<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40 சதம் காடாக இருந்த அளவு தற்போது 23 சதமாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் 20 சதமும், மலைப்பகுதிகளில் 60 சதமும் காடுகள் உயரவேண்டுமென 1952ல் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வழிமுறைகளும் வரையறுக்கப்பட்டன. ஆனால் 55 ஆண்டுகளுக்குப் பின்னரும் காடுகளின் பங்கு 22 சதம்தான் உள்ளது. காடுகளை அழிப்பதால் கரியமில வாயு வளிமண்டலத்தில் அதிக அளவு சேர்கிறது. இது பல்வேறு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது.</p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">காடுகளை அழிப்பதால் ஏற்படும்</span> விளைவுகள்</h3> <ul style="text-align: justify;"> <li>அதிக மழை அல்லது வறட்சியால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும்.</li> <li>குளிர் பிரதேசங்களில் பயிர்களின் வளர்ச்சிப் பருவம் அதிகரிக்கின்றது.</li> <li>பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</li> <li>அதிக வெப்பம் காரணமாக மண்ணில் அங்ககப் பொருட்களின் சிதைவு துரிதப்பட்டு இதன் அளவு குறைய வாய்ப்புள்ளது.</li> <li>கரியமில வாயு அதிகரிப்பதால் உற்பத்தித் திறன் அதிகரித்து பயிர்கள் அதிக அளவு சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் மண்வளம் குறையலாம்.</li> <li>பூமி வெப்பமடைவதால் கொசுவின் வாழ்நாள் மற்றும் இனவிருத்தியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மலேரியா பரவுகின்றது.</li> <li>பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு உகந்த நிலை ஏற்படுவதால் விளைபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன.</li> <li>வளிமண்டலத்தின் ஓசோன் படலம் சிதைவதால் தோல் புற்றுநோய்கள் அதிகம் ஏற்படும்.</li> <li>அதிக வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகும் நீரினால் கடல்மட்டம் அதிகரிக்கிறது. இது தொடர்ந்தால் மாலத்தீவும், வங்கதேசமும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கடலோரப் பகுதிகளில் உப்புநீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக மாறும்.</li> </ul> <h3 style="text-align: justify;">விளைவுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்</h3> <ul style="text-align: justify;"> <li>பெட்ரோலிய எரிபொருட்கள் உபயோகிப்பதன் அளவைக் குறைக்க வேண்டும்.</li> <li>இயற்கைச் சக்தியைத் திறம்பட உபயோகித்துக் கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கலாம்.</li> <li>காடுகள் அழிவதை முழுவதுமாகத் தடுக்க வேண்டும்.</li> <li>இயற்கை உரங்களைப் பயன்படுத்தவும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்கவும், நிலக்கரி எரித்தலைத் தடை செய்யவும் குறைந்த அளவு முன்னேற்றமடைந்த நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும்.</li> <li>வளர்ச்சியடைந்த நாடுகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத இரசாயனப் பொருட்களைப் பற்றிய தொழில்நுட்பங்களைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">கரியமில வாயுவைக் குறைப்பதில மரங்களின் பங்கு</h3> <ul> <li style="text-align: justify;">மனிதனும் பிற உயிரினங்களும் வெளியேற்றும் நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை உறிஞ்சி, ஆக்ஸிஜனைக் கொடுத்து மனித இனத்தையும் மற்ற உயிர்களையும் காத்து வருபவை மரங்களே. ஒரு சாதாரண அளவுள்ள மரம் தனது ஆயுட்காலத்தில் 32 லட்சம் ரூபாய் பெறுமான சேவையைச் செய்கின்றது.</li> <li style="text-align: justify;">ஒவ்வோர் ஆண்டும் ஒரு மரம் தயாரித்து வெளியிடும் பிராண வாயு பெறுமானம் 5.5 லட்சம் ரூபாயாகும். காற்றைச் சுத்தரிக்கும் பணியை நாம் செய்ய முற்பட்டால் தொகை ரூ.10.5 லட்சமாகும்.</li> <li style="text-align: justify;">மரம் வெட்டப்பட்டால் அங்கு அதே அளவு மண்வளத்தைப் பாதுகாக்க 50 ஆண்டுகளில் செலவாகும் தொகை ரூபாய் 6.4 லட்சமாகும். எனவே மரங்களை வளர்த்துச் சுற்றுச்சூழல் பாதுகாப்பது அவசியமாகின்றது.</li> </ul> <p style="text-align: justify;">எனவே இவ்வளவு நன்மைகளைத் தரும் மரங்களை வளர்ப்பதற்கு விவசாயிகள் தங்கள் நிலம், வரப்புகள், வாய்க்கால் ஓரங்கள், கிணற்று மேடு போன்ற பகுதிகளில் பயன்படுத்தலாம். மணற்பாங்கான நிலங்களிலும், சாகுபடிக்கு உதவாத வறண்ட பகுதிகளிலும், களர் உவர் நிலங்களிலும் மரங்களை வளர்க்கலாம். இதன்மூலம் விவசாயிகள் தங்களது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.</p> <h3 style="text-align: justify;">காடுகள் தரும் பாதுகாப்பு!</h3> <p style="text-align: justify;">பருவமழைகள் பெய்யவும், நிலப்பரப்பில் தட்பவெப்ப நிலையைச் சீராகக் காக்கவும் காடுகள் உதவுகின்றன. காடுகள் மண் அரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வெள்ளச் சேதம் ஏற்படா வண்ணம் கட்டுப்படுத்துகிறது. காட்டிலுள்ள மரங்களின் பரந்த ஆழமான வேர்கள் மண்ணைக் கெட்டியாகப் பிணைத்துக் கொள்வதாலும், காடுகளின் மேற்பரப்பானது மக்கிய இலைகள் போன்றவற்றால் வேகமான நீரை உறிஞ்சக்கூடிய திறன் பெற்றிருப்பதாலும் மண் அரிப்பைக் குறைக்கிறது.</p> <p style="text-align: justify;">மரங்களை பண்ணைகளைச் சுற்றிக் காற்றுத் தடையாகப் பயிரிட்டால் அவை காற்றின் வேகத்தையும், வெப்பத்தையும் தணித்துப் பயிர் செழித்து வளர அவை உதவுகின்றன. காடுகள் பெருகியிருந்தால் மழைக்காலத்தில் வெள்ளத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகமான வண்டல் மண்ணை அடித்துக் கொண்டு வந்து அணை, குளங்களின் கொள்திறன் குறைவது தவிர்க்கப்படுகின்றது. தற்போது நம் நாட்டில் செயற்கை உரத்தின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. காடுகள் பெருமளவில் நிலங்களுக்கு வேண்டிய பசுந்தாள் உரங்களைத் தருகின்றன; கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகின்றன.</p> <h3 style="text-align: justify;">காடுகளின் பயன்கள்</h3> <p style="text-align: justify;">ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது. நம் நாட்டிலுள்ள தார், சஹாரா போன்ற பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவை என்று கருதப்படுகின்றது. காடுகள் பொதுவாக இரண்டுவிதப் பணிகளைச் செய்து வருகின்றன. நமக்குத் தேவையான பல அத்தியாவசியமான பொருட்களைக் கொடுத்து வருகின்றன. நாம் ஆரோக்கியமாக வாழ நமது சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்து வருகின்றன.</p> <h3 style="text-align: justify;">காடுகள் தரும் பொருட்கள்</h3> <p style="text-align: justify;">உபயோகப்படுத்தப்படும் எரிபொருள் சக்தி பலவற்றில் நகர்ப்புறத்தில் 50 சதமும், கிராமப்புறத்தில் 70 சதமும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விறகில் பெரும்பகுதி விறகு காடுகளிலிருந்தே வருகிறது.</p> <p style="text-align: justify;">நம் நாட்டிலுள்ள சுமார் 4 கோடி ஆதிவாசிகளில் பாதிப்பேர் தங்கள் உணவுக்காக காடுகளையே நம்பியுள்ளனர். இலுப்பை போன்ற சுமார் 100 வகை மரங்கள் இவர்களது உணவுத் தேவையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பூர்த்தி செய்து வருகின்றன.</p> <p style="text-align: justify;">நமது நாட்டிலுள்ள கால்நடைகளில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு விலங்குகள் தீவனத்திற்குக் காடுகளையே முழுவதும் நம்பியுள்ளன.</p> <p style="text-align: justify;">காகிதம், ரப்பர், தீக்குச்சி, விளையாட்டுக் கருவிகள், பொம்மைகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருட்களுக்குக் காடுகளையே நம்பியுள்ளன.</p> <h3>தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மரங்கள்</h3> <ul> <li>காகிதம்</li> <li>மூங்கில், தைலமரம், குடைவேல்</li> <li>ரேயான்</li> <li>தைலமரம்</li> <li>பட்டை மரங்கள்</li> <li>வாட்டில் மரம்</li> </ul> <p style="text-align: justify;">மரப்பொம்மைகள், மஞ்சக்கடம்பு, செஞ்சந்தனம், தீக்குச்சி, அயிலை, முள் இலவு, பஞ்சு (இலவம் மரம்), வாசனை எண்ணெய்கள் (சந்தன மரம்), தைல எண்ணெய், சோப்பு தயாரிக்க உதவும் எண்ணெய்கள் (வேம்பு, புங்கம் மற்றும் இலுப்பை), தோல்பதனிட உதவும் டானின், கோந்து, பீடி இலைகள் போன்ற பல உபயோகமான பொருட்களையும் காடுகள் தருகின்றன.</p> <h3 style="text-align: justify;">மரங்களும் அதன் முக்கியத்துவமும்</h3> <ul> <li style="text-align: justify;">அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்</li> <li style="text-align: justify;">ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்</li> <li style="text-align: justify;">நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே</li> <li style="text-align: justify;">பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ</li> <li style="text-align: justify;">இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ</li> <li style="text-align: justify;">வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்</li> <li style="text-align: justify;">புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து</li> <li style="text-align: justify;">புங்கன் – பசுமை விருந்து</li> <li style="text-align: justify;">வில்வம் – சித்தர்களின் கற்பகம்</li> <li>இலந்தை – ஏழைகளின் கனி</li> <li>நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்</li> <li>மாவிலங்கம் – கல்லையும்</li> <li>அத்தி – அதிசய மருந்து</li> <li>தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்</li> <li>பேயத்தி – கருவுக்குக் காப்பகம்</li> <li>மா – மாமருந்து</li> <li>தில்லை – பாலுணர்வு மரம்</li> <li>அலையாத்தி – சுனாமிக்கு எமன்</li> <li>செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு</li> <li>கடுக்காய் – வாழ்வு தரும் தரு</li> <li>கமலா – குங்குமத்தின் சங்கமம்</li> <li>அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?</li> <li>மருதம் – இதயநோய் நீக்கும் மரம்</li> <li>சந்தன மரம் – பட்டால்தான் வாசனை</li> <li>குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று</li> <li>பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்</li> <li>மகிழம் – பூர்வீக வயக்ராவோ</li> <li>சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே</li> <li>பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக</li> <li>செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்</li> <li>சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ ஆயுள் விருத்தியோ</li> <li>பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை</li> <li>தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி</li> <li>வெப்பாலை – பல நோய் நிவாரணி</li> <li>அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?</li> <li>ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்</li> <li>சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று</li> <li>வேங்கை – குறிஞ்சியின் அரசு</li> <li>வன்னி மரம் – வறட்சியிலும் வளமை</li> <li>உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்</li> <li>சம்பகம் – நறுமணப் பொன்மலர்</li> <li>முருங்கை – தாது புஷ்டி மருந்து</li> <li>விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு</li> <li>வாதநாராயணம் – வலி நிவாரணம்</li> <li>நெட்டிலிங்கம் – போலி அசோகம்</li> <li>தென்னை – கற்பகவிருட்சம்</li> <li>வாழை – வாழையடி வாழையாக</li> <li>கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?</li> <li>கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து</li> <li>வாதா மரம் – சூழலுக்கு நண்பன்</li> <li>மாதுளம் – மாமருந்து</li> <li>எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை</li> <li>கடம்பு – தன்னை மறந்த லீலைகள்</li> <li>மருதாணி – மணமகள் அலங்காரம்</li> <li>நொச்சி – ஜலதோஷ நிவாரணி</li> <li>புன்னை – பூச்சொரியும் மரம்</li> <li>தாழை மரம் – தாயின் காப்பகம்</li> <li>வேள்வேல் – மேக நிவாரணி</li> <li>தழுதாழை – அற்புத சஞ்சீவி</li> <li>கருவேப்பிலை – கறிவேப்பிலை</li> <li>அகில் – அகர்பத்தி மரம்</li> <li>பூவரசு – மரங்களிலும் அரசுதான்</li> <li>ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?</li> <li>சப்போட்டா – பாலோடு பழம்</li> <li>ஆமணக்கு – அருமருந்து</li> <li>எருக்கு – சூரிய மூலிகை</li> <li>பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்</li> <li>மகாகொனி – தேக்கின் மாற்று</li> <li>மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்</li> <li>சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல</li> <li>நாகலிங்கம் – புனிதச் செம்மலர்</li> <li>தோதகத்தி – மதிப்பில் தங்கம்</li> <li>கருங்காலி – கறுப்பு வைரம்</li> <li>தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி</li> <li>எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு</li> <li>வாகை – வெற்றிக்குரிய மரம்</li> <li>இயல்வாகை – தேக்கின் மாற்று</li> <li>கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: அக்ரி சக்தி</p> </div>