வனஉயிரினங்கள் - அழகுக்கு அழகூட்டக் கூடியவை காட்டில் வாழும் விலங்கினங்கள் மட்டுமே வன உயிரினங்கள் என கருதப்பட்டு வந்த நிலைமாறி தற்போது நீர், நிலம் போன்ற வெவ்வேறுபட்ட சூழல்களில் வாழக்கூடிய அனைத்து தாவர மற்றும் விலங்கினங்களுமே வனஉயிரினங்கள் என அழைக்கப்படுகின்றன. காட்டில் வாழும் விலங்குகளை ஆதிமனிதன் உணவுக்காக வேட்டையாடினான். இதனால் தொன்றுதொட்டே வனவிலங்குகளை எதிரியாகவே கருதிவந்த மனித இனம் நாகரீக வளர்ச்சியின் காரணமாக, படிப்படியாக சூழல் சமநிலையில் மற்ற உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. மனித இனம் பூமியில் நிலைத்து வாழ்வதற்கு மற்ற அனைத்து உயிரினங்களின் பங்கும் மிக முக்கியம் என்ற தெளிவே இம்முயற்சியின் தொடக்கமாகும். வனஉயிரினங்கள் பல்வேறு வகைகளில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதகுல முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி வருகின்றன. அவற்றில் சில பின்வருமாறு: சமூகப் பொருளாதாரப் பயன்கள்: நேரிடையாகக் கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய உபபொருட்கள் என வனஉயிரினங்களிலிருந்து பெறப்படும் பயன்கள் பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன. மரம், விறகு, பிசின், மெழுகு மற்றும் பல மருத்துவப் பொருட்களை அளிக்கின்றன. கடலோரப் பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆதாரமாக கடல்வாழ் உயிரினங்கள் திகழ்கின்றன. காகிதம் மற்றும் மருந்து தொழிற்சாலைகள், கட்டிடத் தொழில் போன்றவற்றிற்குத் தேவையான மூலப் பொருட்கள் போன்ற மறைமுகப் பயன்கள் வனஉயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன. இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினர் காடுகள் சதுப்பு நிலம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வாழ்வியல் ஆதாரங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் இடையிடையேயான இணைப்பில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் சுகாதாரம்: அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி மனிதன் மற்றும் விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு 8000-க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கின வகைகள் உதவுகின்றன. விஞ்ஞானப் பயன்கள்: மனிதனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை வன உயிரினங்களை சார்ந்தே அமைந்துளளன. தாவர மற்றம் விலங்கினங்களின் பல்வேறு பயன்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் உயிர் தொழில் நுட்பத்துறை மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. வனஉயிரின ஆராய்ச்சிகளின் மூலம் அவற்றின் பழக்கவழக்கங்கள், தகவமைப்புக்கள், சூழ்நிலையில் அவற்றின் பங்கு போன்ற புதிய அரிய உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மனிதனின் வாழ்க்கைத்தர மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றன. வன எழில் வன உயிரினங்களின் வகைகள் அழகுக்கு அழகூட்டக் கூடியவை. மனிதர்கள் அவ்வழகை செயற்கையில் காண பற்பல பூங்காக்கள், சரணாலயங்கள், தோட்டங்கள் மற்றும் மீன் பண்ணை போன்றவற்றை அமைத்து வருகின்றனர். தற்போது பெருகிவரும் சூழல் சுற்றுலா, வன உயிர்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் எழிலமைப்பை வலியுறுத்துகிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டோடு வன உயிரினங்கள் ஒன்றி காணப்படுகின்றன. தாவரங்கள் மற்றும் விலங்குகளை வழிபடுதல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சூழலியியல் பயன்பாடுகள் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்கள் முதற்கொண்டு பெரிய மரங்கள் நிலம், நீர், காற்று, உயிர்சத்துககள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அமைப்பே சூழலமைப்பாகும். சூழலமைப்பின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகும். பலதரப்பட்ட சூழலமைப்புகளிலிருந்து பெறப்படும் வெவ்வேறு வகையான பயன்கள் குறித்த மதிப்பீடு தற்போது கணக்கிடப்பட்டு வருகின்றது. சூழலமைப்புகளிலிருந்து மனித குலம் பெறும் நேரடி பயன்கள் எண்ணிலடங்காதவை. இவை சூழலமைப்பின் சேவைகள் என அழைக்கப்படுகின்றன. கண்ணுக்கு புலப்படாத ஆனால் மிகவும் முக்கியமான அடிப்படைத் சேவைகள் சூழலமைப்பினால் அளிக்கப்படுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு. வளிமண்டல வாயுக்களை சமச்சீர் நிலையில் வைத்திருத்தல் மண் அமைப்பு மற்றும் பாதுகாப்பு வெவ்வேறு உணவு நிலைகளுக்கு சத்துகள் பரிமாற்றம் செய்தல் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் தட்ப வெப்பநிலையை ஒழுங்கு செய்தல் நீர் சுழற்சியை சீர்செய்தல் நீர் மற்றும் காற்றின் தன்மையை மேம்படுத்துதல் இயற்கை பேரழிவுகளிலிருந்து பாதுகாத்தல் உணவு சங்கிலி மூலமாக ஆற்றல் பரிமாற்றம் சிற்றினங்களுக்கிடையே மரபு பரிமாற்றம், ஜனத்தொகை பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் இயற்கையை சமநிலைப்படுத்துகிறது ஆதாரம்: சி. பி. ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்