<div id="MiddleColumn_internal"> <ul> <li style="text-align: justify; ">உடலில் கிருமிகள் தாக்கும்போது அதை வெளிப்படுத்துவதுதான் காய்ச்சல். காய்ச்சலின்போது கிருமிகளை எதிர்த்துப் போராட உடல் வெப்பமாகும். இந்த வெப்பத்தில் கிருமிகள் சாகும். இந்தக் கிருமிகளின் வாழ்நாள் குறைவு. எனவே, அவை ஒன்று இரண்டாகும், இரண்டு நான்காகும். இப்படி கிருமிகள் பல மடங்கு பெருகுவதால் அவற்றை அழிக்க உடல் சூடாகும்.</li> <li style="text-align: justify; ">இதுபோல் சூடாகும் நிலையை காய்ச்சல் என்கிறோம். இப்படி உடல் சூடாகும்போது லேக்டிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த லேக்டிக் அமிலம் சுரப்பதுதான் தசைவலிக்குக் காரணம். இதுதவிர, தொற்றுநோயின் காரணமாகவும் உடல் வலி ஏற்படும். மலேரியா தொற்று என்றால் உடலில் கடுமையான வலி இருக்கும். நீரிழிவு நோய் இருந்தாலும் அடிவயிறு மற்றும் கால்களில் வலி ஏற்படும். உடல் வலி ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் ஆர்த்ரைட்டிஸ். இந்த பாதிப்பு ஏற்பட்டால் குருத்தெலும்புத் தேய்வு மற்றும் வீக்கம் ஏற்பட்டு கடுமையான வலி உண்டாகும்.</li> <li style="text-align: justify; ">இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இத்துடன் தற்போதைய வாழ்க்கை முறையில் மன அழுத்தத்தினாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தலைவலி மற்றும் தசைவலியுடன் மார்பு வலியும் ஏற்படும். காரணமின்றி அளவுக்கு அதிகமாக உடல் வலி இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதால் இந்த கடுமையான வலி உண்டாகும்.</li> <li style="text-align: justify; ">டெங்கு காய்ச்சல் இருந்தால் மூட்டு வலி, தசை வலி மற்றும் தலைவலி உண்டாகும். தொடர்ச்சியாக நரம்புகள் மற்றும் தசைகளில் காயங்கள் ஏற்பட்டால் உடல் வலி ஏற்படும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எய்ட்ஸ் இருந்தாலும் உடல் வலி ஏற்படும். எனவே, காய்ச்சல்தான் வலிக்கான காரணம் என அலட்சியப் படுத்தாமல், வலிகளுக்கான காரணங்களை முறையாக அறிந்து தகுந்த மருத்துவர் மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் </strong>: குங்குமம் மருத்துவ இதழ்</p> <p style="text-align: justify; "><strong>கட்டுரையாளர்</strong> : <i>டாக்டர் : தோ.திருத்துவராஜ்</i></p> </div>