கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும் புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் உத்தமர் காந்தி விருது வழங்கப்படுகிறது. 2006-07 முதல் 2009-10-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் வருடத்திற்கு 15 விருதுகள் வீதம் 60 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கான வெகுமதியுடன் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு ககெளரவிக்கப்பட்டனர். இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படாத நிலையில், இவ்விருதினை மீண்டும் 2022-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டது . விருது பற்றிய கண்ணோட்டம் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், புதுமையான முயற்சிகள் எடுத்து மிக சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடைய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அனுப்பியுள்ள காரணிகளின் மதிப்பெண்கள் அடிப்படையில், "உத்தமர் காந்தி விருது" மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் வீதம், ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை இவ்விருதுக்கு அனைத்து கிராம ஊராட்சிகளும் விண்ணப்பம் செய்யலாம். கிராம ஊராட்சிகள் மிக எளிய முறையில் இணையதளத்தின் வழி படிவங்களில் உள்ள பதிவுகளை உள்ளீடு செய்து விருதுக்கான போட்டியில் பங்கேற்கலாம். கிராம ஊராட்சிகள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு https://tnrd.tn.gov.in/ இணையதள முகவரியினை பயன்படுத்திட உரிய பயனர் மற்றும் கடவுச் சொற்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இது தொடர்பாக கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உரிய பயிற்சியினை அளித்திடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பங்கேற்று விருதுக்கு போட்டியிடுகையில் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள காரணிகளுக்கான தொடர்புடைய பதிவுகளை உள்ளீடு செய்ய அடிப்படை புள்ளி விவரங்களை கிராம ஊராட்சிகள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். இவ்விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை மதிப்பெண்கள் மூலம் பட்டியலிடப்பட்டு மாவட்டத்திற்கு 5 சிறந்த கிராம ஊராட்சிகள் வீதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநகரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 சிறந்த கிராம ஊராட்சிகள் மாநில அளவில் இறுதி செய்யப்படும். அரசால் இறுதி செய்யப்பட்ட 37 கிராம ஊராட்சிகளுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களால் கேடயம், பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். எனவே, வளர்ச்சிப் பணி மேற்கொள்வதிலும், நல்ல நிர்வாகத்தினை மேம்படுத்தவும், கூர்நோக்கிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவும், கிராம ஊராட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டியினை ஏற்படுத்தித் துரித வளர்ச்சியினை எய்திட இவ்விருதுகள் உதவும். இதனை அனைத்து கிராம ஊராட்சிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆணையர்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9