<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">நீரானது அதன் பௌதீக, ரசாயண உயிரியல் அம்சங்களில் மாற்றமடைகின்றபோது நீர் மாசடைதல் எனப்படுகின்றது. அதாவது ஏரிகள் ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் முதலிய நீர் நிலைகளில் காணப்படும் நீர் மனித நடவடிக்கைகளால் அதன் தூய்மையை இழந்து குறிப்பிட்ட சூழல்தொகுதியின் பயன்பாட்டிற்கு உதவாதமுறையில் மாற்றமடைகின்ற தன்மையினை நீர் மாசடைதல் எனக் குறிப்பிடலாம்.</p> <p style="text-align: justify;">இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பு, அல்காப்பெருக்கம், புயல், நிலநடுக்கம், வரட்சி போன்றவற்றாலும் நீரின் தரத்திலும் அதன் சூழலியல் நிலைமையிலும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. இருந்த போதிலும் மிக அதிகளவில் மனித செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு மனித பயன்பாட்டிற்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலை நீர் மாசடைதலினால் ஏற்படுகின்றது.</p> <p style="text-align: justify;">நீர் மாசடைதலை ஏற்படுத்தும் மாசுக்களின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஓரிட மூல மாசடைதல். அதாவது ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதினால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகின்றது. இரண்டாவது பரந்த மூல மாசடைதல். அதாவது இது ஒரு பரந்த இடப்பரப்பிலிருந்து சிறிது சிறிதாக சேகரிக்கப்படும் மாசுக்களால் உருவாகின்றது.</p> <h3 style="text-align: justify;">நீர் மாசடையும் வழிமுறைகள்</h3> <p style="text-align: justify;"><strong>விவசாய நடவடிக்கைகள் </strong></p> <p style="text-align: justify;">விவசாய நடவடிக்கைகளினால் பல்வேறு விதத்தில் நீர் மாசாக்கம் அடைகின்றது. விவசாய நிலங்களில் கிருமி நாசினிகள், பீடை நாசினிகள், மற்றும் ரசாயண உரங்கள் என்பவற்றின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட நிலத்தினூடாக நீரானது வெள்ளக் காலங்களில் பாய்ந்து செல்லும்போதோ அல்லது நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கூடாக ஆறுகளில் இந்த நீர் கலக்கின்றபோது அத்தகைய மாசுக்களை கழுவிசேர்த்த வண்ணமே நகர்கின்றது. மேலும் இரசாயண கிருமிநாசினி, பீடை நாசினி என்பவற்றின் கொள்கலன்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் விடப்படுகின்றபோதும் நீர் மாசடைவதற்கு வழிவகுக்கின்றது. வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை விவசாய நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுவதனால் இத்தகைய மாசாக்கம் இடம்பெறுகின்றது.</p> <p style="text-align: justify;"><strong>கைத்தொழில் நடவடிக்கைகள்</strong> - என்று உலகின் அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாகவும், அதிக தொழில்வாய்ப்பை உருவாக்கின்ற ஒரு துறையாகவும் கைத்தொழில்துறை காணப்படுகின்றது. கைத்தொழில்துறையில் பல்வேறு விதத்தில் வெளியேறும் கழிவுகள் நீர்நிலைகளில் சேர்க்கப்படுவதனால் நீர் நிலைகள் மாசடைகின்றது. குறிப்பாக இரசாயணப் பொருட்கள் தயாரித்தல், இலத்திரணியல் கழிவுகள், உணவு பதனிடல் கழிவுகள், மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களைக் குளிரவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் விடப்படும் சூடானநீர் போன்றவற்றின் காரணமாக நீர்நிலைகள் மாசடைகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>நகராக்கம் -</strong> நகராக்கம் காரணமாகவும் அதிளவில் கழிவுகள் நீரில் கலக்கின்றன. குறிப்பாக நகரப்பகுதிகளில், இடவசதிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் தமது வீடுகளில் சேரும் கழிவுகளை நீர் நிரைகளில் வீசிவிடுகின்றனர். மேலும் நகரப்பகுதிகளில், இருந்து மிதமிஞ்சிய அளவில் சாக்கடைகளுக்கூடாகப் போய்ச் சேரும் மாசுக்களாலும் நீர் மாசடைகின்றது. இவற்றை விட நகரப்பகுதிகளில் பெரும்பாலும் அருகருகில் அமைக்கப்பட்டிருக்கும் மலசலகூடக்கழிவுகளினாலும் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது. குறிப்பாக தரைக்கீழ் நீர்வளம் கொண்ட கரையோர நகரப் பிரதேசங்களில், இந்நிலைமையினை அவதானிக்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>கண்டல் தாவரங்கள் மற்றும் முருகைக்கற்பாறைகளை அகற்றுதல்</strong> - கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் கண்டல்தாவரங்களும் முருகைக்கற்பாறைகளும் உவர்நீர் தரைக்கீழ் நீருடன் சேர்ந்துவிடாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இவற்றை அகற்றுகின்றபோது அல்லது அழிக்கின்றபோது தரைக்கீழ் நீருடன் நேரடியாக உவர்நீர் கலந்து தரைக்கீழ் நீரில் உவர்த்தன்மையை அதிகரிக்கின்றது.</p> <p style="text-align: justify;">எண்ணெய்க்கசிவு - ஏரிகளுக்கூடாக அல்லது கடலிலே பயணம் செய்கின்ற கப்பல்களிலிருந்து எண்ணெய்க்கசிவுகள் ஏற்படுகின்றபோதும் நீர் மாசடைகின்றது. அமெரிக்காவில் பேரேரி போன்ற ஏரிகள் போக்குவரத்திற்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினூடாகப் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து எண்ணெய் கசிகின்றபோது நீரின் தன்மையை மாற்றியமைக்கின்றது. கடலிலே பயணம் செய்யும் கப்பல்களினாலும் மற்றும் எண்ணெய் கிணறுகளின் கசிவினாலும் கடற்கரை நீர் மாசடைகின்றது.</p> <p style="text-align: justify;">வெப்பமடைந்த நீர் – நீர்மின்சாரம், தொழிற்சாலைகளில் இயந்திரங்களை குளிர்ச்சிப்படுத்துவதற்காக நீரானது பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் நீர்த்தொகுதியுடன் இணைகின்றபோது அந்நீர் வெப்படைந்த நீராக மாற்றமடைகின்றது. குறிப்பிட்ட நீரில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை உருவாவதுடன், அது வேறோர் நீர்த்தொகுதியில் கலக்கின்றபோதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கரையோரங்களில் அமைக்கப்படுகின்ற அனல் மின் நிலையங்களினால், இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் கடலினுள் விடப்படுகின்றது. அதனால் மீன்வளம் பாதிப்படைவதுடன், அயற்சூழலிலும் தாக்கத்தை தோற்றுவிக்கின்றது.</p> <h3 style="text-align: justify;">நீர் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள்</h3> <ul> <li style="text-align: justify;">மாசடைந்த நீரை பருகுவதனாலும், மாசடைந்த நீர் சூழலில் காணப்படும் போதும் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மாசடைந்த நீரைப் பருகுவதனால் வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல், தைபோயிட்டுக் காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் மாசடைந்த நீர் சூழலில் காணப்படுவதனால் மலேரியா, டெங்கு, யானைக்கால், மஞ்சட்காய்ச்சல், தைவசுக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.</li> <li style="text-align: justify;">நீர் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். நீரில் ரசாயண மாசுக்கள் கலப்பதனாலும், நீர் வெப்பப்படுத்துவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதனால் அதனை உட்கொள்ளும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன் அவற்றின் இனப்பெருக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வெப்பப்படுத்திய நீர் நீர்த்தொகுதியுடன் கலப்பதால் உயிரினங்கள் இறப்பதுடன், குடம்பிநிலையிலுள்ள பெரும்பாலான நீர்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிவடைகின்றன.</li> <li style="text-align: justify;">ஒரு பிரதேசத்தில் மாசடைந்த நீர் காணப்படுகின்றபோது அப்பிரதேச குடிநீர் வளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சில பிரதேசங்களில் மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற வளமாகவே நீர்நிலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆறுகள், குளங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மாசடைகின்றபோது அப்பகுதி மக்களின் நீர்வளம் மாசடைகின்றது. சில இடங்களில் மலசலக்கூடகுளிகள் அருகருகே அமைந்திருப்பதனால் நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற வகையில் மாற்றமடைந்துள்ளது.</li> <li style="text-align: justify;">பயிர்விளைச்சலிலும் நீர்ப்பாசன நடவடிக்கைகளிலும் நீர் மாசடைதலானது பாதிப்பபை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக நீர் உவர்த்தன்மை அடைவதனால் நீரானது பயிர்விளைச்சலைக் கட்டுப்படுத்தும் அத்துடன் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். யாழ்ப்பாணப் பகுதியில் அதிகளவில் கிணற்றுவழி நீர்ப்பாசணத்திற்காக தரைக்கீழ் நீர் பயன்படுத்தப்பட்டதனால் தற்போது சில பகுதிகளில் நீரின் உவர்த்தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக இது கிணற்றுவழி நீர்ப்பாசனத்தில் இனிவரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இவ்வாறு நீர்ப்பாசண நடவடிக்கையை நம்பி மேற்கொள்ளப்படுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.</li> <li style="text-align: justify;">உணவுற்பத்தி நிறுவனங்களுக்கு மாசடைந்த நீரினால் பெருமளவில் செலவு ஏற்படும். நீரின் துணையுடன் உணவுற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் சில நிறுவனங்களுக்கு இவ்வாறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள், குடிபாணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இவை தமது பொருட்களைச் சுத்ததப்படுத்துவதற்கும், கலவையாக பயன்படுத்துவதற்கும் நீரினைப் பயன்படுத்துகின்றன. இதற்கு சுத்தமான நீர் கிடைக்காதபோது சுத்தமாக்கி நீரைப் பயன்படுத்துவதற்கரிய இயந்திரங்களை அதிக செலவில் கொள்வனவு செய்யவேண்டி ஏற்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">நீர் மாசடைதலைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள்</h3> <ul> <li style="text-align: justify;">நீர் நிலைகள் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்காக தகுந்த நீர்த்தேக்க முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.</li> <li style="text-align: justify;">தகுந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்தையும் கழிவு நீர் அகற்றும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்துதல்.</li> <li style="text-align: justify;">அதிக மாசடைவை உண்டு பண்ணும் கைத்தொழில்களை கட்டுப்படுத்தவதுடன், அதற்கு மாற்றுவழிகளை சிறப்பாக நீர் சுத்திகரிக்கும் தொகுதிகளைக் கொண்டதாக அமைத்தல்.</li> <li style="text-align: justify;">விவசாயத்தில் இரசாயண உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அண்மைக்காலத்தில் விருத்தியடைந்துள்ள உயிரியல் தொழில்நுட்பத்துடனான உள்ளீடுகளையும், சேதனப் பசளைகளையும் பயன்படுத்துதல்.</li> <li style="text-align: justify;">நகர மற்றும் மக்கள் குடியிருப்புகள் அடர்த்தியாயுள்ள பிரதேசங்களில் முறையான மலசலக்கழிவு வெளியேற்றத்திற்கான பாதாளக் குழாய்களை அமைத்தல்.</li> <li style="text-align: justify;">நீர்பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துதலும் தண்டனை வழங்குதலும்.</li> <li style="text-align: justify;">நீர்வளத்தின் முக்கியத்தவம், அது மாசடையும் வழிமுறைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்.</li> <li style="text-align: justify;">சர்வதேச நீர் தினத்தன்று விழிப்பணர்வு திட்டங்களை முன்னெடுத்தல்.</li> </ul> <h3 style="text-align: justify;">நீர் மாசடைதல்</h3> <p style="text-align: justify;">சில தசாப்தங்களுக்கு முன் எமது நாட்டிலுள்ள மேற்பரப்பு நீர், மற்றும் தரைகீழ் நீர் மனித நடவடிக்கைகளுக்கு முழுமையாக பயன்படுத்த முடியுமாக இருந்தது. ஆனால் தற்போது ஆறு, நீர் நிலைகள், குளம், திறந்த நீர் ஊற்றுக்களில் காணப்படும் நீரை பயன்படுத்த முடியாதுள்ளது. நீர் மாசடைவு காரணமாக நீர் அசுத்தமாவதை போன்றே நீரின் தரமும் குறைகின்றது. இயற்கையாக நீரின் தரம் குறைவடைதல், மனித நடவடிக்கை காரணமாக நீர் மாசடைதல் ஆகியன இலங்கையில் நீர் மாசடையும் பிரதான காரணகளாகவுள்ளன.</p> <h3 style="text-align: justify;">நீர் மாசடையும் வழிமுறைகள்</h3> <p style="text-align: justify;">கடல்நீர் கலத்தல் - கரையோரப் பிரதேசங்களில் ஆழமற்ற கிணறுகளின் மூலம் நன்னீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. மழைவீழ்ச்சி குறைவாகக் காணப்படும் காலங்களில் தரைகீழ் நீர்மட்டம் கீழ் இறங்குவதன் காரணமாக உவர் நீர் அவற்றுக்குள் ஊடுருவுகின்றன. புத்தளம், கற்பிட்டிப் பகுதிகளில் ஆழமற்ற கிணறுகளுக்குள் உவர் நீர் கலப்பது இதற்கு உதாரணமாகும்.</p> <p style="text-align: justify;"><strong>கழிவுகள் கலத்தல்</strong></p> <p style="text-align: justify;">இயற்கையான முறையில் பல்வேறு கழிவுப் பொருட்கள் நீருடன் கலப்பதனாலும் நீர் மாசடைகின்றது. நீரானது மேற்பரப்பு நீராகவும், தரைக்கீழ் நீராகவும் வழிந்தோடும்போது விலங்குக் கழிவுகள், நுண்ணங்கிகள், கனியுப்புக்கள் போன்றன நீருடன் கலந்து மாசடைய வைக்கின்றன.</p> <p style="text-align: justify;">விவசாய நடவடிக்கைகள் மூலம் கிருமிநாசினி, களைநாசினி, வளமாக்கிகளின் பயன்பாட்டினால் நீர் மாசடைதல்.</p> <p style="text-align: justify;">தூய்மையற்ற வாயு வகைகள் நீரில் கலத்தல். (வாகனப் புகை, கைத்தொழிற்சாலைகளின் புகைகள்)</p> <ul> <li style="text-align: justify;">கைத்தொழில் கழிவுப்பொருட்கள்</li> <li style="text-align: justify;">இரசாயன கழிவுப் பொருட்கள்</li> <li style="text-align: justify;">வீட்டுக் கழிவுகள் சேருதல்</li> <li style="text-align: justify;">ஆற்று மண் அகழ்தல்</li> <li style="text-align: justify;">களிமண் எடுத்தல்</li> </ul> <h3 style="text-align: justify;">நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்</h3> <ul> <li style="text-align: justify;">தற்போதைய உலக மக்கள் தொகையில் 33% ஆனோர் அடிப்படைத் தேவைகளுக்குத் தூயநீரைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். 2025 ஆம் ஆண்டளவில் 60 வீதமானோர் நீரைப்பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வர்.</li> <li style="text-align: justify;">குடிநீர் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாறிவருகிறது. அதிகமான பிரதேசங்களில் மேற்பரப்பு நீரையும் தரைக்கீழ் நீரையும் குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாதுள்ளது.</li> <li style="text-align: justify;">கழிவுப் பொருட்கள் நீரில் கலப்பதனால் நீர்வாழ் உயிரினங்கள், செடி கொடிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.</li> <li style="text-align: justify;">கங்கையில் மணல் அகழ்வதன் காரணமாக ஆற்றுப்படுக்கை ஆழமாகின்றது. இதனால் பாரிய கொழும்புப் பிரதேசங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்புக்குள்ளாகின்றது.</li> </ul> <h3 style="text-align: justify;">நீர்வளப் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">நீர் வளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.</p> <p style="text-align: justify;">1. நீரினை அநாவசியமாக பயன்படுத்தாதிருத்தல் ,</p> <p style="text-align: justify;">2. நீரினை மாசுபடுத்தாதிருத்தல்.</p> <p style="text-align: justify;">நீர் வள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.</p> <ul> <li style="text-align: justify;">வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தும் நீரினைப் பாதுகாத்தல்.</li> <li style="text-align: justify;">குளித்தல், பிடவை கழுவுதல், மலசல கூடத்திற்காக பயன்படுத்தும் நீரினை வீணாகப் பயன்படுத்தாது இருத்தல்.</li> <li style="text-align: justify;">பயன்படுத்தும் நீரினை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீளவும் பயன்படுத்தல்.</li> <li style="text-align: justify;">விவசாய நடவடிக்கைகளில் சரியான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.</li> <li style="text-align: justify;">பயிரிடப்படும் பயிர்களின் வகைகளுக்கேற்ப, தேவையான நீரினை மட்டும் பயன்படுத்தல்.</li> <li style="text-align: justify;">கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தும் நீரினை வீணாக்காது பயன்படுத்தல்.</li> <li style="text-align: justify;">நீர் மாசடைதலை தடுப்பதும் நீர்வளப்பாதுகாப்பில் முக்கியம் பெறுகிறது.</li> <li style="text-align: justify;">நகர் பிரதேசங்களில், வாகனம், புடவைகளைச் சுத்தப்படுத்தும் நிலையங்களில்நிகழும் நீர் மாசடைதலை தடுத்தல்.</li> <li style="text-align: justify;">விவசாயம், கைத்தொழில்களில் நிகழும் நீர் மாசடைதலை தடுத்தல்.</li> <li style="text-align: justify;">மழைநீர் சேகரித்தலை மேம்படுத்தல் - இலங்கையில் உலர் வலயப் பிரதேசங்களில் நீர் சேகரிக்கக் கூடிய தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முறைகளை அதிகரித்து மழைநீரினைச் சேகரிப்பதை மேம்படுத்தலாம்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: திட்டம் மாத இதழ்</p> </div>