<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">அடிக்கடி நிகழும் பஞ்சத்திற்கு தீர்வாக பசுமைபுரட்சி அமைகிறது. அதிகளவில் பொருளாதாரமும், நவீன விவசாய தொழில்நுட்பமும், செயற்கை உரங்களும், பூச்சி மருந்துகளும் உணவு உற்பத்தியை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டன.</p> <p style="text-align: justify;">இந்தியாவின் உணவு உற்பத்தி 1950ல் 50மில்லியன் டன்னாக இருந்தது. இன்று சுமார் 200 மில்லியன் டன்னிற்கும் மேல் பெருகியுள்ளது. அத்துடன் பலவேறுபட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் பெருகியுள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>மண்</strong><strong> </strong><strong>அரிமாணம்</strong><strong>:</strong> இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயம் பலமுறை நிலத்தை உழுதல், அதிகமான நீர்பாய்ச்சல் போன்றவை மண் அரிமானத்திற்கும், சத்துக்கள் குறைவதற்கும், நீர் தங்குதலுக்கும் காரணமாகிறது.</p> <p style="text-align: justify;"><strong>விவசாயத்தில்</strong><strong> </strong><strong>வேதிப்பொருட்கள்</strong><strong>:</strong> அதிகமான வேதிப்பொருட்கள் உபயோகம், மண் வளமிழத்தல், நிலத்தடிநீர் மற்றும் மேற்பரப்பு நீர் மாசடைதல், உயிரினங்களுக்கு கேடு மற்றும் உயிரிழத்தலுக்கு காரணமாகிறது.</p> <p style="text-align: justify;"><strong>அதிக</strong><strong> </strong><strong>நீர்பாய்ச்சல்</strong><strong>:</strong> மானியத்தில் வழங்கப்படும் மின்சாரம் நிலத்திலிருந்து அதிக நீர் வெளிகொணர்தலுக்கும் நீர்மட்டம் குறைதலுக்கும் வழிகோலுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>பல்லுயிர்வளம்</strong><strong> </strong><strong>குறைவு</strong><strong>:</strong> ஓரின தாவர விவசாயம் பல்லுயிர் பண்பு குறையவும், மண்வளம் குறையவும் காரணமாகிறது.</p> <p style="text-align: justify;"><strong>விவசாய</strong><strong> </strong><strong>சமுதாயத்தின்</strong><strong> </strong><strong>நிலை</strong><strong>:</strong> விவசாயம் செய்துவந்த சமுதாயம் மற்றும் குடும்பங்கள் இன்று நிலங்களில் கூலி வேலை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உற்பத்தி செலவு அதிகமானதுடன் கிராம மக்களின் பொருளாதார சமுதாய நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;"><strong>ஆராய்ச்சிகளும்</strong><strong> </strong><strong>புதுமையான</strong><strong> </strong><strong>வழிகளும்</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">அளவிற்கரிய சிந்தனை மாற்றமும், அதிக முதலீடும் நிலையான தீர்வுகளுக்காக செய்யப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது மிகக்குறைந்த அளவில் மட்டுமே இதற்காக செலவிடப்படுகிறது.</p> <p style="text-align: justify;">சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்சி மையம் 1995ல் வெளியிட்ட அறிக்கையின்படி 1.5 பில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் இதுவரை பாழாக்கப்பட்டிருக்கின்றன. வருடந்தோறும் இது 5 முதல் 10 மில்லியன் ஹெக்டேர் அதிகமாகி உள்ளன என்று சொல்லப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இந்தியாவில் பழங்காலத்தில் சுமார் 30,000 வகை அரிசி இனங்கள் விளைவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று 10 வகைகளே விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்தின் மிகப்பெரிய இழப்பு பல்லுயிர் பெருக்கம் இறந்ததே. 75% விவசாய உயிரின வகைகளை இழந்த நிலையில் 150 வகைகளையே இன்று நாம் கொண்டுள்ளோம். அவற்றில் 3 வகைகளே 60% மேலான தாவர உணவை நமக்கு அளிக்கின்றன.</p> <h3 style="text-align: justify;"><strong>பழமையான</strong><strong> </strong><strong>விவசாய</strong><strong> </strong><strong>முறை</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">மறுசுழற்சி செய்யக்கூடிய ஆதாரங்களை பயன்படுத்தியது - உரம், பூச்சி மருந்து உட்பட.</p> <p style="text-align: justify;">தேவையான அளவு நீரே பயன்படுத்தப்பட்டது.</p> <p style="text-align: justify;">விதைத்தல், அறுத்தல், மேலாண்மை செய்தல் ஆகியவை அனுபவ ரீதியான அறிவைக் கொண்டு நிலம், நீர் ஆகியவற்றிற்கு தகுந்தவாறு விவசாயம் செய்யப்பட்டது.</p> <p style="text-align: justify;">விவசாயக் கழிவுகளை கால்நடைகள் உட்கொண்டு மாற்றாக உரங்களை கொடுத்தது.</p> <p style="text-align: justify;">பயிர் சுழற்சி முறை ஒரு கலையாகவே செய்யப்பட்டது. மண்ணின் வளத்தை அதிகரிக்கவும், ஒரு பயிருக்கு தேவையான நுகர் சத்தை மற்றொரு தாவரம் அளிக்கவும் ஏதுவாக பயன்படுத்தப்பட்டன.</p> <h3 style="text-align: justify;"><strong>நீர்</strong><strong> - </strong><strong>உயிரின்</strong><strong> </strong><strong>அமுதம்</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">நீர் பல இடங்களில் மாசுபடுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தீவிரமான கண்காணிப்பும், பாதுகாப்புமே இன்று நல்ல நீர் கிடைக்க சரியான வழியாகும்.</p> <p style="text-align: justify;"><strong>எவ்வளவு</strong><strong> </strong><strong>நீர்</strong><strong> </strong><strong>உள்ளது</strong><strong>?</strong></p> <p style="text-align: justify;">உலகில் மொத்தம் 1.4 மில்லியன் சதுர கி.மீ. நீரே உள்ளது. இவற்றில் 97% உப்பு நீராக கடலில் காணப்படுகிறது. 3% நன்னீராக நிலத்தில் நீர்சுழற்சி மூலம் உயிர்களுக்கு ஆதார நீராக காணப்படுகிறது. அவற்றில் 2.5% துருவப் பகுதிகளில் உறைபனியாக உள்ளது. பயன்பாட்டிற்கு கிடைக்கும் நீராக 0.5% நன்னீர் ஆறு, ஏரி, குளம் குட்டைகள் மற்றும் நிலத்தடி நீராக உள்ளது.</p> <p style="text-align: justify;">உலகின் மொத்த நீரையும் ஒரு 1000 லிட்டர் கொள்கலனில் இடுவோமானால் - அதில் நன்னீரின் அளவு ஒரு தேக்கரண்டி மட்டுமேயாகும்.</p> <p style="text-align: justify;"><strong>தணியாத</strong><strong> </strong><strong>தாகம்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">ஒரு வருடத்தில் ஏறக்குறைய 20% ஆற்று நீர் எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தடிநீர் 20% அளவிற்கு உலக மக்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. உலகில் கிட்டதட்ட 40% (2.4 பில்லியன்) மக்கள் நீர் பற்றாக்குறையான இடங்களில் உள்ளனர். மேலும் இது 2025ல் 48% (3.5 பில்லியன்) ஆக உயரக்கூடும். தாகத்துடனிருக்கும் 9 பில்லியன் மக்களுக்கான தீர்வு என்ன?</p> <p style="text-align: justify;"><strong> </strong></p> <p style="text-align: justify;"><strong> </strong></p> <h3 style="text-align: justify;"><strong>நீர்வழி</strong><strong> </strong><strong>போக்குவரத்து</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">ஆறுகள் நீர்வழி போக்குவரத்திற்காக பல வழிகளில் உபயோகப்படுத்தப்பட்டும், மாற்றப்பட்டும் வந்தன. இச்செயல் சதுப்பு நிலங்களுக்கும், சமவெளி பகுதிகளுக்கும் கிடைக்கக்கூடிய மழைநீரின் அளவை பாதிப்படையச் செய்து அதை நம்பியுள்ள பறவைகள் போன்ற உயிரினங்களை பாதித்தது. இதனால் பறவைகள் வருவதுகூட பாதிப்படைந்தது.</p> <p style="text-align: justify;">உலக அணைக்கட்டு குழுமத்தின் கணக்குப்படி 22,000 அணைக்கட்டுகளை கொண்ட சீனா முதலிடத்திலும் 4,291 அணைக்கட்டுகள் கொண்ட இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இயற்கையான ஆற்றின் நீரோட்டத்தை தடுத்து கட்டப்படும் அணைகள் ஏகப்பட்ட காடுகள், விவசாய நிலங்கள், கிராமங்கள் அவற்றைச் சார்ந்துள்ள உயிரினங்கள் ஆகியவை அழிய காரணமாகிறது.</p> <p style="text-align: justify;"><strong>ஆறுகள்</strong><strong> - </strong><strong>மாறிவரும்</strong><strong> </strong><strong>கழிவுநீர்</strong><strong> </strong><strong>வழிகள்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">ஆறுகள் மற்றும் நீர்வழிகள் இன்று தொழிற்சாலை கழிவுநீரை கொட்டுவதற்கு சாக்கடைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விளை நிலங்களிலிருந்து வரும் வடிநீர், மாசடைந்த நீர் முதலியவை நீராதாரங்களில் கலப்பதால், டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் தெற்கு ஆசியாவில் அதிகம் ஏற்பட காரணமாகிறது.</p> <h3 style="text-align: justify;"><strong>குறையும்</strong><strong> </strong><strong>மீன்வளம்</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">கோடிக்கணக்கான ஆசியர்களுக்கு மீன் ஒரு சிறந்த புரதச்சத்து ஆதரமாக விளங்கியது. இன்று அவற்றின் அளவு மிகவும் குறைந்திருப்பதாலும், மாசடைதல், வாழிட அழிவு, நீர்வழித்தடங்கள் மாறுதல், போன்றவற்றால் அரிதாகவும் விலை அதிகரித்ததும் கிடைக்கின்றது.</p> <h3 style="text-align: justify;"><strong>ஏரிகள்</strong><strong> - </strong><strong>மறக்கப்பட்ட</strong><strong> </strong><strong>கலாச்சாரம்</strong><strong> </strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">மழைநீரை ஏரிகள் குளங்கள் மூலமாக சேகரித்தல் என்ற பண்டைய கலாச்சாரம் இன்று பெருவாரியாக மறைந்துவிட்டது. சென்ற நூற்றாண்டில் பாதிக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் ஏரி பாசனத்தில் இருந்தது. ஆனால் இன்று ஏரி பாசனம் 10 சதவிகிதம் மட்டுமே. தமிழ்நாட்டில் சில ஏரிகள் 15 கிராமங்களுக்கு கூட பாசனம் செய்யும் வகையில் இருந்தன. நமது தாய்நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏரிகளின் கொள்ளளவு 15 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும். அதன் பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லை.</p> <p style="text-align: justify;"><strong>வறண்டு</strong><strong> </strong><strong>போகும்</strong><strong> </strong><strong>வரை</strong><strong> </strong><strong>நிலத்தடிநீரை</strong><strong> </strong><strong>சுரண்டுதல்</strong><strong> </strong></p> <p style="text-align: justify;">இந்தியாவில் சுமார் 17 மில்லியன் செரிவூட்டப்பட்ட குழாய் கிணறுகள் மானிய அடிப்படையில் பெறப்படும் மின்சாரம் மற்றும் டீசலைப் பயன்படுத்தி இயக்கப்பட்டுவருகின்றன. மழைப் பொழிவில் 10% மட்டுமே சேமித்து பயன்படுத்தப்படுகிறது. மொத்த இருப்பான 36.1 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் நிலத்தடி நீரில், பாசனத்திற்காக 11.52மி.ஹெ.மீ. பயன்படுத்தப்படுவதால் வெறும் 24.58மி.ஹெ.மீ. நீர் மட்டுமே வரும் தலைமுறைக்காக வைக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;"><strong>நீர்</strong><strong> - </strong><strong>ஒவ்வொரு</strong><strong> </strong><strong>தனிமனிதனின்</strong><strong> </strong><strong>தேவை</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">நீர் ஆதாரங்களைப் பாதுகாத்து, பராமரிப்பதில் ஒவ்வொரு தனிமனிதனின் பங்கும் அந்தந்த கிராமம், நகரம், மாநிலத்தைப் பொருத்து அவசியமானது. நாம் ஒவ்வொருவரும் நீரை என்ன தேவைக்காக பயன்படுத்துகிறோம், பயன்படுத்தியபின் அந்த நீரின் நிலை? மற்றும் இறுதியாக பயன்படுத்தப்பட்ட நீர் எங்கு செல்கிறது என்பதைப் பற்றி கணக்கிட்டு அதன்படி செயல்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி வலைத்தளம்" href="http://cpreec.org/" target="_blank" rel="noopener">சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்</a></p> </div>