தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் பயன் பெற பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் (PMFME) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு உதவி புரிந்திட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள், குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், அதற்கான வங்கிக்கடன் பெற்றிட உதவுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கு PMFME திட்டத்தின் விதிமுறைகளின்படி திட்ட அறிக்கைக்கான கடன் ஒப்புதல் பெறப்பட்டதும் ரூ. 10000 முதல் தவணையாகவும், வணிக ரீதியான உற்பத்தி துவங்கப்பட்டதும் இரண்டாவது தவணையாக ரூ. 10000 வழங்கப்படும். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், இளநிலை பட்டதாரியாகவும், வேளாண் சார்ந்த நிறுவனங்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும் . வங்கிகளுடன் இணைந்து செயல்பட்ட நல்ல அனுபவமுள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு முகவர்கள், வங்கி மித்ராஸ், ஆலோசனை நிறுவனங்கள், தனிநபர் தொழில் வல்லுநர்கள் ஆகியோரும் விண்ணப்பித்திடலாம். மேலும், விண்ணப்பங்களை tn.pmfme@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இதற்கான கடைசி தேதி 16.08.2022 ஆகும். வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிக இயக்குநர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9