<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">சரும பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">கோடையில் அடிக்கும் சுட்டெரிக்கும் வெயிலினால், சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவையுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, கோடையில் சருமத்திற்கு அதிகப்படியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.</p> <p style="text-align: justify;">சூரியனின் கதிர்கள் சருமத்தில் அளவுக்கு அதிகமாக படும் போது, சரும செல்கள் அளவுக்கு அதிகமாக பாதிப்படைந்து, நாளடைவில் அது சரும புற்றுநோயாக மாறிவிடும்.</p> <p style="text-align: justify;">எனவே கோடையில் சருமத்திற்கு பராமரிப்பு என்பது அவசியமாகிறது. பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்று கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.</p> <p style="text-align: justify;">அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.</p> <h4 style="text-align: justify;">பொலிவான சருமம்</h4> <p style="text-align: justify;">தேன், மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.</p> <h4 style="text-align: justify;">வெயிலினால் ஏற்பட்ட கருமையைப் போக்க</h4> <p style="text-align: justify;">வெயிலில் அதிகம் சுற்றினால் சருமத்தில் ஒருவித கருமை ஏற்படும். அதனைப் போக்க, கற்றாழை ஜெல்லில் தக்காளி சாறு சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தின் கருமை நீங்கி, நிறம் அதிகரிக்கும்.</p> <h4 style="text-align: justify;">கரும்புள்ளிகள் மறைய</h4> <p style="text-align: justify;">வயதாவதால் ஏற்படும் புள்ளிகள், பிம்பிள் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்க, கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் முகத்தை கழுவ வேண்டும்.</p> <h4 style="text-align: justify;">சரும அழகை அதிகரிக்க</h4> <p style="text-align: justify;">சருமத்தின் அழகை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லில், மாம்பழ சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு போட்டு வந்தால், முகத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்டலாம்.</p> <h4 style="text-align: justify;">சென்சிடிவ் சருமத்திற்கு</h4> <p style="text-align: justify;">கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சென்சிட்டி சருமத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் போகும்.</p> <h4 style="text-align: justify;">சொரசொரப்பான சருமத்தை நீக்க</h4> <p style="text-align: justify;">சிலருக்கு சருமத்தில் சொரசொரப்பாக ஆங்காங்கு இருக்கும். அத்தகையதைப் போக்க, கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கெட்டியாக பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் அழகாக இருக்கும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி வலைத்தளம்" href="http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/aloe-vera-face-packs-indian-skin-007741.html" target="_blank" rel="noopener">www.tamil.boldsky.com</a></p> </div>