<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">வாத நோய்</h3> <p style="text-align: justify;">வாத நோய் என்பது பெண்கள் மற்றும் முதியவர்களை அதிகமாக தாக்கும் ஒன்றாக உள்ளது. வாதநோய், முதுமையானவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூளை - நரம்பியல் நோய். உலகில் அதிகமானோர் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கிறது. <span style="text-align: justify;">உலகில் ஒவ்வொரு ஐந்து விநாடிக்கும் ஒருவர் வாதநோய் காரணமாக இறக்கிறார். இந்தியாவில் ஆண்டுக்கு லட்சம் பேரில் 140 பேர் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர். <span style="text-align: justify;">தினமும் இந்தியாவில் 1,800 பேர் வாதநோய், அதன் விளைவால் இறக்க நேரிடுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்நோய் பாதிப்பை ஏற்படுத்தினாலும், பெண்கள் - முதியவர்கள் மத்தியில் வாதநோய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.</span></span></p> <p style="text-align: justify;">மாரடைப்புக்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் பாதிக்கும் வாத நோய் வராமல் தடுப்பதற்கு என்ன வழி உள்ளது. உணவின் மூலமாக இதனை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி இந்த பகுதியில் முழுமையாக காணலாம்.</p> <h3>எப்படி வருகிறது?</h3> <p style="text-align: justify;">ஒருவரின் இதய ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சிக்கலை மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) என்கிறோம். இதேபோன்று ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதை வாதநோய் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.</p> <h3>மூளை திசுக்கள்</h3> <p style="text-align: justify;">ஒருவரின் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம், கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் வழியாகப் பாய்ந்து மூளைத் திசுக்கள் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவுகின்றன. இதனால் ஒருவரின் உடல் உறுப்புக்களில் ஏற்படும் அங்க இயக்கங்கள், பேச்சுத்திறன், சிந்தனைத் திறன், மனநிலை, பார்வை, கேட்கும் திறன், உடல் உணர்வுகளின் தன்மை ஆகியவை சீராகச் செயல்படுகின்றன. அதனாலேயே நாம் அன்றாடப் பணிகளைச் சரியான சுயசிந்தனையுடன் செய்ய முடிகிறது.</p> <h3>கொழுப்பு படிதல்</h3> <p style="text-align: justify;">மூளைத் திசுக்களிடையே பரவி இருக்கும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் அடைப்புகள், ரத்தக் குழாய்களில் பாயும் ரத்தம் உறைந்து போதல், சில நேரம் மூளை ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு மூளைத் திசுக்களிடையே ரத்தம் கசிந்து விடுதல் ஆகியவை காரணமாக மூளைச் செல்களுக்குத் தேவையான ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் ஏற்படும் இந்தப் பாதிப்பால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட உடல் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டு வாதநோய் ஏற்படுகிறது. மூளையின் வலது பக்கம் பாதிக்கப்படும்போது உடலின் இடது பகுதியிலும், மூளையின் இடது பக்கம் பாதிக்கப்படும்போது வலது பக்கத்திலும் வாதத்தன்மை, பேச முடியாமை போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.</p> <p style="text-align: justify;"><strong> அறிகுறிகள்</strong></p> <p style="text-align: justify;">பார்வைக் குறைபாடு, மனநிலை மாற்றம், சுய உணர்வில் தடுமாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் உணர்வில் மாற்றம், தள்ளாட்டம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்ற தொந்தரவுகள் திடீரென ஏற்படக்கூடும். இவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்.</p> <h3>பக்கவாதம்</h3> <p style="text-align: justify;">உடலின் ஒரு பகுதியில் கை, கால்களை அசைக்க முடியாதபடி செயல் இழக்கக்கூடும். மேலும் செயலிழந்த பகுதியில் முகம் கோணலாகி, வாயும் அசைக்க முடியாமல் போய்விடும். முகப் பகுதியும் வாதத்தால் பாதிக்கப்படும்போது பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, பேச்சு உளறலைப் போல இருக்கும். இதைப் பேச்சு வழக்கில் ‘பக்கவாதம்' என்கிறோம்.</p> <p style="text-align: justify;"><strong>ஏலக்காய்</strong></p> <p style="text-align: justify;">அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து உணவு உண்பதற்கு முன்னர் அருந்தி வந்தால் வாயுத்தொல்லைகள் விலகிச் செல்லும்.</p> <p style="text-align: justify;"><strong>புதினா</strong></p> <p style="text-align: justify;">காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தேவையான அளவு வறுத்து எடுத்து, இவற்றுடன் புதினா, வல்லாரை, புளி, உப்பு சேர்த்து அரைத்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்வுக் கோளாறுகள் விலகும். மலச்சிக்கலும் நீங்கும்.</p> <p style="text-align: justify;"><strong>வாதநாரயண இலை</strong></p> <p style="text-align: justify;">சிறிது வாதநாராயண இலைகளை மையாக அரைத்து, மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட்டால் வாதக் கோளாறுகள் நீங்கும். இதன் இலை அல்லது காம்புகளை ரசம் வைத்து அருந்தினாலும் பொரியல் செய்து சாப்பிட்டாலும் வாத நோய் விலகும்.</p> <p style="text-align: justify;"><strong>கோதுமை மாவு</strong></p> <p style="text-align: justify;">கைப்பிடி அளவு கோதுமை மாவை இளம் வறுப்பாக வறுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதத்தால் வரக்கூடிய வலிகள் மட்டுமல்லாமல் மூட்டுவலியும் விலகும்.</p> <p style="text-align: justify;"><strong> நன்னாரி</strong></p> <p style="text-align: justify;">20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீர் போட்டு 200 மி.லியாகக் காய்ச்சி 100 மி.லி வீதம் காலை மாலை சாப்பிட்டுவந்தால் நாள்பட்ட வாதம் விலகும்.</p> <p style="text-align: justify;"><strong>சாமை</strong></p> <p style="text-align: justify;">சாமை அரிசியை சமைத்தோ, கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.</p> <p style="text-align: justify;"><strong>புளிச்சக்கீரை</strong></p> <p style="text-align: justify;">வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வாத நோய் தணியும்.</p> <p style="text-align: justify;"><strong>நொச்சி, வேப்பிலை</strong></p> <p style="text-align: justify;">நொச்சி, வேப்பிலை இரண்டும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாகும். நொச்சி இலை மற்றும் வேப்பிலைகளை காய்ச்சி குளித்து வந்தால் வாத நோய்கள் விலகும்.</p> <h3>சிகிச்சை முறைகள்</h3> <p style="text-align: justify;">முன்பெல்லாம் வாதநோய்க்குச் சிகிச்சை அளிப்பது கடினம் என்றிருந்த நிலை மாறி, தற்போது வாதநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வாதநோயால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க நவீன சிகிச்சை முறைகள் தற்போது பெரிதும் உதவுகின்றன. சிகிச்சைகள் மூளையில் ரத்தம் உறைந்து வாதநோய் ஏற்படும்போது, அந்த ரத்த உறைவைக் கரைத்து, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. மேலும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உண்டாகும் வாதநோயைக் குணப்படுத்தவும் தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p> <h3>தீய பழக்கங்கள்</h3> <p style="text-align: justify;">மது அருந்துவது, புகைபிடிப்பது, போதை மருந்து பழக்கத்தை விட்டொழிப்பது போன்றவற்றின் மூலம் வாதநோய் வருவதைத் தவிர்க்க முடியும்.</p> <h3>மன பிரச்சனைகள்</h3> <p style="text-align: justify;">மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவதும் நல்லது. உடலில் வாதநோயை உண்டாக்கும் நச்சுகள் சேராமல் இருக்கத் தகுந்த வைட்டமின் மாத்திரைகளையும் மூளை நரம்பியல் நிபுணரின் ஆலோசனையுடன் உட்கொள்வது நல்லது.</p> <h3>மலச்சிக்கல்</h3> <p style="text-align: justify;">மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும், மலம் கழிக்கும்போது அதிக சிரமப்படாமல் இருப்பதும் அவசியம். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மூக்கு அடைப்பைப் போக்கப் பயன்படுத்தும் மூக்கு சொட்டு மருந்துகள், அலர்ஜி நீக்கி மருந்துகள் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் பெறுவது நல்லது. இந்த அம்சங்களைக் கடைப்பிடித்தால் வாதநோயை விலக்கி வைக்கலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: ஒன்இந்திய நாளிதழ்</p> </div>