<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">அறிமுகம்</h3> <p style="text-align: justify; ">இது நடுச் செவியில் ஏற்படும் அழற்சியாகும். சில வேளைகளில் காதில் ஏற்படும் தொற்று, நுண்ணுயிர்க்கொல்லிகள் தேவைப்படும் அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் இது பரவலாகக் காணப்படும். காதுத் தொற்று யாருக்கும் ஏற்படும் என்றாலும், 6-18 மாதக் குழந்தைகளுக்கு அதிகமாக உண்டாகிறது.</p> <h3 style="text-align: justify; ">நோயறிகுறிகள்</h3> <p style="text-align: justify; ">இடைச்செவி அழற்சியின் முக்கியக் காரணங்களில் அடங்குவன:</p> <ul> <li style="text-align: justify; "><span>காதுவலி</span></li> <li style="text-align: justify; "><span>அதிகக் காய்ச்சல்: 38°C (100.4°F) அல்லது அதிகம்</span></li> <li style="text-align: justify; "><span>ஆற்றல் குறைதல்</span></li> <li style="text-align: justify; "><span>சற்று காதுகேளாமை</span></li> <li style="text-align: justify; "><span>பெரும்பாலும் மூக்கு ஒழுகுதல், இருமல்</span></li> </ul> <h3 style="text-align: justify; ">காரணங்கள்</h3> <ul> <li style="text-align: justify; "><span>தொண்டைக்-காது இணைப்புக் குழாயில் பாக்டீரியா அல்லது வைரசால் தொற்று உண்டாகும்போது இடைக்காது அழற்சி ஏற்படுகிறது.</span></li> <li style="text-align: justify; "><span>தொண்டைக்-காது இணைப்புக் குழாய் நடுக்காதில் இருந்து மூக்கின் பின்பகுதி வரை செல்கிறது. இதற்கு இரண்டு முக்கிய வேலைகள் உண்டு:</span></li> <li style="text-align: justify; "><span>இயல்பான காற்றழுத்தத்தைப் பராமரிக்க நடுக்காதிற்கு காற்றோட்டம் தருவது.</span></li> <li style="text-align: justify; "><span>காதில் இருந்து சளி மற்றும் அழுக்குகளை வெளியேற்ற உதவுவது.</span></li> <li style="text-align: justify; "><span>உடலின் இன்னொரு பகுதியில் ஏற்படும் தொற்றினால் தொண்டைக்-காது இணைப்புக் குழல் அடைபட்டு தொற்று உண்டாகும். உள்நாக்கு அல்லது மூக்கு அடிச்சதை வீக்கம் தொண்டைக்-காது இணைப்புக் குழாயில் அடைப்பு ஏற்படுத்தும். உள்நாக்கும் மூக்கு அடிச்சதையும் தொடர்ந்தும் அடிக்கடியும் காதுத் தொற்றை ஏற்படுத்தினால், அவற்றை அகற்றி விடலாம். இப்பிரச்சினை பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் இருக்கும்.</span></li> </ul> <h3 style="text-align: justify; ">நோய்கண்டறிதல்</h3> <p style="text-align: justify; "><b>இடைச்செவி அளவியல்</b></p> <p style="text-align: justify; ">காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப செவிப்பறை எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை அளக்க இது உதவுகிறது. காற்றழுத்தத்தில் மாறுதல் இருந்தால் ஓர் ஆரோக்கியமான செவிப்பறை எளிதாக நகர வேண்டும். ஒரு ஒலியை காதுக்குள் ஏற்படுத்தும்போதே, காதுக்கள் வைக்கப்படும் ஒரு ஆய்வுப்பொறி காற்றழுத்தத்தை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றம் அடையச்செய்யும். காதில் இருந்து எதிரொலிக்கப்படும் ஒலியையும், காற்றழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்கள் எவ்வாறு இவ் அளவீடுகளைப் பாதிக்கின்றன என்பதையும் ஆய்வுப்பொறி அளவிடும். காற்றழுத்தம் அதிகமாக இருக்கும்போது குறைந்த ஒலியே எதிரொலிக்கப்பட்டால் பொதுவாகத் தொற்று இருக்கிறது என்பது பொருளாகும்.</p> <p style="text-align: justify; "><span><b>இடைக்காது துளையிடல்</b></span></p> <p style="text-align: justify; ">இடைக்காதில் இருக்கும் பாய்மத்தை (திரவம்) ஒரு சிறிய ஊசி மூலம் வெளியேற்றி எடுத்தல். பின் தொற்றுக்குக் காரணமான நுண்ணுயிரிகள் உள்ளனவா என்று சோதனை செய்யப்படும்.</p> <p style="text-align: justify; "><span><b>கணினி வரைவி ஊடுகதிர் (சி.டி.ஸ்கேன்)</b></span></p> <p style="text-align: justify; ">இடைக்காதில் இருந்து தொற்று மேலும் பரவி இருக்கும் என்று கருதினால் கணினி வரைவி ஊடுகதிர்ப்படம் எடுக்கப்படும். கணினி வரைவியில், சில தொடர் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) மூலம் படங்கள் எடுக்கப்பட்டு பின் கணினியின் உதவியினால் அதிக விவரங்கள் கிடைக்கும்படி மண்டையோட்டின் முப்பரிமாணப் படமாகத் தொகுக்கப்படுகின்றன.</p> <h3><span>சிக்கல்கள்</span></h3> <p style="text-align: justify; "><b>பொட்டெலும்புக் கூம்புக் கட்டி</b></p> <p style="text-align: justify; ">இடைச்செவி அழற்சியால் பரவலாக ஏற்படும் சிக்கல் இது. இடைச்செவியில் இருந்து தொற்று பரவி காதுக்கடியில் இருக்கும் பொட்டெலும்புக் கூம்பைப் பாதிப்பதால் இது உண்டாகிறது.</p> <p style="text-align: justify; "><span><b>கழிவுக்கொழுப்புருண்டை</b></span></p> <p style="text-align: justify; ">இது தொடர்ந்து உண்டாகும் அல்லது நிரந்தரமான இடைக்காது அழற்சியால் ஏற்படும் ஓர் அசாதாரண தோல் கட்டியாகும்.</p> <p style="text-align: justify; "><span><b>உட்காது அழற்சி</b></span></p> <p style="text-align: justify; ">தொற்று காதுக்குள் பரவி மெல்லிய உட்காது அமைப்பையும் பாதிக்கும். இது உட்காது அழற்சி எனப்படும்.</p> <p style="text-align: justify; "><span><b>மூளைக்காய்ச்சல்</b></span></p> <p style="text-align: justify; ">மூளையையும், தண்டுவடத்தையும் பொதிந்திருக்கும் மேலுறைக்குத் தொற்று பரவி அபாயகரமான மூளைக்காய்ச்சலை உண்டாக்குவது இடைக்காது அழற்சியின் ஓர் அரிய, கடுமையான சிக்கலாகும்.</p> <p style="text-align: justify; "><span><b>மூளைக்கட்டி</b></span></p> <p style="text-align: justify; ">மூளைக்கட்டியும் இடைக்காது அழற்சியின் இன்னொரு ஆபத்தான, அரிய சிக்கல் ஆகும். சீழ் நிரம்பிய கட்டி மூளைக்குள் உருவாவதே மூளைக்கட்டி எனப்படும்.</p> <h3 style="text-align: justify; ">சிகிச்சை</h3> <p style="text-align: justify; "><b>நுண்ணுயிர்க்கொல்லிகள்</b></p> <p style="text-align: justify; ">நுண்ணுயிர்க்கொல்லி மருத்துவத்தில் முதன்மையானது அமாக்சிசிலின் ஆகும். குறுகிய கால நுண்ணுயிர்க்கொல்லிகளில், பிறவற்றை விட அசித்ரோமைசின் அதிக பலனளிப்பதாகக் காணப்படுகிறது. 2-3 நாட்களில் பலன் கிடைக்கவில்லை என்றால் சிகிச்சை முறையில் மாற்றம் தேவைப்படும்.</p> <p style="text-align: justify; "><span><b>இடைச்செவித் துமிக் குழாய் (குரோமெட்)</b></span></p> <p style="text-align: justify; ">கசிவோடு கூடிய நாட்பட்ட நோயாளிக்கு, இடைசெவித்துமிக் குழாயைச் செவிப்பறைக்குள் செருகுவதால், அதை வைத்து ஆறு மாதம் வரை நோய் திரும்பித் தாக்கும் விகிதம் குறைகிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது கசிவோடு ஆண்டுக்கு நான்கு முறையோ கடுமையான இடைச்செவி அழற்சி ஏற்படுபவர்களுக்கு இக்குழாய்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify; "><b>ஆதாரம் : </b><span>தேசிய சுகாதார இணையதளம் (NHP)</span></p> </div>