<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">அறிமுகம்</h3> <p style="text-align: justify; ">இயல்பாக இருக்க வேண்டிய விழிப்பாவைப் பகுதியில் கண்ணின் படிக வில்லை இல்லாமல் இருக்கும் நிலையே விழிவில்லையின்மை எனப்படும். ஒன்றில் படிக விழிவில்லை கண்ணுக்குள் இருக்காது அல்லது பிறழ்ச்சி/கீழ்ப்பிறழ்ச்சி அடைந்த நிலையில் இருக்கும். இது ஒரு ஒளிவிலகல் நிலையை ஏற்படுத்தும் ஆனால் இது ஒரு விலகல் பிழை அல்ல. இயல்பான ஒளிவிலகல் அல்லது குறைந்த விலகல் பிழையைக் கொண்ட ஒரு கண், கண் புரை அறுவைக்குப் பின் மிகை எட்டப்பார்வை கொண்டதாக மாறுகிறது. ஏற்கெனவே இயல்பு விலகல் கொண்ட கண்ணுக்கு வழக்கமான நிலையில் அணியும்போது கண்ணாடியில் 10-11 டயோப்டர் சீரமைப்பு தேவைப்படும்.</p> <p style="text-align: justify; ">படிக வில்லைக்குப் பதில் கண்ணாடி வில்லையை மாற்றும் போது படிக வில்லையில் இயல்பாக விழும் பிம்பத்தை விட ஏறக்குறைய 25% பெரிய பிம்பம் நோயாளியின் விழித்திரையில் விழுகிறது. சரியான உருப்பெருக்கம் போலி வில்லையின் திறன் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. கண்ணாடியின் ஒவ்வொரு டயோப்டர் திறனுக்கும் ஏறக்குறைய 2% உருப்பெருக்கம் உள்ளது.</p> <p style="text-align: justify; ">அஃபேக்கா எனும் சொல் (<b>Aphakia=விழிவில்லையின்மை</b>) இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது (அ=இல்லை; ஃபேகோஸ்=வில்லை). உடற்கூற்றியல் மற்றும் விழி நிலைகளை இது குறிக்கிறது.</p> <p style="text-align: justify; ">வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் (1855) விழிவில்லையின்மைக் குறைபாட்டின் கண்ணியலை ஆய்ந்தார். பெனிட்டோ தாஸா வேல்ட்ஸ் (1623) விழிவில்லையின்மைக் குறைபாட்டைக் கண்ணாடி மூலம் நிவிர்த்தி செய்யலாம் என்று கூறினார்.</p> <h3 style="text-align: justify; ">நோயறிகுறிகள்</h3> <p style="text-align: justify; ">விழிவில்லையின்மையால் ஏற்படும் அறிகுறிகள்:</p> <ul style="text-align: justify; "> <li>சரிசெய்யப்படாத பார்வை குறைதல்.</li> <li>குவிதிறன் இன்மை (விழிவில்லையின்மையால் கண்ணின் தன்னமைவு இழப்பின் காரணமாக).</li> </ul> <h3 style="text-align: justify; ">காரணங்கள்</h3> <p style="text-align: justify; ">விழிவில்லையின்மைக்கான காரணங்கள்:</p> <ul style="text-align: justify; "> <li><b>அறுவை மூலம் விழிவில்லை அகற்றல்</b>: அறுவையின் மூலம் படிக வில்லை அகற்றப்படலே பொதுவான வகை.</li> <li><b>பிறவியிலேயே வில்லையின்மை</b>: அரிதாகப் பிறவியிலேயே வில்லை இல்லாமல் இருத்தல்.</li> <li><b>வில்லைப்பொருள் உட்கிரகிக்கப்படல்:</b> குழந்தைகளில் காயத்தின் காரணமாக அரிதாக வில்லைப் பொருள் கிரகிக்கப்படக் கூடும்.</li> <li><b>காயத்தால் வில்லை வெளித்தள்ளப்படல்</b>: அரிதாகக் காயங்களின் காரணமாக விழி வில்லை வெளித்துருத்தப்படலாம்.</li> <li><b>வில்லைப் பின்னிடமாறல்</b>: கண்ணிர்மப் பகுதிக்கு இடம் பெயர்ந்து விழிவில்லையின்மை என்னும் நிலையை உண்டாக்கலாம்<b>.</b></li> <li><b>இடம்பெயர் வில்லையோடு தொடர்புடைய பாரம்பரியக்கோளாறுகள்</b>: இவை பின்வருவன ஆகும்:</li> </ul> <p style="text-align: justify; ">- மார்ஃபன் நோய்த்தாக்கம்</p> <p style="text-align: justify; ">- வெய்ல்-மார்ச்செசானி நோய்த்தாக்கம்</p> <p style="text-align: justify; ">- ஹோமோசிஸ்டினியூரியா</p> <p style="text-align: justify; ">- சல்ஃபைட் ஆக்சிடேஸ் குறைபாடு</p> <ul style="text-align: justify; "> <li><b>கீழ்ப்பிறழ்வு வில்லைகளோடு இணைந்த மரபியல் கோளாறுகளில் அடங்குவன</b>:</li> </ul> <p style="text-align: justify; ">- விழி சுருக்குத் தசை இன்மை</p> <p style="text-align: justify; ">- எஹ்லெர்ஸ்-டன்லாஸ் நோய்த்தாக்கம்</p> <p style="text-align: justify; ">- முகமண்டை எலும்புவளர்ச்சிக் கோளாறு</p> <p style="text-align: justify; ">- அல்போர்ட் நோய்த்தாக்கம்</p> <p style="text-align: justify; ">- வெண்படலப் பெருக்கம்</p> <ul style="text-align: justify; "> <li><b>கீழ்ப்பிறழ்வை உருவாக்கும் கண் நோய்களில் அடங்குவன</b>:</li> </ul> <p style="text-align: justify; ">- மிகைமுதிர்வுக் கண்புரை</p> <p style="text-align: justify; ">- மாட்டுவிழி</p> <p style="text-align: justify; ">- வில்லை உரிதல் நோய்த்தாக்கம்</p> <p style="text-align: justify; ">- உள்விழிக் கட்டிகள்</p> <p style="text-align: justify; "><b>விழிவில்லையின்மையின் கண்ணியல்:</b></p> <ul style="text-align: justify; "> <li><b>கண்ணியல் மாற்றங்கள்</b>: படிக வில்லை அகற்றப் பட்ட பின் ஏற்படும் மாற்றங்கள்:</li> </ul> <p style="text-align: justify; ">- கண், மிகைத் தூரப்பார்வை கொண்டதாக இருக்கும்: மொத்தத் திறன் 44 டி (படிக வில்லை கொண்ட கண்ணின் திறன் ஏறக்குறைய 60 டி)</p> <p style="text-align: justify; ">- முன் மற்றும் பின் குவியப் புள்ளிகள் முறையே 23 மி.மீ மற்றும் 31 மி.மீ.</p> <p style="text-align: justify; ">- வெண்படலத்தின் முன் பரப்பின் அருகில் இரு முக்கியப் புள்ளிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கி இருக்கும்.</p> <ul style="text-align: justify; "> <li><b>பிம்பம் உருவாதல்</b>: கண்ணாடியால் சரிசெய்யப்படும் விழிவில்லையின்மையிலும் தொடுவில்லையால் சரிசெய்யப்படும் விழிவில்லையின்மையிலும் பிம்பத்தின் அளவு மாறுபடும்.</li> </ul> <p style="text-align: justify; ">- கண்ணாடியால் சரிசெய்யப்படும் விழிவில்லையின்மை: 25 % உருப்பெருக்கம்.</p> <p style="text-align: justify; ">- தொடுவில்லையால் சரிசெய்யப்படும் விழிவில்லையின்மை: குறைந்த உருப்பெருக்கம் (6-8 %).</p> <ul style="text-align: justify; "> <li><b>பார்வைக் கூர்மை</b>: பிம்பம் பெரிதாக இருப்பதால் கண்ணாடியால் சரிசெய்யப்படும் விழிவில்லையின்மை சிறந்ததாகக் காணப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பார்வை, உண்மையான பார்வைக் கூர்மையை விட கொள்கை அளவில் சிறப்பாகத் தோன்றுகிறது.</li> <li><b>இருவிழிப்பார்வை</b>: 5% கீழ் இருக்கும் சமமற்ற விழித்திரை பிம்பம் இருவிழிப்பார்வையால் முழுமை அடைகிறது. இயல்பான இருவிழிப்பார்வை வளர்ச்சிக்கு சமமற்ற விழித்திரை பிம்பம் கேடானது.</li> <li><b>இரட்டைப்பார்வை</b>: அறுவை செய்யப்படாத கண்ணில் இயல்பான பார்வைத்திறன் கொண்ட ஒரு நோயாளி (நன்கு வளர்ச்சி பெற்றவர்) இருவிழி ஒற்றைப் பார்வை பெற சிரமம் அடைவார். இரட்டைப் பார்வைப் பிரச்சினை ஏற்படும்.</li> <li><b>அழுத்தமுறும் பார்வைத் தெளிவின்மை</b>: இது ஒரு கண்ணில் விழிவில்லையின்மை கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படும். அறுவை சிகிச்சை பெற்ற கண்ணில் விலகல் ஏற்படலாம்.</li> <li><b>கண் தன்னமைவு:</b> படிக வில்லை இல்லாத போது முழுமையாக கண் தன்னமைவு இழப்பு நேரிடலாம். இதனால் நோயாளிக்கு இருகுவிய அதிகரிக்கும் அல்லது தனி இணைக் கண்ணாடிகள் தேவைப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify; ">நோய் கண்டறிதல்</h3> <p style="text-align: justify; ">நோயறிகுறிகளையும், நோய்க்குறிகளையும் பொறுத்து நோய்கண்டறிதல் <span style="text-align: justify; ">அமையும்.</span></p> <p style="text-align: justify; "><b>விழிவில்லையின்மை நோய்க்குறிகள்:</b></p> <ul style="text-align: justify; "> <li><b>விழித்திரைமானி</b>: உயர் அளவைக் காட்டுகிறது</li> </ul> <ul style="text-align: justify; "> <li><b>பர்க்கின்ஜே பிம்பம்</b>: வெண்படலத்தில் இருந்து இரு பர்க்கின்ஜே பிம்பங்களே எழுகின்றன. வில்லைப்பரப்பில் இருந்து வருவன இல்லை.</li> <li><b>லிம்பசில் வடு</b>: அறுவையால் ஏற்பட்ட விழிவில்லையின்மை நிலையில் லிம்பசில் வடு காணப்படும்.</li> <li><b>முன் அறை:</b> வில்லை இல்லாததால் விழி முன்னறை ஆழமாகக் காணப்படும்.</li> <li><b>பாவை:</b> வில்லை இல்லாததால் மிகவும் கருப்பாக இருக்கும்.</li> <li><b>கருவிழியதிர்வு</b>: விழிவில்லையின் ஆதரவு இன்மையால் கருவிழி அதிர்தல்.</li> <li><b>விழியடி</b>: எட்டப்பார்வை விழியடியையும் சிறு கண் தகட்டையும் சோதனைகள் காட்டுகின்றன.</li> </ul> <h3 style="text-align: justify; ">நோய் மேலாண்மை</h3> <p style="text-align: justify; ">மருத்துவக் <b>கண்காணிப்பின் கீழேயே நோய் மேலாண்மை செய்தல்வேண்டும்.</b></p> <p style="text-align: justify; "><b>மருத்துவக் கண் சிகிச்சை:</b></p> <p style="text-align: justify; ">பொருத்தமான குழியாடிகளைப் பரிந்துரைப்பதே இதற்கான சிகிச்சை.</p> <ul style="text-align: justify; "> <li><b>கண்ணாடிகள்</b>: ஏற்கெனவே இயல்பாக இருந்த கண்ணில் அறுவையால் ஏற்பட்ட சிதறல் பார்வைக்கு பொருத்தமான உருளைத் திறனோடு +10 டி சிரமைப்பு பொதுவாகத் தேவைப்படும். தனிநபருக்கு ஏற்ப ஆடித் திறன் மாறும். கிட்டப்பார்வைக்கு மேலும் திறன் கூட்டப்பட வேண்டும். கோளவுருவற்ற, இருபுறக்குவிய அல்லது முழுக்கள வில்லைகள் போன்ற பல வடிவில் வில்லைகளைக் கொண்ட கண்ணாடிகள் விழிவில்லையின்மை குறைபாட்டுக்கு பரிந்துரைக்கப்படும். கண்ணாடிகளால் ஏற்படும் பலன்:</li> </ul> <p style="text-align: justify; ">- <b>பிம்ப உருப்பெருக்கம்</b>: 25% அளவுக்கு பிம்பம் உருப்பெருக்கம் அடையும். ஒரு பக்க விழிவில்லையின்மை இருந்தால் கண்ணாடிகள் இரட்டைப் பார்வையை உருவாக்கும். பிம்பம் பெரிதாக இருந்தால் அது கண்ணுக்கு அருகில் இருப்பதாகக் கொள்ளப்படும். உருப்பெருக்கம் காரணமாகக் கண்னும் கையும் ஒத்திசைந்து செயல் புரிய வேண்டியது அவசியம். படிகளில் ஏறுவது சிரமமாக இருகும்.</p> <p style="text-align: justify; ">- <b>படிகப் பிறழ்ச்சிகள்</b>: இது <b>அசையும் வளையஇருண்மையை</b> உருவாக்குகிறது. இது பொதுவாக <b>பெட்டிக்குள்ஜாக் நிகழ்வு</b> என விளக்கப்படுகிறது. இந்தப் படிக விளைவு சீர்செய்யும் வில்லையின் விளிம்புப் பகுதியால் நிகழ்கிறது. இது ஒரு வளைய இருண்மையை உருவாக்குகிறது. நோயாளி ஒரு பொருளைப் பார்த்து அதை நோக்கி கண்ணைத் திருப்பும் போது இந்த இருண்மை உள்நோக்கி நகர்ந்து பொருளை மறைக்கும். பொருளில் இருந்து கண்ணை நகர்த்தும் போது இந்த இருண்மை மீண்டும் நகர்வதால் பொருள் கண்ணுக்குப் புலனாகும்.</p> <p style="text-align: justify; ">- <b>கோளப் பிறழ்ச்சி</b>: பொருளை விளிம்பின் வழியாகப் பார்க்கும் போது அது ஆரத்திசையில் பெரிதாக, அருகே மற்றும் நீண்டு காணப்படும். குண்டூசிக்குத்தி (பின் குஷன்) விளைவால் திரிபு உருவாகிறது. அனைத்துக் கூட்டல் திறன் வில்லைகளும் அதன் டயோப்டெர்க் திறனுக்கு ஏற்ப இந்த இயல்பைக் கொண்டு இருக்கும். இந்தத் திரிபால் ஒரு சதுரம் குண்டூசிக் குத்தி போல் தோன்றும். சதுரத்தின் மூலைகள் நீள் தோற்றத்துடன் காணப்படும். பக்கங்கள் உள்நோக்கித் தள்ளப்பட்டிருக்கும். உலகம் பரவளையமாகி கண் நகர்வுக்கு ஏற்ப அதன் வடிவத்தை மாற்றும். பொருள் வேகமாக நகர்வது போல் தோன்றும். வாகனம் ஓட்டுவது கடினமாகும்.</p> <p style="text-align: justify; ">- <b>பார்வைப் புலம்</b>: ஒருவிழி மற்றும் இருவிழிப் பார்வைப் புலம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும். கண்ணாடி வழியாக உண்மையான பார்வைப் புலம் 25% குறையும். இதனால் விளிம்புப் புலத்தைப் பெரும் அளவில் பார்க்க இயலாது.</p> <p style="text-align: justify; ">- <b>நிறப் பார்வை</b>: பார்வையில் நிறச் சாயல் தென்படும். படிக வில்லையின் இயற்கையான வடிகட்டுதல் இன்மையே இதற்குக் காரணம். படிக வில்லையை அகற்றுவதால் நீலம் மற்றும் ஊதா ஒளி பரவல் அதிகரிக்கிறது.</p> <p style="text-align: justify; ">- <b>கட்டிக் கண்ணாடிகள்</b>: கண்ணாடிகள் கட்டியும் பளுவும் ஆனவை. இருகுவிய கண்னாடிகள் குறிப்பாக சரிசெய்ய கடினமானவை. இரு தனி இணைகள் தேவைப்படலாம்.</p> <ul style="text-align: justify; "> <li><b>தொடுவில்லைகள்</b>: வெண்படல பரப்பில் வில்லையின்மையை சீர்செய்ய தொடுவில்லைகள் தேவைப்படுகின்றன. பார்வை சீர்செய்ய வேண்டிய இடம் விழித்திரைக்கு அருகில் அமையுமானால், தேவைப்படும் டயோப்ட்ரிக் திறன் அதிகரிக்கும். அதே வேளையில் அதன் விளைவான உருப்பெருக்கம் குறையும். வில்லையின்மை கண்ணாடியில் 12.5 டி தேவைப்படும் நோயாளிக்கு மென்விறைப்பு தொடுவில்லையில் 14.7 டி தேவைப்படும். வெண்படல பரப்பில் உருப்பெருக்கம் 6-8 %. சீரற்ற உருவத் தோற்ற எல்லையின் மதிப்பு இது என்பதால் ஒருபக்க வில்லையின்மை நோயாளிக்கு இருவிழிப்பார்வை காணப்படும். கண்ணாடிகளை விட தொடுவில்லைகளுக்கு சில அதிக சாதகங்கள் உள்ளன.</li> </ul> <p style="text-align: justify; ">- அதிக, சிறந்த பார்வைப்புலன்</p> <p style="text-align: justify; ">- தொடுவில்லை வெண்படலத்துக்கு அருகில் இருப்பதால் குறைந்த உருப்பெருக்கம்.</p> <p style="text-align: justify; ">- ஒருபுற வில்லையின்மைக்கு மிகவும் உகந்தது.</p> <p style="text-align: justify; ">- கோள திரிபையும் படிக விளைவையும் நீக்குகிறது.</p> <p style="text-align: justify; ">- தோற்றப் பொலிவுக்கும் சிறந்தது.</p> <p style="text-align: justify; ">இருப்பினும் முதியவர்களுக்கு அணிவதில் இலாவகம் இல்லாமல் இருப்பதால் அயல் பொருள் உணர்வு உறுத்தல் அளிக்கும்.</p> <p style="text-align: justify; "><b>அறுவை சிகிச்சையில் அடங்குவன</b>:</p> <ul style="text-align: justify; "> <li><b>உட்கண் வில்லை பொருத்துதல்</b>: வில்லையின்மைக் குறைபாட்டுக்கு இதுவே சிறந்த தீர்வு. வெண்படல அளவியல் மற்றும் கண்கோள அச்சு நீளம் ஆகியவற்றைக் கொண்டு வில்லையின் திறன் கணிக்கப்படும். 12.5 டி வில்லையின்மைக் குறைபாட்டு கண்ணாடி தேவைப்படும் ஒரு நோயாளிக்கு கண் பின் அறை வில்லைத் திறன் 21 டி ஆக இருக்கும். இயற்கையான படிக வில்லையோடு ஒப்பிடும் போது ஒரு பின் கண் அறை வில்லையின் சராசரி உருப்பெருக்கம் 1.5 % ஆகும். ஒரு கண்ணில் போலிவில்லையும் மறுகண்ணில் இயற்கை வில்லையின் மேல் பொருத்தும் வில்லையும் கொண்ட ஒருவருக்கு இருகண் பார்வை கிடைக்கும் சாத்தியக் கூறு உண்டு. கண்புரை அறுவையோடோ அல்லது பின்னர் தனியாகவோ உட்கண் வில்லையைப் பொருத்தலாம். உட்கண் வில்லையின் சாதகம்:</li> </ul> <p style="text-align: justify; ">- குறைவான பின் பராமரிப்பு</p> <p style="text-align: justify; ">- விரைவாக இருகண் பார்வை திரும்புதல்</p> <p style="text-align: justify; ">- குறைவான பிம்பக் குறைபாடு (வேறு வேறு பிம்பங்கள் தோன்றுதல்)</p> <p style="text-align: justify; ">- இயல்பான விளிம்புப் பார்வை</p> <ul style="text-align: justify; "> <li><b>விலகல் வெண்படல அறுவை</b> : வெண்படல மேலிடல் மற்றும் உள்ளிடல் போன்றவை மருத்துவ மனைகளில் பொதுவாக செய்யப்படுவதில்லை. தொடுவில்லைகள் போன்றே இதன் பலன் இருக்கும். நோயாளி பராமரிக்க வேண்டியதில்லை என்பது ஒன்றே அவற்றின் சாதகம். தொடுவில்லைகளும் உள்வில்லைகளும் நல்ல பலனை அளிக்கும்போது வில்லையின்மையை சீர்செய்ய அறுவை சிகிச்சை ஒரு சிறந்த முறையாக இருக்க முடியாது. இம்முறைகளில் அடங்குவன:</li> </ul> <p style="text-align: justify; ">- வெண்படல உள்ளிடல்: கொடையாளர் ஒருவரின் வெண்படலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வெண்படலத் திசு நோயாளியின் வெண்படல மடல் அடுக்குகளின் நடுவில் வைக்கப்படும்.</p> <p style="text-align: justify; ">- வெண்படல மேலிடல்: வெண்படல மேல்திசு அகற்றப்பட்டு கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட வெண்படலத் திசு தைக்கப்படும். ஒரு முதன்மை அல்லது இரண்டாம்நிலை உள்வில்லை பொருத்த முடியாத நிலையில் இருக்கும் முதியோர் அல்லது கண்நிலை தகுதி அற்றிருக்கும் ஒருவருக்கு செய்யப்படலாம். கண்கோளத்துக்குள் செல்லாததால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். இதே முறையைத் திரும்பச் செய்யவும் கூடும்.</p> <p style="text-align: justify; ">- மிகைத் தூரப்பார்வைக்கான லாசிக் சிகிச்சை</p> <p style="text-align: justify; "><b>நோய்முன்கணிப்பு</b>:</p> <p style="text-align: justify; ">வெண்படல வீக்கம், கட்டி கண்புள்ளி வீக்கம் அல்லது இரண்டாம் நிலை கண்ணழுத்தம் போன்ற சிக்கல்கள் இல்லாத நிலையில் வில்லையின்மை குறைபாட்டு நோய் முன்கணிப்பு பொதுவாக சிறப்பாக இருக்கும்.</p> <p style="text-align: justify; ">இருப்பினும், அதிக அளவு கிட்டப்பார்வையாளர்களில் அதுவும் பின் வில்லையுறை கிழிந்திருந்தால் வில்லையின்மைக் குறைபாடு விழித்திரை விடுபடல் ஆபத்தைக் கூட்டும்.</p> <p style="text-align: justify; ">ஆதாரம் : <a class="ext-link-icon external-link" href="https://ta.nhp.gov.in/" target="_blank" title="வெளி இணையதளம் ஒரு புதிய சாளரத்தில் திறக்கிறது">தேசிய சுகாதார இணையதளம்</a></p> </div>