<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">நெல்லிக்காய், வில்வம் இலை போன்றவற்றை கொண்டு பசியின்மையை போக்கும் மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பசியின்மை என்பது வயிறு சம்மந்தமான பிரச்னை. பசிக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் அமிலம் சுரந்து வயிற்றை புண்ணாக்கி விடும். இதனால் பசிக்காமல் போய்விடும். வேளைக்கு சாப்பிடமால் இருப்பதாலும் பசியின்மை ஏற்படுகிறது.</p> <h3>வில்வம் மரத்தின் இலை</h3> <p style="text-align: justify;">வில்வ இலையை பசையாக அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவுக்கு எடுக்கவும். இதில், 50 மில்லி தண்ணீர் விடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடித்துவர நன்றாக பசிக்கும். வயிற்று புண்கள் ஆறும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது வில்வம். பல்வேறு நன்மைகளை கொண்ட வில்வம் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டது. வீக்கத்தை கரைக்க கூடியது. உள் உறுப்புகளை தூண்டக் கூடியது.</p> <h3 style="text-align: justify;">இலந்தை பழம்</h3> <p style="text-align: justify;">இலந்தை பழம் பசியை தூண்ட கூடிய தன்மை கொண்டது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலந்தை அடையை வாங்கி பசி இல்லாதபோது சிறிய நெல்லிக்காய் அளவு சாப்பிடும்போது நன்றாக பசி எடுக்கும்.</p> <h3>நெல்லிக்காய்</h3> <p style="text-align: justify;">நெல்லிக்காயை பயன்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். பெரிய நெல்லிக்காயில் இருந்து சாறு எடுக்கவும். 3 ஸ்பூன் நெல்லிக்காய் சாறுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில், சிறிது உப்பு போடவும். 50 மில்லி அளவுக்கு நீர் சேர்த்து கலக்கவும். இதை, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடித்தால் பசி நன்றாக எடுக்கும்.</p> <h3 style="text-align: justify;">பசியின்மைக்கான தேனீர்</h3> <p style="text-align: justify;">வீட்டிலிருக்கும் பொருட்களை பயன்படுத்தி பசியின்மைக்கான தேனீர் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் சோம்பு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது சுக்குப் பொடி, ஓமம், உப்பு போடவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர பசி தூண்டப்படும். இதயம் சீராகிறது.</p> <p style="text-align: justify;">.ஆதாரம்: தமிழ்முரசு</p> </div>