<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">மரங்களே மனிதர்களின் நுரையீரல்</h3> <p style="text-align: justify;">மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம். மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம்; நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன. நுரையீரலை பாதுகாப்பது நமது கடமை. அந்த வகையில், நம்மை நாம் காத்துக் கொள்ள, மரங்களை காப்பாற்ற வேண்டும். மரம், மண் என அனைத்தும், நம்மில் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் இருந்தால், மரம் வளர்ப்பதில் தானாக ஆர்வம் வந்துவிடும்.</p> <h3 style="text-align: justify;">மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு</h3> <p style="text-align: justify;">உலகிலேயே தமிழகம் தான், 12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயத்தை தொடர்ந்து தொழிலாக செய்து வரும் ஒரே சமூகம். வேறு எங்கும் இதுபோல் இல்லை. தென் அமெரிக்காவில் ஒரு சில இடங்களில் மட்டும் இது போன்று இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தனை ஆயிரம் ஆண்டுகள், வளமாக காத்து வந்த மண்ணை நம் தலைமுறையில் பாழ்படுத்தி விட்டோம். பயிர் வளர்ப்பும், மரம் வளர்ப்பும் நம்முடன் ஒன்றியவை. வர்த்தகம் சார்ந்த பயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால், மண் வளத்தை காக்க தவறிவிட்டோம். முன்பு 120 அடியில் தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இன்று 1400 அடிவரைக்கும், "போர்' போட வேண்டிய நிலை உள்ளது.கிராமங்களில் உள்ளவர்கள், முன்பு வசதியற்றவர்களாக இருந்தாலும், வலுவான உடல் கொண்டவர்களாக இருந்தனர்.</p> <p style="text-align: justify;">ஆனால் இன்று கிராமங்களில், மற்ற எல்லாம் இருக்கிறது; ஆரோக்கியம் இல்லை. இதற்கு காரணம், நமக்கு தேவையான சத்தான உணவுகளை பயிர் செய்யவில்லை. எலும்பு வளர்ச்சி கூட முழுமை பெறாத அரைகுறை மனிதனாக தான் பலரும் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். மரங்களை வளர்ப்பது நம் அடிப்படை கடமைகளில் ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். யார் யார் எல்லாம் சுவாசிக்கின்றனரோ, அவர்கள் எல்லாம் மரங்கள் நட வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி வலைத்தளம்" href="http://www.kalvisolai.com/" target="_blank" rel="noopener">கல்விச்சோலை</a></p> </div>