<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது முதுமொழி. மனிதக் குற்றங்களால், சுற்றுச்சூழல் வேகமாக அழிந்து வருகிறது. கார்மேகம், குளிர்ந்த காற்று, வானவில், எல்லாம் எதிர்காலத்தில் ஏட்டில்தான் இருக்குமோ என்ற கவலை உருவாகிவிட்டது. கார்மேகம் தோன்றிய வானம் தார் பாலைவனம் ஆகி வருகிற வறட்சி நிலை தோன்றிவிட்டது. உலக அளவில் மழை அதிகம் பெய்யும் இடங்களில் எல்லாம் மழை சிறிதாவது பெய்யாதா என்று ஏங்கும் நிலை உருவாகியுள்ளது. மலைகள் எல்லாம் கிரானைட் கற்களாக விலை போகின்றன. பெரும்பாலான காடுகள் குடியிருப்புப் பகுதிகளாகவே மாறிவிட்டன.</p> <p style="text-align: justify;">காடுகள் அழிக்கப்படுவதால் இயற்கையாகவே தட்பவெப்ப நிலைகள் மாறுகின்றன. மலைப் பகுதியில் ஏற்படுங் காட்டுத் தீயால் பல அரிய வகை தாவரங்களும் பூச் செடிகளும் பல கோடிக்கணக்கான விலையுள்ள மரங்கள் அழிவதுடன் நுண்ணுயிர்களும் பூச்சிகளும் பல விலங்குகளும் அழிகின்றன.</p> <p style="text-align: justify;">திட்டம் எதுவுமின்றி மரங்களை வெட்டுவதால் இந்தியக் காடுகளின் தன்மையும் அவற்றின் பரப்பளவும் பெரிதும் குறைந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 30 சதவிகிதமாக இருந்த இந்தியக் காட்டுப் பகுதி அந்த நூற்றாண்டின் இறுதியில் 19.4 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.</p> <p style="text-align: justify;"><strong> </strong></p> <p style="text-align: justify;">மழை, புயல் போன்றவற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது. மழை நீர் பூமிக்கு அடியில் சென்று நீரூற்றுகளில் தொடர்ந்து நீர் கிடைக்க காடுகள் வழி ஏற்படுத்துகிறது. மழை அளவு அதிகரிக்கவும், காலமாறுதல்களுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. காற்று மண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்க உதவுகின்றன. காற்று மண்டலத்தில் உள்ள ஈரப்பத்தத்தில் மாசடைந்த காற்றினை கிரகித்து அதைச் சுத்தப்படுத்துகிறது.</p> <h3>காடுகளின் அழிவு</h3> <p style="text-align: justify;">காடுகளின் அழிவு மனிதனின் வாழ்க்கைத் தரம், நாட்டின் பொருளாதாரம், எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றிற்கு தவிர்க்க முடியாத அச்சுறுத்தலாக உள்ளது. இன்றைய நிலையில் நாம் ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டன் மரங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த அளவு தற்போது நான்கு பில்லியன் டன்களை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலை நீடித்தால் வெப்பக் காடுகள் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது.</p> <p style="text-align: justify;">தொழிற்சாலைத் தளவாடப் பொருட்களுக்காகவும், விறகுகளுக்காகவும் மரங்கள் பயன்படுத்தப்படுவதால் காடுகள் அழிகின்றன. இயற்கையாகவும் மனிதர்களாலும் உருவாக்கப்படும் காட்டுத் தீ போன்றவற்றால் பல ஆண்டுகள் வளர்ந்து செழித்திருந்த மரங்கள் அழிகின்றன. காடுகள் அழிவதால், கோடைகாலம் அதிக வெப்பமாகவும், குளிர்காலம் அதிக குளிராகவும் மழை அளவு குறைந்தும் காலநிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறது.</p> <p style="text-align: justify;">நீரைத் தேக்கிவைக்கும் திறன் குறைவதால், மழைக் காலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான பொருள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.</p> <h3>சிப்கோ இயக்கம் (Chipko Movement)</h3> <p style="text-align: justify;">இந்தியாவில் இரக்கமற்ற முறையில் காடுகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் முறைக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரல் எழுப்பி அதற்காகத் தன் குடும்பத்தோடு உயிர் நீத்த முதல் நபர், ஜோத்பூர் நகர் அருகில் உள்ள கெஜாரிலி கிராமத்தைச் சேர்ந்த அம்ரிதாதேவி என்ற பெண்மணி ஆவார். அடுத்து சுற்றுச் சூழல் ஆர்வலரும் பத்திரிகையாளருமான சுந்தர்லால் பகுகுணா அவர்களால் 1972 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் தொடங்கிய சிப்கோ இயக்கம் கர்நாடகா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மலைப் பிரதேசங்களுக்குப் பரவியது. பின்னர் காடுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 1988 ஆம் ஆண்டு இந்திய வனக் கொள்கை வெளியிடப்பட்டது. மலைப் பகுதியில் 60 சதவிகிதம் சமவெளிகளில் 20 சதவிகிதம் காடுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: சென்னை நலத்தகவல்கள்</p> </div>