கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பில் 60% பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பினை தாட்கோ மூலம் HCL நிறுவனம் வழங்க உள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ / மாணவிகளுக்கு முதல் ஆண்டில் HCL நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் ஆறு மாதங்களுக்கு இணைய வழி மூலமாக பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சிக்குத் தேவையான மடிக்கணினியை HCL நிறுவனமே வழங்கும். அடுத்த ஆறு மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள HCL நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டில் ஆறாம் மாதம் முதல் மாணாக்கர்களுக்கு மேற்படி நிறுவனத்தின் வாயிலாக ஊக்கத்தொகையாக ரூ. 10000 வழங்கப்படும். இரண்டாம் வருடத்தில் மாணாக்கர்களுக்கு மூன்று விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மதிப்பு மிக்க BITS Pilani பல்கலைக்கழகத்தில் B.Sc. Design & Computing பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இப்படிப்பானது B.Tech. படிப்புக்கு சமமான படிப்பாகும். இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பினை HCL நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இக்கல்லூரியில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா (SASTRA) பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் BCA 3 வருட பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள AMITY பல்கலைக்கழகத்தில் மூன்று வருடம் BCA, BBA மற்றும் B.Com. பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். மேற்காணும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் தாட்கோவின் பங்களிப்பாக HCL நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கு திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாணாக்கருக்கும் பயிற்சிக்கான கட்டணத் தொகையை தாட்கோவே ஏற்கும். பின்னர் தேர்ச்சி பெற்ற மாணாக்கருக்கு HCL நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 இலட்சம் கட்டணத் தொகையை முதல் ஆறு மாத பயிற்சி காலத்தில் தாட்கோ கல்விக் கடனாக வழங்கும். BITS Pilani பல்கலைக்கழகத்தில் நான்கு வருடம் மற்றும் சாஸ்தரா (SASTRA) மற்றும் AMITY பல்கலைக்கழகத்தில் 3 வருடம் பட்டப்படிப்பில் சேர்ந்தவுடன் HCL நிறுவனத்தில் முதல் ஆண்டு திறமைக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வுடன் ஆண்டு வருமானம் ரூ.1.17 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை வழங்கப்படும். மேற்படி நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு நுழைவுத் திறனுக்கான மூன்று பாடப்பிரிவிற்கு Communication Skill (Basic English), Verbal & Logical Reasoning and Maths (Aptitude Tests) போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் இணையவழி வாயிலாக நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் மூன்று பாடப்பிரிவுகளிலும் குறைந்த பட்சமாக 10 மதிப்பெண்ணிற்கு 4 மதிப்பெண் பெற்றால் போதுமானதாகும். மேலும் இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9