தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக்காட்சியினை தனிநபர் கண்காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ. 25000 வீதம் 10 கலைஞர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டுக்கண்காட்சியாக நடத்திட ஒரு குழுவிற்கு ரூ. 50000 வீதம் 5 குழுக்கள் ஆகிய இனங்களில் அரசின் நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு பெற்றவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலைப் பண்பாட்டுத்துறை - ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச் செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்துபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இத்திட்டத்தில் பயனடைந்தோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. ஏனைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (Bio-data), சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் (5 எண்ணிக்கைகள்), அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித் தொகுப்புகளின் ஒளி நகல்கள் ஆகியவைகளை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 21.10.2022 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) இயக்குநர், கலை பண்பாட்டுத் துறைதமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008தொலைபேசி: 044 - 28193195 வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9