் சிரமப்பட வேண்டியிருக்கும். பிளாஸ்டிக் பொருட்களை கழுவும் விதத்திலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. தண்ணீரையும், வாசிங் பவுடரையும் மட்டும் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதாது. முதலில் குளிர்ந்த நீரிலும் அதன் பிறகு வெதுவெதுப்பான நீரிலும் சில நிமிடங்கள் வைத்திருந்து அதன்பிறகு சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை கழுவி துர்நாற்றத்தை போக்க செய்யலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம். சமையல் அறை சாதனங்களை தூய்மைப்படுத்துவதற்கு பயன்படும் எலுமிச்சை சாறை கொண்டும் பிளாஸ்டிக் டப்பாக்களை சுத்தம் செய்யலாம். அதன் சாறை கொண்டு நன்கு அழுத்தி தேய்த்து கழுவினால் அழுக்கும், துர்நாற்றமும் நீங்கி விடும். பேக்கிங் சோடாவை கொண்டும் துர்நாற்றத்தை போக்க செய்யலாம். அதனை தண்ணீரில் குழைத்து பிளாஸ்டிக் பொருட்களின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். காபி தூளை கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை நன்கு கழுவி சுத்தம் செய்யலாம். அதற்கும் துர்நாற்றத்தை போக்கும் தன்மை இருக்கிறது. சோப்பை கொண்டு கழுவியும் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யலாம். அதன் பின்னர் பேப்பரை கொண்டு துடைத்து சுடுநீரிலும் கழுவி எடுக்கலாம். அப்படி செய்தால் துர்நாற்றம் வெளியேறிவிடும். ஆதாரம்: தினத்தந்தி