<div id="Middlecolumn_internal"> <h3>ரமலான் நோன்பின் விதிமுறைகள்</h3> <p style="text-align: justify;">இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு காலத்தில் பகல் வேளையில் உணவு, நீர் எதுவும் உட்கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.</p> <p style="text-align: justify;">இதற்கு திடீரென்று உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம்.</p> <p style="text-align: justify;">குறிப்பாக ரமலான் நோன்பு காலத்தில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். ஏனெனில் குடிக்கும் நீரின் அளவு மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுக்கும் அளவு குறைவதால், குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு, மலச்சிக்கலை சந்திக்கக்கூடும்.</p> <p style="text-align: justify;">மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ஒருசில உணவுகளை சூரியன் உதிப்பதற்கு முன் மற்றும் சூரியன் மறைந்த பின் உட்கொள்ள வேண்டியது அவசியம்.</p> <p style="text-align: justify;">இங்கு ரமலான் நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3>பழங்கள்</h3> <p style="text-align: justify;">பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, அத்திப்பழம், வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது, உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.</p> <h3>காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்</h3> <p style="text-align: justify;">காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதலும் பட்டாயி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றை நோன்பு மாதத்தில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால், மலச்சிக்கல் ஏற்படுவது குறையும்.</p> <h3>தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்</h3> <p style="text-align: justify;">மெதுவாக செரிமானமாகும் உணவுகளான ஓட்ஸ், கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதை போன்றவற்றை ரமலான் நோன்பு மேற்கொள்ளும் காலத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.</p> <h3>கொழுப்பு குறைவான உணவுப் பொருட்கள்</h3> <p style="text-align: justify;">தோல் நீக்கப்பட்ட சிக்கன், மீன் போன்றவற்றில் கொழுப்புக்கள் குறைவாகவும், அதே சமயம் புரோட்டீன் அதிகமாகவும் உள்ளது. இவற்றை நோன்பு காலத்தில் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும். மேலும் நோன்பு ஆரம்பிக்கும் முன் மற்றும் முடிந்த பின் போதுமான அளவு நீரைப் பருக வேண்டும். இச்செயலால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.</p> <h3>புரோபயோடிக்ஸ்</h3> <p style="text-align: justify;">புரோபயோடிக்ஸ் உணவுப் பொருட்களான தயிரை நோன்பு இருப்பவர்கள் சேர்த்து வர, மலச்சிக்கல் தடுக்கப்படும். எனவே தவறாமல் தயிரை அன்றாடம் எடுத்து வாருங்கள்.</p> <h3>ஜூஸ் மற்றும் தண்ணீர்</h3> <p style="text-align: justify;">தண்ணீரை அதிகம் பருகுவதோடு, பழச்சாறுகளையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் ரமலான் நோன்பினால் உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் இளநீர், தர்பூசணி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், அன்னாசி ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை பருகுவது இன்னும் நல்லது.</p> <h3>பாதாம்</h3> <p style="text-align: justify;">உலர் பழங்கள், பாதாம் போன்றவற்றை நோன்பு இருப்பவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை அதிகம் இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைவாக உள்ளதால், இதனை சாப்பிடுவதன் மூலம் நோன்பு காலத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.</p> <h3>பேரிச்சம் பழம்</h3> <p style="text-align: justify;">பேரிச்சம் பழம் ரமலான் நோன்பு காலத்தில் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சர்க்கரை போன்றவை உள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டால், மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்பட்டு, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படுவது தடுக்கப்படும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: ஒன்இந்திய நாளிதழ்</p> </div>