<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு முக்கியமான அறை கழிவறைதான். நாகரிக வளர்ச்சிக்கு பிறகு வீடுகளுக்குள் அமைக்கப்பட்ட சவுகரியமான இந்த ஏற்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது.</p> <h3 style="text-align: justify;">தொழில்நுட்ப அம்சம்</h3> <p style="text-align: justify;">நமது வீடுகளில் கழிவறைகள் அமைக்கும்போது வாஸ்து முறைப்படி அமைந்திருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் சரியாக இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். கழிவறை குழாய் அமைப்புகள் நீர்க்கசிவுகள் இல்லாமல் சரியான முறையில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">அவை, பூமிக்கடியில் உள்ள தொட்டி அமைப்புகளோடு இணைக்கப்பட்டு, கசடுகள் தொட்டிக்கு அடியில் சென்று சேர்வது போல அமைக்கப்பட வேண்டும். கசடுகள் சில வருடங்களுக்கு ஒரு முறை உறிஞ்சும் பம்ப் மூலமாக வெளியே எடுக்கப்பட்டு தொலைவில் கொட்டப்படுவது வழக்கம்.</p> <h3 style="text-align: justify;">கழிவுகள் உருமாற்றம்</h3> <p style="text-align: justify;">மாதக்கணக்கில் நீரில் பயணிக்கும் கப்பல்கள், விண்ணில் பறக்கும் விமானங்கள் ஆகியவற்றில் இருக்கும் கழிவறைகளில் வித்தியாசமான ஒரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவறை தொட்டிகளில் ‘பேசில்லஸ்’ என்று சொல்லப்படும் ஒரு வகை பாக்டீரியாக்களை போட்டு வைத்திருப்பார்கள்.</p> <p style="text-align: justify;">அந்த வகை பாக்டீரியாக்கள் நன்மை செய்யும் வகையை சேர்ந்தவை. அவை தொட்டிகளில் சேரும் கழிவுகளை சிதைத்து உருமாற்றம் செய்து விடுகின்றன. அதன் மூலமாக கழிவறை தொட்டிகளில் கசடுகள் பெரும்பாலும் சேராது. உபயோகிக்கப்படும் தண்ணீர் மட்டுமே அதில் இருக்கும். அந்த நீரிலிருந்து எந்த விதமான கெட்ட வாசனையும் வராது.</p> <h3 style="text-align: justify;">சுத்திகரிக்கும் பாக்டீரியாக்கள்</h3> <p style="text-align: justify;">மறைமுகமாக நன்மை செய்யும் ‘பேசில்லஸ்’ வகை பாக்டீரியாக்களை நமது கழிவறை தொட்டிகளில் போட்டுவிட்டால் அவை சுத்திகரிப்பு வேலைகளை மிகச்சரியாக தொட்டிகளுக்குள் செய்து முடிக்கின்றன. அதன் காரணமாக மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை செப்டிக் டேங் சுத்தம் செய்யும் வேலை இல்லை. வெறும் தண்ணீர் மட்டுமே தொட்டியில் இருப்பதால், அருகில் உள்ள கிணறு அல்லது போர்வெல் ஆகியவை பாதிக்கும் வாய்ப்புகள் ஏற்படாது.</p> <p style="text-align: justify;">ஐந்து பேர்களைக் கொண்ட ஒரு குடும்பம் உபயோகிக்கும் கழிவறை தொட்டியில் 50 கிராம் அல்லது 100 கிராம் கொண்ட ‘பேசில்லஸ் வகை பாக்டீரியா’ போட்டுவிட்டால் போதுமானது. அவை தொட்டிகளில் உருவாகும் தீமை செய்யும் பாக்டீரியாக்களை உணவாக உண்டு விடும். அவை தொடர்ந்து பெருகக் கூடியவை என்பதால் அடிக்கடி அவற்றை தொட்டியில் போட வேண்டியதில்லை.</p> <h3 style="text-align: justify;">தாமாகவே உருவாகும்</h3> <p style="text-align: justify;">இந்த வகை பேசில்லஸ் பாக்டீரியாக்கள் எதிலிருந்து உருவாகிறது என்பது ஆச்சரியமான விஷயமாகும். அவற்றை உருவாக்க எந்த ஆராய்ச்சிக்கூடமும் வேண்டியதில்லை. சாதாரணமாக நாம் பார்க்கும் குதிரையின் சாணத்தில் அந்த வகை பாக்டீரியாக்கள் தாமாகவே உருவாகின்றன. அவற்றிலிருந்துதான் பேசில்லஸ் பாக்டீரியாக்கள் அல்லது நொதிக்க வைக்கும் என்சைம்கள் தயார் செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">அவற்றை வாங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கழிவறை பேஸினுக்குள் போட்டு, தண்ணீர் ஊற்றிவிட்டால் அவை உள்ளே சென்றுவிடும். வெளிநாடுகளில் உபயோகத்தில் இருக்கக்கூடிய இம்முறையானது இப்போது நமது நாட்டில் பரவலாக நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தினத்தந்தி</p> </div>