<div id="Middlecolumn_internal"> <h3>இளமையான வாழ்வு</h3> <p style="text-align: justify;">என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/orange.jpg" /></p> <p style="text-align: justify;">இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.</p> <p style="text-align: justify;">இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சியின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.</p> <p style="text-align: justify;">உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.</p> <p style="text-align: justify;">எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.</p> <p style="text-align: justify;">சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.</p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">ஆரஞ்சு பழச்சாற்றின் <span style="text-align: justify;">நன்மைகள்</span></span></h3> <p style="text-align: justify;">ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.</p> <p style="text-align: justify;">ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.</p> <p style="text-align: justify;">ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.</p> <p style="text-align: justify;">ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.</p> <p style="text-align: justify;">நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.</p> <p style="text-align: justify;">ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.</p> <p style="text-align: justify;">ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.</p> <p style="text-align: justify;">மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்</p> <p style="text-align: justify;">நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.</p> <p style="text-align: justify;">கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.</p> <p style="text-align: justify;">ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.</p> <p style="text-align: justify;">ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.</p> <p style="text-align: justify;">என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: நக்கீரன்</p> </div>