<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">இரத்த சோகை என்னும் நிலை, உடலில் இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், அதை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்தும்.</p> <p style="text-align: justify;">அவை களைப்பு, சோம்பேறித்தனத்தை உணர்வது, மூச்சுவிடுவதில் சிரமம், படபடப்பு மற்றும் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்றவை. இரத்த சோகை பிரச்சனையானது மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப் போக்கு, நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, சிறுநீரக பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகளினால் வரும்.</p> <p style="text-align: justify;">இந்த இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சிறந்த வழி உடலில் இரும்புச் சத்தின் அளவை அதிகரிப்பது தான். இங்கு இரத்த சோகையை சரிசெய்வதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">பேரிச்சம் பழம்</h3> <p style="text-align: justify;">பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து, தினமும் 2 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">வெள்ளரிக்காய்</h3> <p style="text-align: justify;">உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை ஏற்படும். அன்றாட உணவில் வெள்ளரிக்காயை சேர்த்து வாருங்கள். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, பொட்டாசியம் ஏராளமாக நிறைந்துள்ளது.</p> <h3 style="text-align: justify;">ஜூஸ்</h3> <p style="text-align: justify;">இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள், பழங்களில் ஆப்பிள் ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ்களில் பீட்ரூட், பசலைக்கீரை போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதன் மூலம் இரத்த சோகையைப் போக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">காய்கறிகள் மற்றும் பழங்கள்</h3> <p style="text-align: justify;">பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை மற்றும் காய்கறிகளில் கேரட், நெல்லிக்காய், தக்காளி போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது. எனவே இவை அனைத்தையும் கொண்டு சாலட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து உட்கொண்டு வர, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.</p> <h3 style="text-align: justify;">தேன்</h3> <p style="text-align: justify;">தேனில் இரும்புச் சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இவற்றை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">வைட்டமின் சி உணவுகள்</h3> <p style="text-align: justify;">இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் சி சத்து தான் உடலில் இரும்புச் சத்து உறிஞ்ச உதவும்.</p> <h3 style="text-align: justify;">மூச்சுப் பயிற்சி</h3> <p style="text-align: justify;">தினமும் மூச்சுப்பயிற்சி மற்றும் லேசான உடற்பயிற்சிகளான வாக்கிங் போன்றவற்றை மேற்கொண்டு வருவதன் மூலம், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரித்து நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.</p> <h3 style="text-align: justify;">நட்ஸ்</h3> <p style="text-align: justify;">இரத்த சோகை இருப்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: www.seithy.com</p> </div>