<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">குறைந்த வளியமுக்கப் பிரதேசத்தை (Low Pressure area) நடுவில் கொண்ட அயன மண்டலத்தில் (வெப்ப மண்டலம்) உருவாகும் ஒரு சூறாவளி வகையே அயனமண்டல சூறாவளியாகும்.</p> <p style="text-align: justify;">இது பொதுவாக வெப்பம்கூடிய அயனமண்டலச் சமுத்திரங்களில் தோன்றும். இது மிகவும் ஆபத்தான வேகக்காற்றையும் இடியுடன்கூடிய மழையை ஏற்படுத்தும் முகில்களையும் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப் பெருக்கையும் ஒருங்கே கொண்ட ஒரு வளிமண்டலவியல் செயற்பாடாகும். அயன மண்டலம் அல்லது வெப்ப மண்டலம் என்பது இச்சூறாவளி தோன்றும் புவியியற் பிரதேசத்தைக் குறிக்கும்.</p> <h3 style="text-align: justify;">பௌதிகக் கட்டமைப்பு (Physical Structure)</h3> <p style="text-align: justify;">எல்லா அயனமண்டல சூறாவளிகளும் ஒரு தாழமுக்கப் பிரதேசத்கை; கொண்டிருக்கும். இதன் கட்மைப்பு சிக்கலானது. இந்தத் தாழமுக்கப் பிரதேசம் மேலும் வலுவடைந்து வளர்ச்சியடையும்போது மையப்பகுதி ஒன்று உருவாகும். இதனை 'கண்' (eye) என அழைக்கப்படும். இந்தக் கண்பகுதியில் முகில்கள் காணப்படாமல் மேலெழும்பும் வளித்திரளே இருக்கும். இம்மையப்பகுதியில் காற்று பலமாக வீசாது. இங்கு மழையும் காணப்படாது. இந்தக் கண் அமைப்பு வட்டவடிவமாகக் காணப்படுவதுடன் அதன் விட்டம் 30 கிலோ மீற்றர் முதல் 65 கிலோ மீற்றர் வரை காணப்படும். விண்ணிலிருந்து பார்க்கும் போது இதன் மையப்பகுதி கண் போலத் தோற்றமளிப்பதால் கண் என அழைக்கப்படுகின்றது. கண்ணைச்சுற்றியுள்ள முகில்களில் பலமான காற்றும் மழையும் காணப்படும்.</p> <p style="text-align: justify;">வெப்பம்கூடிய அயனமண்டல சமுத்திரங்களில் தோன்றும் சூறாவளியின் கண் மையப்பகுதியைச் சற்றி வெளியே மேகக்கூட்ட சுவர் வட்டமாகக் காணப்படும். இதன் விட்டம் 100 கிலோ மீற்றர் முதல் 4000 கிலோ மீற்றர் வரை காணப்படும். இந்த மேகக்கூட்டச்சுவர்ப் பகுதி இடியுடன்கூடிய அதிக மழைவீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. இந்தக் கண் மையப்பகுதியைச் சுற்றி பலமான காற்று வீசுவதுடன் இங்கிருந்து வெளிநோக்கிச் செல்லும்போது காற்றின் வேகம் குறைந்துகொண்டு செல்லும் அதேவேளை, வளிமண்டல அமுக்கம் அதிகரித்துக் கொண்டு செல்லும்.</p> <p style="text-align: justify;">சூறாவளி தோன்றுவதற்கான முக்கிய காரணிகள்ஒரு கடல் பிரதேசத்தில் இவ்வாறான ஒரு தாழமுக்க நிலை ஏற்பட்டு சூறாவளி உருவாகுவதற்கு சில சூழல் நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்படல் வேண்டும். அவையாவன:</p> <ul style="text-align: justify;"> <li>பூமத்திய கோட்டிலிருந்து (Equator) வடஅரைக்கோளத்திலும் (Northern Hemisphere) தென்அரைக்கோளத்திலும் (Southern Hemisphere) 50கடகக்கோட்டிற்கும் (Latitude) 300 கடகக் கோட்டிற்கும் இடையிலுள்ள பிரதேசங்களில்தான் சூறாவளி உருவாகும்.</li> <li>கடல்மட்ட நீரின் வெப்பநிலையானது 26.50 இற்கும் அதிகமாகக் காணப்படுவதுடன் இந்த பிரதேசத்திலுள்ள சமுத்திரத்தில் இந்த வெப்பநிலை குறைந்தது 46 மீற்றர் வரை பேணப்படல் வேண்டும்.</li> <li>விசாலமான கடல் பரப்பும் அந்தக் கடல் பரப்பின்மேல் காணப்படும் சூடான வளி மேலெழுந்தும் குளிரான வளி கீழ் நோக்கியும் நகர்ந்து, ஒரு காற்றுச் சுற்றோட்டம் காணப்படல் வேண்டும்.</li> <li>வளிமண்டலத்தில் உள்ள மாறன்மண்டலத்தில் (Troposphere)மத்திய பகுதியில் 4900 மீற்றர் (1600 அடி) வரை ஈரலிப்பான காற்று காணப்படல் வேண்டும்</li> <li>கடல் மேற்பரப்பிற்கு அருகில் முன்னரே ஒரு வளிமண்டலக் குழப்பம் (Atmospheric disturbance) உருவாகியிருக்க வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">இவ்வாறான சில முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும்போது சூறாவளி உருவாகுவதற்கான சந்தர்ப்பம் காணப்படும். இவ்வாறான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு சூறாவளி உருவாகும் பிரதேசங்கள் இலங்கைத்தீவைச் சுற்றியுள்ள வட இந்து சமுத்திரத்தில் இரு சமுத்திரப் பிராந்தியங்கள் காணப்படுகின்றன. ஓன்று வங்காளவிரிகுடா கடல் பகுதி. மற்றயது அராபியக் கடல் பகுதி. அதேவேளை மத்தியகோட்டிற்கு மிக அண்மையில் இலங்கைத்தீவு அமைந்துள்ளதனால், இந்தியா, வங்காளதேஷ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது வங்காளவிரிகுடாவில் உருவாகும் சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு ஓரளவு குறைவாகும்.</p> <p style="text-align: justify;">உலகம் முழுவதும் வருடாந்தம் 80 முதல் 100 வரையிலான சூறாவளிகள் உருவாகுவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதில், வடஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் வருடாந்தம் 4 முதல் 6 வரையான சூறாவளிகள் உருவாகின்றன. அதேவேளை வருடாந்தம் உலகம் முழுவதும் உருவாகும் சூறாவளிகளில் 5%மான சூறாவளிகள் வங்காளவிரிகுடா பிராந்தியத்திலும் 1%மான சூறாவளிகள் அராபியக் கடல் பிராந்தியத்திலும் தோன்றுகின்றன.</p> <p style="text-align: justify;">இவ்வாறு மேற்கூறப்பட்ட பிராந்தியங்களில் உருவாகும் சூறாவளிகளின் நகரும் போக்கு அனேகமாக மேற்கு அல்லது வடமேற்குத் திசைகளில் காணப்படுவதனால் அராபியக் கடல் பிராந்தியங்களில் தோன்றும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவுமில்லை.</p> <h3 style="text-align: justify;">சூறாவளியும் முரண் சூறாவளியும்</h3> <p style="text-align: justify;">தாழமுக்கப்பகுதியில் ஏற்படும் சுழல் காற்றை சூறாவளி என அழைப்பது போல், உயர் அமுக்கப்பிரதேசத்தில் ஏற்படும் சுழல் காற்றை முரண் சூறாவளி (Anti-cyclone) என அழைக்கப்படுகிறது. வடஅரைக்கோளத்தில் முரண் சூறாவளியின் சுழல் காற்றானது வலம் சுழியாகவும் அதாவது மணிக்கூட்டுத் திசையிலும், தென் அரைக்கோளத்தில் முரண் சூறாவளியின் சுழல் காற்றானது இடம் சுழியாகவும் அதாவது மணிக்கூட்டுத் திசைக்கு எதிராகவும் வீசுகின்றது. இந்த சுழல் காற்றானது பல பிராந்தியங்களிலும் பல பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்தப் பிராந்தியங்கள் முக்கியமாக ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்லாண்டிக் மற்றும் கிழக்குப் பசுபிக் சமுத்திர வலயத்தில் இதனை ஹரிக்கேன் (Hurricane) எனவும், மேற்குப் பசுபிக் மற்றும் பிலிப்பைன்ஸ் வலயத்தில் தைபூன் (Typhoon) எனவும், இந்து சமுத்திர பிராந்தியங்கள் மற்றும் தெற்குப் பசுபிக் சமுத்திரப் பிராந்தியங்களைக் கொண்ட வலயத்தில் சைக்ளோன் (Cyclone) எனவும் ஆத்திரேலியா வலயத்தில் விலி-விலீஸ் (willy-willies) எனவும் பல நாமங்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. பல நாமங்களைக் கொண்டு இவை அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் ஒரே வளிமண்டலவியல் கட்டமைப்பைக் கொண்ட செயற்பாடேயாகும்.</p> <h3 style="text-align: justify;">சூறாவளியின் வளர்ச்சியும் பெயர் சூட்டுதலும்</h3> <p style="text-align: justify;">தாழ் அமுக்கம் கொண்ட பிதேசம் (Low pressure area) உருவாகி வளர்ச்சியடைந்ததும் தாழமுக்கம் (Low pressure)என இது அழைக்கப்படும். இது பின்னர் மேலும் வளர்ச்சியடையும் போது வலுவான தாழமுக்கம் (Deep depression) என அழைக்கப்படும். இந்தத் தாழமுக்கம் மீண்டும் வலுவடையும் போது சூறாவளிப்புயல் (Cyclonic storm) எனவும் பின்னர் வலுவான அல்லது கடுமையான சூறாவளி (Severe Cyclonic storm) எனவும் அழைக்கப்படும். மீண்டும் மீண்டும் தாழமுக்கம் குறைந்து, இது வளர்ச்சியடையும் போது மிகவும் வலுவான சூறாவளிப்புயல் (very severe cyclonic storm)) எனவும் பின்னர் மிகமிக வலுவான சூறாவளிப்புயல் (Super cyclonic storm)எனவும் அதன் வளர்ச்சிப்படிகளில் பலவாறான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சிப்படி நிலை பல பெயரில் அழைக்கப்படுவது அந்த சந்தர்ப்பத்திலுள்ள காற்றின் வேகத்திலேயே அது தங்கியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">வடஇந்து சமுத்திரப் பிரதே சூறாவளிக்குப் பெயர் சூட்டுதல்</h3> <p style="text-align: justify;">உருவாகும் சூறாவளிகளை நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கும் அதனை அடையாளப்படுத்துவதற்கும் ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் இலகுவாக முன்னெச்சரிக்கைகளை வழங்குவதற்குமாக இவைகளுக்கு ஒரு பெயர் சூட்டப்படுகிறது. உலகில் முக்கிமாக 5 வலயங்களாக உள்ள பிரதேசங்களில் அந்தத்ந்தப் பிரதேசங்களில் அங்கத்துவம் பெறும் நாடுகள் அதற்கான பெயரை வழங்கியுள்ளார்கள். இதன்படி வட இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அங்கத்துவம் பெறும் நாடுகளான பங்காளதேஷ், இந்தியா, மாலைதீவு, மியன்மார், ஓமான், பாகிஷ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் இதற்காக வழங்கிய பெயர்ப் பட்டியல் கீழ்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயர்களை வங்காள விரிகுடா மற்றும் அராபியக் கடல் பகுதியில் உருவாகும் சூறாவளிகளுக்கு இந்த வலயத்தின் புதுடில்லியில் தலைமையகத்தைக் கொண்ட பிராந்திய விஷேட வளிமண்டலவியல் மையம் (Regional Specialized Meteorological Center) சூட்டுகிறது. தாழமுக்கமாக உருவாகி பின்னர் சூறாவளிப்புயலாக வலுவடைந்த பின்னரே (காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீற்றர் அதிகரிக்க வேண்டும்) இந்தப் பெயர் சூட்டப்படும். அது வரை பொதுவாக தாழமுக்கம் என்றே அழைக்கப்படும்.</p> <p style="text-align: justify;">1999ம் ஆண்டு இந்தியாவின் ஒரிஷா மாநிலத்தைத் தாக்கிய சூறாவளியின் பின்னர், 'வட இந்துசமுத்திர அயனமண்டல சூறாவளி' (North Indian Tropical Cyclone) தொடர்பாக உலக வளிமண்டலவியல் ஸ்தானத்தினால் (WMO), 2000ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தொடரில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உருவாகும் சூறாவளிகளுக்கும் பெயர் சூட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்காக இதில் அங்கத்துவம் பெற்ற எட்டு நாடுகளும் பத்து பெயர் கொண்ட பெயர்ப் பட்டியல் வழங்கியிருந்தார்கள். இந்த நடவடிக்கை 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு மே மாதம் வரை நடைபெற்று, 2004ம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைக்க வந்தது. இதன்படி முதன்முதலாக வட இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவாகிய சூறாவளிக்கு பங்காளதேஷ் நாட்டினால் பிரேரிக்கப்பட்ட ஒனில் (Onil) எனும் பெயர் அக்டோபர் 02ம் தேதி சூட்டப்பட்டது. இந்த வருடம் மே மாதம் வங்காள விரிகுடாவில் உருவாகிய சூறாவளிக்கு மே 11ம் தேதி இலங்கையினால் வழங்கப்பட்ட மகாசென்(Mahasen) எனும் பெயரும், அக்டோபர் மாதம் உருவாகிய சூறாவளிக்கு அக்டோபர் 09ம் தேதி தாய்லாந்து நாட்டினால் வழங்கப்பட்ட பைலின்(Phailin) எனும் பெயரும்; சூட்டப்பட்டன. இதன் பின்னர் நவம்பர் மாதம் உருவாகிய சூறாவளிக்கு வங்காளதேஷ் நாட்டினால் வழங்கப்பட்ட ஹெலன் (Helan) எனும் பெயர் நவம்பர் 20ம் தேதியும் அதனையடுத்து உருவாகிய சூறாவளிக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட லீகார் (Lehar) எனும் பெயர் நவம்பர் 24ம் தேதியும் சூட்டப்பட்டன.</p> <h3>சூறாவளிகளும் அதன் தாக்கங்களும்</h3> <h4>லீஹார் (Lehar)- சூறாவளி</h4> <p style="text-align: justify;">2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி தெற்கு சீனக்கடல் பகுதியில் தாழமுக்க பிரதேசம் (Low Pressure area)உருவாகி, இது பின்னர் மலே தீவகற்பத்திற்கு (Malay peninsula) மேலாக மேற்குத் திசையில் மெதுவாக நகர்ந்து, வங்காளவிரிகுடா கடல் பகுதிக்கு நவம்பர் 22ம் தேதி சென்றது. அடுத்த 24 மணித்தியாலத்தில் இது படிப்படியாக வலுவடைந்து வங்காளவிரிகுடாவின் சூடான பிரதேசத்திங்குள் மணிக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்தது. பின்னர் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் நவம்பர் மாதம் 25ம் தேதி மணிக்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி வீசி அங்கும் அழிவை ஏற்படுத்தியது. பின்னர்;, நவம்பர் 28ம் தேதி 0600 GMT நேரப்படி ஆந்திரப்பிரதேசத்தின் மச்சிலிப்பட்டணத்திலிருந்து தென்கிழக்காக 60 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அதற்கடுத்த சில மணி நேரத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரமுள்ள மச்சிலிப்பட்டணம் இந்திய நாட்டை ஊடறுத்துச் சென்றது. இதன் போது வளிமண்டல அமுக்கம் 1000 மில்லிபார் (mb) (1000 hpa) ஆகக் காணப்பட்டது. அந்தமான்-நித்கோபார் தீவுகளிலுள்ள 2000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இங்கு, 24 மீனவர்கள் காணாமல் போயுள்ள அதேவேளை ஏனைய மீனவர்கள் கரையோரக் காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆந்திரப்பிரதேசத்தின் விசாகப்பட்டணம், ஸ்ரீகோகுலம், கிழக்கு கோதாவாரி மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வைக்கப்பட்டார்கள்.</p> <h4 style="text-align: justify;">ஹெலன் (Helan)- சூறாவளி</h4> <p style="text-align: justify;">2013 ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தாழமுக்கமாகக் காணப்பட்ட இந்த ஹெலன் சூறாவளிக்கு, இது சூறாவளியாக வலுவடைந்தபின் நவம்பர் 20ம் தேதி வங்காளதேஷ் நாட்டினால் வழங்கப்பட்ட ஹெலன் எனும் பெயர் சூட்டப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மச்சிலிப்பட்டணம் இதன்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அத்துடன், கிழக்கு கோதாவாரி, ஸ்ரீகோகுலம், வழசாகப்பட்டணம் மற்றும் குன்னூர் மாவட்டங்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மேற்கு கோதாவாரி மாவட்டத்தில் நெல் வயலும் தென்னை மரங்கள் மற்றும் வாழைமரங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.</p> <h4 style="text-align: justify;">பைலின் (Phailin)- சூறாவளி</h4> <p style="text-align: justify;">இது அயனமண்டல தாழமுக்கமாக (Tropical Cyclone), 2013 அக்டோபர் 04ம் தேதி முதன்முதலாக தாய்லாந்து வளைகுடாவிக்கும் கம்போடியாவிற்கும் இடையில் அவதானிக்கப்பட்டது. இது பின்னர் மேற்குத் திசையில் நகர்ந்து, மேற்குப் பசுபிக் வலயத்தை விட்டு வெளியில் 06ம் தேதி வந்தது. மறு தினம் இது மேலும் வலுவடைந்து அந்தாமான் தீவிற்கு வந்தடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. அடுத்த சில நாட்களில் இது மேலும் வளர்ச்சியடைந்து, 09ம் தேதி சூறாவளிப்புயலாக வலுவடைந்த பின் அன்றய தினம் அதற்கு தாய்லாந்து நாட்டினால் வழங்கப்பட்ட பைலின் எனும் பெயர் சூட்டப்பட்டது. பின் அது அந்தமான்தீவினூடாக வங்காளவிரிகுடாவினுள் பிரவேசித்தது. மறுநாள் அக்டோபர் 10ம் தேதி இந்தப் பைலின் சூறாவளி மிகவிரைவாக மிகவும் வலுவாக சூறாவளிப்புயலாக (very severe cyclonic storm) உருமாறியது. 1999ம் ஆண்டு ஒரிசா மாநிலத்தைத் தாக்கி 10.000பேர் இறப்பதற்கு காரணமாயிருந்த மிகவும் வலுவான சூறாவளியின் பின்னர், 14 வருடங்களின் பின் வங்காளவிரிகுடாவில் தோன்றிய மிகப்பெரிய சூறாவளியாக இது இனம் காணப்பட்டது. ஆனால் மிகவும் பாதுகாப்பாக மக்கள் முன்கூட்டியே இடம்பெயர வைக்கப்பட்டதனால் உயிரிழப்பு மிகவும் குறைவாகும். இந்த பெலின் சூறாவளியானது, 12ம் தேதி ஒரிசா மாநிலத்திற்கும் ஆந்திரப்பிரதேசத்திற்கும் இடையில் ஒரிசாவின் கோபாலூர் அருகே இரவு 0900 மிணியளவில் இந்தியக்கண்டத்தை ஊடறுத்தது. இது பின்னர் அதன் வலிமை சற்றுக்குறைவடைந்து, அடுத்த இரு நாட்களில் மீண்டும் வலுவிழந்து, தாழமுக்கமாக உருமாறி 14ம் தேதி செயலிழந்தது. இது 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை அந்தமான்-நிக்ஆகாபார் தீவுப்பகுதியில் நிலைகொண்டிருந்த இரு நாட்களில் அந்தமானின் மாயவண்டர் (Mayabunder) பகுதியில் பதிவாகிய மொத்த மழைவீழ்ச்சி, 734mm ஆகவும் 434mm ஆகவும் காணப்பட்டது. இதன்போது ஒரிசா மாநிலத்திலிருந்துதம் ஆந்திரப்பிரதேசத்திலிருந்தும் 550,000 மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். 45 பேர் இதனால் மரணமடைந்துள்ளார்கள்.</p> <h4 style="text-align: justify;">மகாசென் (Mahasen)- சூறாவளி</h4> <p style="text-align: justify;">2013 மே மாதத்தின் ஆரம்பத்தில் (08ம் தேதி முதல்) தெற்க வங்காளபிரிகுடாவில் தாழமுக்க பிரதேசம் காணப்பட்டது. இது இரு தினங்களாக மெதுவாக வளர்ச்சியடைந்து, தாழமுக்கமாக மே 10ம் தேதி மையம் கொண்டது. மறுதினம் அது மேலும் வலுவடைந்து, சூறாவளிப்புயலாக உருமாறியபின், மே 11ம் தேதி இதற்கு 'மகாசென்' எனும் பெயர் சூட்டப்பட்டது. இலங்கைக்கு அருகாயையிலும் பின்னர் கிழக்கு இந்தியாவிற்கு அருகிலும் நகர்ந்த இந்த மகாசென் சூறாவளியானது, மே மாதம் 14ம் தேதி தனது நகரும் திசையை மாற்றியது. இது அடுத்த இரு நாட்களில் மேலும் வலுவடைந்து. இதனால் மே 16ம் தேதி புயல் காற்றின் வேகம் மணிக்கு 85 கிலோ மீற்றராக அதிகரித்தது. இது அன்றய தினம் (2013 மே 16ம் தேதி) பங்காளதேஷ் நாட்டின் வடமேற்கு சிற்றாகோங் (Chittagong)ஊடாக உள்பிரவேசித்தது. ஊடறுத்து வீசும்போது காற்றின் வேகம் மணிக்கு 95 கிலோமீற்றராகவும் அந்த நேரத்தில் வளியமுக்கம் 990 m.bar ஆகவும் காணப்பட்டது. இந்த மகாசென் சூறாவளியானது இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மீயன்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.</p> <p style="text-align: justify;">பங்களாதேஷ் நாட்டில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாக்கப்பட்டது. 800000 மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர வைக்கப்பட்டார்கள். இந்த சூறாவளியின் தாக்கத்தினால் பங்காளதேஷ் நாட்டின் சிற்றாகோங் பகுதியில் 750mm மழை பதிவாகியுள்ளது. மீயன்மார் நாட்டில் 70,000 மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர வைக்கப்பட்டார்கள். இதன்போது மக்களை ஏற்றிச் படகொன்றில் அதிகளவான மக்கள் ஏற்றிச் செல்லப்பட்டதன் காரணத்தினால் இந்தப்படகு கவிழ்தது. இதில் 08பேர் மரணமாகியதுடன் 50பேர் காணாமல் போயுள்ளார்கள். 42 பேர் காப்பாற்றப்பட்டனர்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: முனைவர் கதிர்வேலு சம்பந்தன், தாவரவியல் துறை, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால் - 609 602</p> </div>