<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">பிறக்கும் குழந்தைகளின் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பெரும் பணம் செலவிடுவதற்கு சிரமப்படும் பெற்றோரின் துயரத்தைக் குறைப்பதாற்காக மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகம் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. கருவுற்ற பெண்களுக்கும், பிறந்து 30 நாள் வரையுள்ள சிசுக்களுக்கும் அவை சுகப்பிரசவத்தில் அல்லது அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பிறந்திருந்தாலும் எவ்வித கட்டணமும் இல்லாத இலவச மருத்துவ சிகிச்சை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. கிராமப்பகுதிகளிலும் நகர்ப்பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் இந்தத் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">கருவுற்றப் பெண்களுக்கான உதவிகள்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படும்.</li> <li style="text-align: justify;">அறுவை சிகிச்சை (சிசேரியன்) தேவையென்றால் அதுவும் இலவசம்.</li> <li style="text-align: justify;">மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ சாமான்கள் இலவசம்.</li> <li style="text-align: justify;">மருத்துவமனையில் தங்கியிருக்கின்ற நாட்களுக்கு இலவச உணவு.</li> <li style="text-align: justify;">இரத்தம் தேவையென்றால் கட்டணமின்றி இரத்தம் செலுத்தப்படும்.</li> <li style="text-align: justify;">மருத்துவமனையில் சில வசதிகளைப் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் அவை ரத்து செய்யப்படும்.</li> <li style="text-align: justify;">வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு இலவச வாகன வசதி.</li> <li style="text-align: justify;">மருத்துவமனையில் இருந்து வெளியிடங்களுக்குப் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால் அதற்கும் இலவசமான போக்குவரத்து வசதி.</li> <li style="text-align: justify;">மருத்துவமனையில் 48 மணி நேரம் தங்கியிருந்த பின்னர் மீண்டும் வீடு திரும்பவும் இலவச வாகன வசதி.</li> </ul> <h3 style="text-align: justify;">பிறந்து 30 நாள் வரையுள்ள மற்றும் நோயுற்ற சிசுக்களுக்கான உதவிகள்</h3> <ul style="text-align: justify;"> <li style="text-align: justify;">இலவச சிகிச்சை</li> <li style="text-align: justify;">இலவச மருந்தகள் மற்றும் மருந்தப் பொருள்கள்</li> <li style="text-align: justify;">இலவச பரிசோதனைகள்</li> <li style="text-align: justify;">இலவச ரத்தம்</li> <li style="text-align: justify;">பயன்பாட்டுக் கட்டணங்களில் இருந்து விலக்கு</li> <li style="text-align: justify;">வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு இலவச வாகன வசதி</li> <li style="text-align: justify;">வெளியிடப் பரிசோதனைக்குச் சென்று வரவும் இலவச வாகன வசதி</li> <li style="text-align: justify;">வீடு திரும்புவதற்கும் இலவச வாகன வசதி</li> </ul> <h3 style="text-align: justify;">திட்டத்தின் முக்கிய அம்சங்கள்</h3> <p style="text-align: justify;">அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும், அந்த குழந்தைகளுக்கும் மட்டும் மேற்சொன்ன அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். இத்திட்டத்தினால், சுமார் ஒருகோடியே இருபது லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கின்ற மற்ற பெண்களும் இனி பிரசவத்தை அரசு மருத்துவமனைகளிலேயே வைத்துக் கொள்ள முன்வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தேசிய சுகாதாரத் திட்டம்</p> </div>