<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">காற்று மாசு</h3> <p style="text-align: justify;">நாஸா செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை, காற்று மாசுபாடு விஷயத்தில் நாம் இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது.</p> <ul> <li style="text-align: justify;">வாகனங்கள் வெளியேற்றும் கந்தகப் புகை, அனல் மின் நிலையம் வெளியேற்றும் நிலக்கரிப் புகை, ரசாயன ஆலைகள் வெளியேற்றும் அமிலம் கலந்த நச்சுப் புகை போன்றவற்றால் காற்று மாசடைகிறது. ஆனால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.</li> <li style="text-align: justify;">காற்றில் கலந்திருக்கும் பி.எம்.2.5 துகள்களைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ‘ஏரோசால் ஆப்டிகல் டெப்த்’ சொல்லும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.</li> <li style="text-align: justify;">தொழிற்சாலைகள் நிறைந்த கிழக்கு சீனப் பகுதிகளைவிடவும், பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரையிலான பகுதிகளில் கடந்த 2005 முதலான 10 ஆண்டுகளில் காற்றின் தரம் மிக மோசமாகியிருப்பது இந்தக் கணக்கீடு மூலம் தெரியவந்திருக்கிறது.</li> <li style="text-align: justify;">மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் கண்காணிக்கப்படும் காற்றுத் தரக் குறியீட்டு எண்ணுடன் பொருந்துகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களைத் திரட்டுவது, தற்போதைய நிலவரப்படி 23 நகரங்களில் மட்டும் தகவல் திரட்டுவது என்பதை மேலும் விரிவாக்கம் செய்வது போன்ற விஷயங்களை அரசு செய்ய வேண்டும்.</li> <li style="text-align: justify;">குறிப்பிடத் தக்க மக்கள் தொகையும், பொருளாதாரச் செயல்பாடுகளும் உள்ள நகரங்களை அதில் இணைத்து, குறிப்பிட்ட கால அளவுக்குள் தரவுகளைத் திரட்ட வேண்டும். இந்தத் தகவல்களைப் பொதுத் தளத்தில் பகிரங்கமாக வெளியிடுவது என்பது காற்று மாசுபாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.</li> <li style="text-align: justify;">இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் வகையில் காற்று மாசுபாடு தொடர்பான செயலிகளை உருவாக்குவது, கொள்கை வகுப்பாளர்கள் முதல் காற்று மாசுபாட்டுக்குக் காரணமானவர்கள் வரை இதற்குப் பொறுப்பானவர்களுக்கு அழுத்தம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</li> <li style="text-align: justify;">கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்பு போன்ற நடவடிக்கைகள் அதிகரிப்பது, அனல் மின் நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரி, டீசல் வாகனங்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் வசம் இருக்கும் தரவுகளின்படி, கடந்த 6 ஆண்டுகளில் 6 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 23% மாசுத் துகள்களுக்குக் கட்டுமானப் பணிகள் காரணம் என்றும், 20% மாசுத் துகள்களுக்கு டீசல் வாகனங்கள் காரணம் என்றும் தெரியவருகிறது.</li> <li style="text-align: justify;">கட்டுமானப் பணிகளின்போது வெளியாகும் மாசுத் துகள்களைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்.</li> <li style="text-align: justify;">சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய், கரி போன்ற உயிரி எரிபொருட்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சூரிய சக்தி அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்.</li> <li style="text-align: justify;">பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, சைக்கிள்கள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவது போன்றவற்றின் மூலம் நகரங்களின் காற்றுத் தரத்தை மேம்படுத்தலாம். பருவநிலை தொடர்பான பாரிஸ் மாநாட்டின் ஒப்பந்தத்தில் இந்தியா ஏற்றுக்கொண்ட பொறுப்பு தவிர்க்க முடியாத ஒன்று.</li> </ul> <p style="text-align: justify;">இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்பட்சத்தில் காற்று மாசுத் துகள்களைக் கட்டுப்படுத்துவதுடன் நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்ஃபர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகள், முதியவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதை அலட்சியம் செய்ய முடியாது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <span style="text-align: justify;">கிரீன்பீஸ் அமைப்பு</span></p> </div>