<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர அட்டவணைப்படி எடுத்து கொள்ள கூடாது.</p> <h3 style="text-align: justify;">தண்ணீர்</h3> <p style="text-align: justify;">ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். <span style="text-align: justify;">சிலர் வெந்நீர் அருந்துவார்கள், ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பதுதான் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை காட்டிலும் அதிகம். தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன்செய்து, வயிற்றை சீராக இயக்க உதவுகிறது. <span style="text-align: justify;">தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு, போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாக குறைக்க முடியும். </span><span style="text-align: justify;">முக்கால் லிட்டர் நீரை முழுமையாக குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராக பிரித்து குடிக்கலாம்.</span></span></p> <h3 style="text-align: justify;">வெந்தயம்</h3> <p style="text-align: justify;">சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வரபிரசாதம் வெந்தயம். உடல் சூட்டை தணிக்கும் அருமருந்து இதுதான். <span style="text-align: justify;">வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். <span style="text-align: justify;">வெந்தயத்தை </span><span style="text-align: justify;">ஊற வைக்காமல்</span><span style="text-align: justify;"> அப்படியே தண்ணீருடனோ அல்லது மோருடனோ சாப்பிடுவது கூடாது. <span style="text-align: justify;">வெந்தயத்தை ஊற வைக்காமல் சாப்பிட்டால் அதன் மேல் உள்ள உறை செரிமானத்தை தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம் மோர் இரண்டுமே குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் உடனடியாக சளி பிடிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. சில நேரங்களில் வயிற்று போக்கிற்கும் வழிவகுத்துவிடும்.</span></span></span></p> <h3 style="text-align: justify;">அருகம்புல்</h3> <p style="text-align: justify;">அல்சருக்கு அருமருந்து அருகம்புல் சாறுதான். பைகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல்லின் தண்டு மட்டும்தான் மருத்துவகுணம் கொண்டது. <span style="text-align: justify;">இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனை பகுதியானது நச்சு தன்மை கொண்டதால் வயிற்று போக்கை ஏற்படுத்திக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலேயே அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.</span></p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">இஞ்சி</span></h3> <p style="text-align: justify;">இஞ்சியில் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சி தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பை குறைப்பதோடு, நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால் வாய்ப்புண், வயிற்றிப்புண் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. <span style="text-align: justify;">காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. </span></p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">நெல்லிக்காய் சாறு</span></h3> <p style="text-align: justify;">காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்துவந்தால் தேவையற்ற கொழுப்பு கரைவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: வெப்துனியா நாளிதழ்</p> </div>