<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு ஆளுமை செய்யப்படுகிற ஒரு மருத்துமனையின் தூய்மைப்படுத்தும் துறை நன்றாக செயல்படுமானால் மருத்துவமனையின் செலவீனங்கள் வெகுவாக குறைக்கப்படும். தூய்மைப்படுத்தும் துறை மோசமானதாக இருக்குமானால் செவிலி பராமரிப்பு பாதிக்கப்படும், செவிலியர் கல்வி வெகுவாக பாதிக்கப்படும், திறமைகள் குறைக்கப்படும், மனோதிடம் முற்றிலுமாக பாதிக்கப்படும்.</p> <h3 style="text-align: justify;">நல்ல தூய்மைக்கும், பராமரிப்புக்குமான அடிப்படைக் கொள்கைகள்</h3> <ul style="text-align: justify;"> <li>துடைத்தல் : ஈரத்துணி கொண்டும் வழுவழுப்பை ஏற்படுத்தக்கூடிய துணி கொண்டும் துடைக்கப்பட வேண்டும்.</li> <li>உலர்ந்த துணிகொண்டு துடைக்கும் போது தூசிகள் பரவுகிறது. அறைகள் பெருக்கிய பின்பே துடைத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். சுத்தம் செய்வதற்கு சோப்பு மற்றும் நீர் பயன்படுத்தப்பட வேண்டும்.</li> <li>இயந்திர முறையில் சுத்தம் செய்வதற்கு தேய்த்துக் கழுவுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளங்கள் உள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்கு பிரஸ்களை பயன்படுத்தவும்.</li> <li>சிராய்ப்பை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தும் போது வர்ணங்கள் மற்றும் வழ வழப்பான பொருட்களுக்கு தீங்கு விளைவிக்கும். இரத்தத்தின் நீர்பாகம் (உ. தா. உடலில் இருந்து வரும் ஒழுக்குகள்) சூடு படுத்தும் போது கெட்டியாகி விடும். ஆகவே இவை போன்றவை குளிர்நீர் கொண்டு அகற்றப்பட வேண்டும். கிருமிகள் இருட்டான, ஈரமான மற்றும் தூய்மையற்ற இடங்களில் நன்றாக வளரும்.</li> <li>சில கிருமிகள் சூரிய வெப்பத்தில் அழிக்கப்படும். பாத்திரத்தின் தூய்மையை பொறுத்தே இராசயன தொற்று நீக்கம் அமையும். தொற்று நீக்கியின் வலிமை மற்றும் திறந்து வைக்கப்படும் நேரத்தை பொறுத்தது.</li> <li>பாத்திரத்தின் தூய்மையை பொறுத்தே நுண்ணியிரச் செய்தல் திறமையாக அமையும். வெப்பத்தின் அளவு மற்றும் திறந்து வைக்கப்படும் நேரத்தை பொறுத்தது.</li> <li>வெப்பம், இரசாயனம், தேய்த்தலுக்கு உபயோகப்படும் பொருள் மற்றும் கரைசல் போன்றவை சில பொருட்களுக்கு ஊறு விளைவிக்கும்.</li> <li>தூய்மைப்படுத்துவதற்கு சரியான முறையை தெரிவு செய்வதன் மூலம் காலம், நேரம், கருவி மற்றும் முயற்சியை சிக்கனம் செய்யலாம். எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறோமோ அந்த பொருள் நல்ல நிலையிலும், சரியான இடத்திலும் வரிசைப்படுத்துவதன் மூலம் நேரத்தையும், கருவியையும், முயற்சியையும் சிக்கனப்படுத்தலாம்.</li> <li>தூய்மை செய்யப்பட்ட கருவி, தூய்மையான இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">தூய்மை மற்றும் ஒழுங்கு நிலை</h3> <p style="text-align: justify;">தூய்மையும், ஒழுங்கும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. நோயாளி பிரிவின் தூய்மைக்கு செவிலியர் தான் முழுப்பொறுப்பு. கையுறைகளில் காற்று அடைத்து அவைகளை நீரில் அமிழ்த்துவதன் மூலம் ஓட்டைகள் அல்லது கிழிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை அகற்றவும். காய்வதற்காக தொங்க விடவும். உட்புறம், பின் வெளிப்புறம் திருப்பி காயவைக்கவும். இரண்டு பகுதிகளும் காய்ந்த பின், வெளிப்புறமும், உட்புறமும் பவுடர் இடவும். சரியான அளவிலான கையுறைகள் சரியான ஜோடியுடன் சேர்க்கவும். உயர் அழுத்த நீராவியை பயன்படுத்தி கையுறைகளை நுண்ணுயிரச் செய்யவும்.</p> <h3 style="text-align: justify;">இரப்பர் குழாயின் பராமரிப்பு</h3> <p style="text-align: justify;">நம்முடைய சிறப்பு தேவைகளுக்கு ஏற்ப குழாய்கள் வெவ்வேறு அளவுகளிலும், தரத்திலும் உள்ளது.</p> <p style="text-align: justify;">இரப்பர் குழாய்களை தூய்மையாக்கல் : உபயோகித்த பின் ஓடும் நீரில் கழுவவும். துளைப்பகுதியில் சிறிது கழிவுப் பொருட்கள் காணப்படலாம் அதனை பஞ்சு சுற்றிய குச்சி கொண்டு அகற்றவும். சோப்பு, நீரும் கொண்டு கழுவவும். மீண்டும் ஓடும் நீரில் அலசவும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு கொதிக்க வைக்கவும். தொங்க விடுதலின் மூலம் உலர்த்தவும். காய்ந்தபின் பவுடர் போட்டு. அவற்றை காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். பயன்படுத்துவதற்கு முன் திரும்ப கொதிக்க வைக்கவும் அல்லது உயர் அழுத்தத்திற்கு உட்படுத்தவும்.</p> <h3 style="text-align: justify;">எனாமல் பொருட்களின் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">பயன்படுத்தப்படும் சில எனாமல் பொருட்கள் : படுக்கை, கழிகலம், சிறுநீர்கலம், கழிவுத்தட்டு எச்சில் கோப்பைகள், ஊட்டும் கோப்பைகள் மற்றும் தட்டுகள்.</p> <p style="text-align: justify;">படுக்கை கழிகலத்தை பராமரித்தல் : படுக்கை கழிகலத்தின்னை சுத்தம் செய்யம் முன் அதனில் உள்ள மலத்தை கவனிக்கவும். அதில் பஞ்சுகள் அல்லது துணிகள் ஆகியவை இருக்குமானால் அதனை இடுக்கிகளை பயன்படுத்தி அகற்றவும். கழிப்பறையில் கழிகலனை காலி செய்யவும். படுக்கை கழிகலத்தை ஒடும் குளிர் நீரில் அலசவும். பிரஷ்சை பயன்படுத்தி சோப்பும், வெதுவெதுப்பான நீரும் கொண்டு கழுவவும். படுக்கை கழிகலனை தொற்று நீக்கம் செய்வதற்கு லைசால் 1:40 பயன்படுத்தவும். படுக்கை கழிகலன்கள் சூரிய வெளிச்சத்தில் சிலமணி நேரம் வைக்கவும். மீண்டுமாக பயன்படுத்துவதற்காக கழிகலன்களை உலர்த்தி சட்டங்களில் வைக்கவும்.</p> <h3 style="text-align: justify;">ஊசிக்குழாய்களும், ஊசிகளின் பாதுகாப்பும்</h3> <p style="text-align: justify;">மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கண்ணாடிப் பொருட்களில் ஊசிக்குழாய்கள் விலையுயர்ந்தது. ஊசிக்குழாய்களை உடனடியாக கழுவுவதன் மூலம் ஊசிக்குழாய், அழுத்தி ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்வதை தவிர்க்கலாம். ஊசிக்குழாய் நீண்டநாள் உழைக்க பயன்படும். ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்ட ஊசிக் குழாய்களையும், அழுத்தியையும் 25% கிளிசரின் அக்வாஸ் கரைசலில் போட்டு பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். சரியான எண்ணுள்ள ஊசியையும் அழுத்தியையும் சரியாக ஜதைபடுத்தவும். கண்ணாடி ஊசிக்குழாய்களை நுண்ணுயிறச் செய்வதற்கு வெப்பக்காற்றை உட்செலுத்தும் முறை சிறந்தது.</p> <p style="text-align: justify;"><strong>நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்</strong></p> <ol style="text-align: justify;"> <li>பயன்படுத்தியபின் ஊசியை, ஊசிக்குழாயில் பொருத்தி குளிர்நீரில் அமிழ்த்தவும்.</li> <li>மிதமான சூட்டில் கழுவவும்.</li> <li>ஊசிகளில் அடைப்பு இருக்குமானால் சிறிய கம்பியை பயன்படுத்தி அடைப்பை அகற்றவும்.</li> <li>ஊசிகளை 10 முதல் 20 நிமிடத்தில் நுண்ணுயிரறச் செய்யவும்.</li> </ol> <h3 style="text-align: justify;">துருப்பிடிக்காத சாமான்களின் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">துருப்பிடிக்காத சாமான்கள் எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் அவை எளிதில் தூய்மையாக்கவும், வெப்பத்தை எதிர்க்கும் சக்தியும் மற்றும் எளிதில் உடையாமலும் இருக்கும்.</p> <h3 style="text-align: justify;">துணிகளின் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">துணிகளை பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஏனெனில் அவை விலையுயர்ந்தது.</p> <p style="text-align: justify;">விதிகள்</p> <ul style="text-align: justify;"> <li>துணிகள் அலமாரியில் சரியான வரிசையில் இருக்குப்படியாக பார்த்துக்கொள்ளவும்.</li> <li>பயன்படுத்தப்படாதபோது அலமாரி பூட்டி இருக்கப்படவேண்டும்.</li> <li>நோயாளி துணிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.</li> <li>குறிப்பிட்ட இடைவெளிகளில் இருப்பு சரிபார்க்கப்படவேண்டும். எவைகளுக்காக அந்த துணி அமைக்கப்பட்டதோ அதற்காக மட்டும் பயன்படுத்தவும். கிழிந்த துணிகள் படுக்கைக்கு பயன்படுத்தக் கூடாது அவை சரிசெய்வதற்கு அனுப்பப் படவேண்டும். அழுக்கான துணிகளை தரையில் போடவேண்டாம். ஈரமான துணிகள் தாமதமின்றி உலர்த்தப்படவேண்டும். மலத்தினாலோ, சிறுநீரினாலோ ஈரமாக இருந்தால் அவை குளிர் நீரில் கழுவப்படவேண்டும். கறைகளை நீக்கவும். கறைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்குமானால் பழைய துணிகளை பயன்படுத்தவும்.</li> <li>தொற்றுள்ள துணிகள் முதலாவது தொற்று நீக்கம் செய்யப்படவேண்டும். துணிகள் ஈரமாவதை தடுப்பதற்கு இரப்பர் துணிகளை பயன்படுத்தவும்.</li> <li>கிழிசல்கள் உள்ளதா என்று பரிசோதிக்கப்படவேண்டும். உடனடியாக அவைகள் சரிசெய்யப்படவேண்டும். சூரிய வெளிச்சத்திற்கு திறந்து வைப்பதன் மூலம் தொற்று நீக்கம் செய்யப்படவேண்டும். தலையணைகள் இரத்தம் மற்றும் உடல் ஒழுக்குகளினால் ஈரமாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.</li> <li>அவைகள் இரத்த ஒழுக்குள்ள அல்லது வாந்தி எடுக்கக் கூடிய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் போது இரப்பர் துணியால் பாதுகாக்கப்படவேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">நோயாளியின் பகுதி பராமரிப்பு</h3> <p style="text-align: justify;">தரை பராமரிப்பு - நல்ல தரமுள்ள துடைப்பான் கொண்டு தரை துடைக்கப்படவேண்டும். வேக்யூம் கிளீனர்கள் (Vaccum Cleaners) பயன்படுத்தப்படலாம். அதிகமாக தரைகள் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவப்படுகிறது. மரதரைகள் நல்லமுறையில் பாலீஸ் செய்யப்பட வேண்டும். அவை தினமும் துடைக்கப்படவேண்டும். தண்ணீர் உடனடியாக துடைத்தெடுக்கப் படவேண்டும். சிமெண்ட் தரைகள் வென்னீர் மற்றும் நீர்த்த சோடியம் கார்பனேட் திரவம் கொண்டு சுத்தம் செய்யப் படவேண்டும். மொசேக் தரைகள் நீர்த்த காரதிரவமான சோடா, சோடா பை கார்பனேட் கொண்டு துடைக்கப்படவேண்டும்.</p> <p style="text-align: justify;">சுவர்களின் பராமரிப்பு - சிமெண்ட் மற்றும் மார்பிள் சுவர்கள் தரைக்கு செய்தது போல சுத்தம் செய்யப்படவேண்டும்.</p> <p style="text-align: justify;">வர்ணம் பூசப்பட்ட சுவர்கள் : வலுவான கார் திரவம் கொண்டு சுவர்களை தூய்மை செய்யக்கூடாது. வர்ணம் பூசப்பட்ட பகுதிகள் கவனமாக கழுவி உலர்த்தப்படவேண்டும்.</p> <p style="text-align: justify;">தினசரி சுத்தம் செய்தல் - நோயாளியின் பிரிவு தூய்மையாக இருக்க ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பெருக்கப்பட்டு, துடைக்கப்படவேண்டும். மேஜை, நாற்காலி, கட்டில் போன்ற பொருட்கள் நகர்த்தப்பட்டு அவற்றின் அடியில் உள்ள தூசுகள் அகற்றப்பட வேண்டும். பெருக்கியபின்பு எல்லா பொருட்களும் ஈரத்துணி கொண்டு துடைக்கப்பட்டு தொற்று நீக்கிகொண்டு துடைக்கப்படவேண்டும்.</p> <p style="text-align: justify;">வாரம் ஒருமுறை சுத்தம் செய்தல் - ஒவ்வொரு வாரமும் அறையின் உட்கூரைகள் ஒட்டடை அடிக்கப்படவேண்டும். ஈரத்துணி கொண்டு மின் விசிறிகள் துடைக்கப்பட வேண்டும். எல்லா மரச் சாமான்களும் தேய்த்து கழுவப்பட்டு தொற்று நீக்கி கொண்டு துடைக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">சுகாதாரத்தை பேணும் அறைகளின் பராமரிப்பு</h3> <p style="text-align: justify;">மருத்துவமனை பிரிவுகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சுகாதாரத்தை பேணும் அறைகளாவன. குளியலறை, கழிப்பறை, கை கழுவும் இடங்கள், படுக்கை கழிகலன்களும், சிறுநீர் தொட்டிகளும் வைக்கப்படக்கூடிய இடங்களாகும்.</p> <ul style="text-align: justify;"> <li>குளியலறை - தரைகள் தேய்க்கப்பட்டு, தினமும் கழுவப்படுதல் மூலம் வழுக்குவதை தவிர்க்கலாம். குளியலறையில் நீர் தேங்கி இருக்கக் கூடாது.</li> <li>கழிப்பறை - கழிப்பறை கோப்பை விம் அல்லது கேன் பிரன்ச் கொண்டு பிரஷினால் கறைகள் நீங்க சிறிது அமிலத்தை பயன்படுத்தி கழுவி நீக்கப்பட வேண்டும். நோயாளியும் அவரது உறவினரும் கழிப்பறைகளை சரியான முறையில் பயன்படுத்தும் படி கற்பிக்கப்படவேண்டும்.</li> <li>கைகழுவுமிடம் - நோயாளிகள் உணவு பதார்த்தங்களை கழுவும் கோப்பைகளில் விட்டுச் செல்வதால், அக்கோப்பையில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புண்டு. அவைகளை கோப்பைகளில் எறியக் கூடாது என்று அறிவுறுதப் பட வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">தொகுப்பு</h3> <p style="text-align: justify;">நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, ஆளுமை செய்யப்படுகிற ஒரு மருத்துவ மனையின் தூய்மைபடுத்தும் துறை நன்றாக செயல்படுமானால் மருத்துவமனையின் செலவீனங்கள் வெகுவாக குறைக்கப்படும். பொருட்களை சரியான முறையில் நுண்ணுயிரச் செய்வதற்கு எவ்வளவு அளவு வெப்பமும், எவ்வளவு நேரம் திறந்து வைக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அமைகிறது. இரப்பர் பொருட்கள் செயற்கை வெப்பத்தின் மூலமும், மின் அடுப்பு மற்றும் அடுப்புகளின் மூலம் உலர்த்தப் படக் கூடாது. ரப்பர் துணிகளை தொற்று நீக்கம் செய்வதற்கு லைசால் அல்லது டெட்டால் 1: 40 கரைசலை பயன்படுத்தவும். கையுறைகளில் உள்ள கீழிசல்களும் துளைகளும் அவ்வுறைகளில் காற்று அடைக்கப்பட்டு தண்ணீரில் மூழ்க வைப்பதன் மூலம் கண்டறியப்பட வேண்டும். உயர் அழுத்த நீராவியில் உட்படுத்துவதன் மூலம் கையுறைகள் நுண்ணுயிரச் செய்யப்படுகிறது. கொதிக்கும் நீரில் ரப்பர் குழாய்கள் 5 நிமிடம் கொதிக்கவைப்பதன் மூலம் அவை நுண்ணுயிரச் செய்யப்படுவது. கண்ணாடி ஊசிக் குழல்கள் உயர் அழுத்த வெப்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நுண்ணுயிரச் செய்யப்படுவது சிறந்தது. ஊசிகள் 10-20 நிமிடம் நுண்ணுயிரச் செய்யப் படவேண்டும். துணிகளில் கறைகளை நீக்குவதற்கு சம அளவு ஹைடிரஜன் பெராக்ஸைடையும் நீர்த்த அமோனியாவையும் பயன்படுத்தி கறைகள் நீங்கும் வரை ஈரப்படுத்தப் படவேண்டும். மொசைக் தரைகள் நீர்த்த கார் கரைசலான சோடா, சோடாபை கார்பனேட் போன்றவைகளை பயன்படுத்தி சுத்தப் படுத்தப்படவேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்</p> </div>