முன்னுரை ஒரு சிலருக்கு தேக்கு, சவுக்கு போன்ற மரங்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தால் கூட, அதற்கான பராமரிப்பு மற்றும் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அவற்றை வளர்க்க யோசிப்பார்கள். ஆனால் அதிக தண்ணீர் வசதி தேவைப்படாத வறட்சியில் மட்டுமே நன்கு வளரக்கூடிய மரத்தைப் பற்றிய விவரங்களை நாம் அறிந்திருக்க மாட்டோம். குறிப்பாக சொன்னால் இந்த மரத்தை நீங்கள் இப்போது நட்டு வளர்க்க ஆரம்பித்தால், அது உங்களுடைய எதிர்காலத்திற்கு மட்டுமில்லாமல் உங்கள் அடுத்த தலைமுறைக்கும் மிகப்பெரிய வருமானத்தை வழங்கும். செம்மரம் - வளர்க்கும் முறைகள் செம்மரங்களை வளர்க்கும்போது, கிராம நிர்வாக அலுவலரிடம்சிட்டா அடங்கலில் செம்மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று பதிவு செய்யவேண்டும். செம்மரக்கட்டைகளை விற்பனை செய்யும் போது, மாவட்ட வன அதிகாரியிடம் (District forest officer) இந்த மரத்தை விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டும். செம்மரம் நடவு செய்வதற்கு ஏற்ற மண் பொதுவாக செம்மரம் செம்புறைக்கல்(Laterite Soil) என்று சொல்லும் மண்ணில் வளர்ந்தால் மட்டுமே சிவப்பு நிறத்துடன் கூடிய செம்மரம் கிடைக்கும். இந்த மரத்தை செம்மண், கல் கலந்த மண், செம்மண் கலந்த மண்ணில் வளர்க்கபடும் போது மட்டுமே நல்ல திடமான கட்டை கிடைக்கும். விவசாயிகள் இந்த மரத்தை நடவு செய்வதற்கு முன்பு மண் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. நடவு செய்யும் முறை முதல் பருவ மழைக்கு முன்பாக சுமார் 3 அடி குழி எடுத்துக் கொண்டு, இரண்டாவது மழைக்கு முன்பாக நடவு செய்திட வேண்டும். அதிக நீர் தேவை இருக்காது. மண்ணில் ஈரப்பதம் இருக்கும் அளவு பார்த்துக் கொண்டால் போதுமானது. இரண்டு மாதம் வரை பராமரிப்பு செய்ய வேண்டும். 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் ஒரு நாற்று நடவு செய்யலாம். சுமார் 800 நாற்றுகள் 1 ஏக்கருக்கு தேவைப்படும். நாற்றுகளை நட்டவுடன், காடுகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். இதனை நிலப்பரப்பு முழுவதும் வளர்க்க விரும்பாதவர்கள், வரப்பு பயிராகவும் வளர்க்கலாம். பராமரிப்பு இதற்கு பெரிய பராமரிப்பு தேவைப்படாது. நாற்று நட்டு ஒரு வருடம் வரை மட்டும் மண் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும். களை இருக்காது, பூச்சி தாக்குதல் இருக்காது. 15 - 25 வருடம் வரை இந்த மரத்தை வளர்க்கும் போது, மட்டுமே இதில் மருத்துவ குணம் உருவாகும். அதன் பின் இந்த மரம் ஒன்று 100 கிலோ எடையில் இருக்கும். 1 கிலோ ரூ.1,000 வரை விலை போகும் போது ஒருமரத்திற்கு மட்டுமே ரூ.1,00,000 வரை லாபம் பெறலாம்.