<h3 style="text-align: justify;">மருத்துவக் கழிவுகள்</h3> <p style="text-align: justify;">மருத்துவக் கழிவு என்பது மனிதர்கள் அல்லது மற்ற உயிரினங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்போது ஏற்படும் திட, திரவ கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது சிகிச்சை அளிக்கப்படும் வேறு இடங்களிலோ, ஆராய்ச்சி கூடங்களிலோ அல்லது வீட்டிலோ உண்டாகலாம்.</p> <p style="text-align: justify;">இரண்டு முக்கிய காரணங்களுக்காக மருத்துவக் கழிவுகள் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. அவை இக்கழிவுகளின் நோய் பரப்பும் தன்மை மற்றும் விஷத்தன்மை ஆகும்.</p> <h3 style="text-align: justify;">பாதுகாப்பு சட்டங்கள்</h3> <p style="text-align: justify;">நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986ல் பிரிவு 68 மற்றும் 25/ன் கீழ் 1998ம் ஆண்டு மருத்துவக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் வரையரை செய்யப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றது. இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:</p> <p style="text-align: justify;">பிரிவு - 3</p> <p style="text-align: justify;">சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தும் உரிமையை அரசாங்கத்திற்கு அளிக்கிறது.</p> <p style="text-align: justify;">பிரிவு - 5</p> <p style="text-align: justify;">எழுத்துப் பூர்வமாக விதிமுறைகள் வரையறுக்க உரிமையளிக்கிறது.</p> <p style="text-align: justify;">பிரிவு - 6</p> <p style="text-align: justify;">ஆணைகள் பிறப்பிக்க அரசாங்கத்திற்கு உரிமை அளிக்கின்றது.</p> <p style="text-align: justify;">பிரிவு - 8</p> <p style="text-align: justify;">அபாயகரமான கழிவுப்பொருட்களைக் கையாளுபவர்களுக்கு விழிப்புணர்வுக்கல்வி அளிக்கும் உரிமை அளிக்கின்றது.</p> <p style="text-align: justify;">பிரிவு - 15</p> <p style="text-align: justify;">விதிமுறைகளை மீறுபவர்களைத் தண்டிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபதாரம் அல்லது இவ்விரண்டும சேர்த்து வழங்கப்படும். விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5000/- வீதம் ஓராண்டுக்கு அபராதமும், ஏழாண்டுகள் வரை சிறைதண்டனையும் வழங்க இப்பிரிவு அனுமதி அளிக்கிறது.</p> <p style="text-align: justify;">பிரிவு - 17</p> <p style="text-align: justify;">விதிமுறைகளை மீறும் அரசாங்க நிறுவனங்களுக்கு தண்டனை அளிக்கம் உரிமை இப்பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">இச்சட்ட அமலாக்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனிப்பட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால் 2000ம் ஆவது ஆண்டு ஜுன் மாத இறுதிக்குள் மருத்துவக் கழிவு (கையாளுதல் மேலாண்மை) சட்டப் பிரிவுகள் அமல்படுத்த நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை மருத்துவமனைகள் பின்பற்றவில்லை. மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்காற்றி வரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு குறிப்பிட்ட நிர்வாகப் பொறுப்புகள் அளிக்கப்படாமையும் இப்பிரச்சனை தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="ext-link-icon external-link" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி வலைத்தளம்" href="http://cpreec.org/" target="_blank" rel="noopener">சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்</a></p>