<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">வலிநிவாரணம்</h3> <ul> <li style="text-align: justify; "><span>நாள்பட்ட அதிக வலியுடன் கூடிய முதுகு வலி, மூட்டு வலி (சரவாங்கி) போன்ற நோய்களுக்கு மருத்துவர்களாலேயே இம்மருந்துகள் தொடர்ந்து பல மாத காலம் பரிந்துரைக்கப்படலாம். இவற்றில் சில மருந்துகளை தொடர்ந்து பல காலம் உபயோகிப்பதால் சிறுநீரகங்கள் படிப்படியே பாதிக்கப்பட்டு செயலிழந்து விடக் கூடும். எனவே இவ்வகை மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டியுள்ளவர்கள் அவர்களின் மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். நடுவில் தங்களின் சிறுநீரகங்களை சிறுநீர், இரத்தத்தில் சில பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் சரிபார்த்து கொள்ள வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>வயதானவர்கள், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவர்களுக்கு வெளியே தொந்தரவாக தெரியாமல் சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்புக்கள் அதிகம். எனவே இவர்கள் இத்தகைய மருந்துகள் உபயோகிப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாது தாங்களாகவே மருந்துகடைகளில் வலிநிவாரணிகளை வாங்கி உட்கொள்வது மிகவும் தவறு.</span></li> <li style="text-align: justify; "><span>இதைத்தவிர ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக இவ்வகை மருந்துகளை அறவே தவிர்க்க வேண்டும்</span></li> </ul> <h3 style="text-align: justify; ">மருந்துகள்</h3> <ul> <li style="text-align: justify; "><span>வலிநிவாரண மருந்துகளிலும் NSAIDS, COXIBS எனப்படும் வகை மருந்துகள் தான் இவ்வகையாக சிறுநீரகங்களை பாதிக்கும் தன்மை வாய்ந்தவை. உதாரணமாக ப்ருபென் (BRUFEN) வோவிரான் (VOVERAN), செலாக்ட் (CELACT), போன்ற மாத்திரைகள். வேறு சில மாத்திரைகள் உதாரணமாக பாரசிடமால் (PARACETAMOL, CALPOL, METACIN, DOLO) போன்ற மாத்திரைகள், ட்ரமடால் (TRAMADOL) போன்ற மாத்திரைகள் சிறுநீரகங்களை பாதிப்பதில்லை.</span></li> <li style="text-align: justify; "><span>எனவே மேற்கூரிய வகை மாத்திரைகளுக்கு பதிலாக இவ்வகை மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம் ஆனால் சிலருக்கு இவ்வகை மருந்துகள் முதல் வகை மாத்திரைகளைப் போல அவ்வளவு வலி நிவாரணம் அளிக்காமல் போகலாம். என்றாலும் முடிந்த வரை வலியை பொறுத்துக் கொள்ளவோ அல்லது மேலே தடவும் வலி நிவாரண களிம்புகள், சூட்டு ஒத்தடம், இன்ப்ரா ரெட் கதிர்வீச்சு சிகிச்சை, அக்கு பங்ச்சர் போன்ற மாற்று வகை மருத்துவங்களை முயற்சித்துப் பார்க்கலாம். தவிர நாட்பட்ட மூட்டு வலிகளுக்கு நம் நாட்டில் நிறையப் பேர் நாட்டு மருந்துகளை நாடி செல்வது வழக்கமே. நாட்டு மருந்துகள் பலவற்றில் சிறுநீரகங்களைப் பாதிக்கும் கடின உலோக உப்புக்கள் (Heavy Metals) இனம் தெரியாத உட்பொருட்கள் உள்ளன. இவை சிறுநீரகங்களையும் இரத்த அணுக்களையும் பாதித்து கிட்னி ஃபெயில்யர், இரத்த சோகை உண்டாகி நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்து உள்ளன.</span></li> <li style="text-align: justify; "><span>ஆகவே உள்ளே உட்கொள்ளும் லேகியங்கள், குளிகைகள் ஆகியன ஆபத்தாகி விடலாம். இவற்றை தவிர்க்க வேண்டும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>ஆதாரம் : </b>பத்மா கிட்னி சென்டர், ஈரோடு</p> </div>