<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">பொதுவான அறிகுறிகள்</h3> <ul> <li style="text-align: justify; "><span>பிறப்பு வாய் கசிவு நோய் அறிகுறிகள் பெண்களிடம் காணப்படுகிறது</span></li> <li style="text-align: justify; "><span>வெள்ளைப்படுதல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், துர் நாற்றம் மற்றும் இயல்புக்கு மாறான நிறத்தில் வெள்ளைக்கசிவு ஆகியவை பிறப்பு பாதை கசிவு ஒத்த வகை நோய்களின் அறிகுறிகளாகும்.</span></li> </ul> <h3 style="text-align: justify; ">பரவும் முறை</h3> <ul> <li style="text-align: justify; "><span>பிறப்பு வாய்ப்பகுதியில் ஏற்படும் சூழல் மாற்றத்தால் சில சமயங்களில் பிறப்பு வாய் வழி வெள்ளைப்படுதல் ஏற்படலாம்</span></li> <li style="text-align: justify; "><span>அதிகப்படியான நோய் எதிர் மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஈஸ்ட் தொற்று, சர்க்கரை நோய், பிறப்பு வாய் பகுதியை சுத்தமாக வைத்திருக்காதது, மாதவிடாய் சமயத்தில் சுத்தம் பராமரிக்காதது ஆகிய காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படும்.</span></li> <li style="text-align: justify; "><span>பாதுகாப்பற்ற உடலுறவாலும் வெள்ளைப்படுதல் உண்டாகும்</span></li> </ul> <h3 style="text-align: justify; ">நோய்த்தடுப்பு</h3> <ul> <li style="text-align: justify; "><span>அதிக வெள்ளைப்படுதல் ஏற்படாமல் தடுக்க பெண்கள் தங்கள் பிறப்பு பாதையின் உட்புறத்தை கிருமி நாசினி திரவங்களைக் கொண்டு கழுவுதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் அணையாடையை மீண்டும் பயன்படுத்துதல், அழுக்குத் துணிகளை மாதவிடாய் ஒழுக்குக்கு பயன்படுத்துதல், அதிக மணமுள்ள சோப்பு பயன்படுத்துதல், இறுக்கமான உள்ளாடை அணிதல், செயற்கை இழைகளாலான உள்ளாடை அணிதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>உடலுறவுக்கு ஆணுறை பயன்படுத்துவதாலும் வெள்ளைப்படுவதை தடுக்கலாம்.</span></li> </ul> <h3 style="text-align: justify; ">சிகிச்சை</h3> <ul> <li style="text-align: justify; "><span>பிறப்பு வாய் வெள்ளைப்படுதல் நோயை ஒரே முறை சிகிச்சையில் குணப்படுத்த முடியும்.</span></li> <li style="text-align: justify; "><span>வெள்ளைபடுதலுக்கான சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் ஸ்பெகுலம் என்ற </span><span>கருவியைக்கொண்டு கருப்பை வாய் குழாயின் உட்புற பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும்.</span></li> <li style="text-align: justify; "><span>இதற்கான சிகிச்சையை சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளரின் முன்னிலையில் எடுப்பதற்கு நோயாளியை ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு கொடுக்கப்படும் மருந்துடன் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்</span></li> <li style="text-align: justify; "><span>முழுமையான சிகிச்சை முடியும் வரை (மருந்து உட்கொண்ட ஏழு நாட்கள் வரை) நோயாளி உடலுறவில் ஈடுபடக்கூடாது. உடலுறவில் ஈடுபடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் பிறப்பு வாய் வழி, ஆசனவாய் வழி மற்றும் வாய்வழி என்ற எந்த வகை உடலுறவு கொண்டாலும் ஆணுரை பயன்படுத்த வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>நோயாளியின் துணைவருக்கு ஆண்குறியில் எரிச்சல், சீழ்வடிதல், ஆண் குறியின் நுனிப்பகுதியில் வெடிப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>சிகிச்சை முடிந்த ஏழு நாட்கள் கழித்து நோயாளி சிகிச்சை மையத்திற்கு வர வேண்டும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>விளைவுகள்</b></p> <p style="text-align: justify; ">பிறப்பு வாய் அழற்சி கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட காரணமாக அமையலாம்</p> <p style="text-align: justify; "><b>துணைவரைபரிந்துரை செய்தல்</b></p> <p style="text-align: justify; ">நோயாளி தனக்கு வெள்ளைப்பாடு நோய் உள்ளதை தன் துணைவருக்கு தெரிவித்து அவர்களுக்கும் நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.</p> <h3 style="text-align: justify; ">எச்சரிக்கை</h3> <ul> <li style="text-align: justify; "><span>ஒரு சில வெள்ளைப்படுதல் பால்வினை நோயாக இல்லாமல் இருக்கலாம். எதிர்மறை எண்ணங்கள் அல்லது குற்ற உணர்வு மனப்பான்மைகள் நோயாளியிடம் இருந்தால் அவற்றை கண்டறிந்து அவரவர் சூழ்நிலைக்கேற்றவாறு ஆலோசனை வழங்க வேண்டியது கலந்தாலோசகர் கடமையாகும்</span></li> <li style="text-align: justify; "><span>ஒரு சில மருந்துகளை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது பாதுகாப்பானதல்ல. எனவே சிகிச்சைக்கு முன் நோயாளி கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை கேட்டு அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்</span></li> <li style="text-align: justify; "><span>வெள்ளைப்படுதல் நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளும் போது மது (பீர், பிராந்தி, ஒயின்) அருந்தினால் சில உடல் உபாதைகள் ஏற்படலாம் (குமட்டல், வாந்தி, படபடப்பு, மயக்கநிலை). இவற்றை தவிர்க்க நோயாளி கடைசியாக மருந்து உட்கொண்ட 24 மணி நேரத்திற்கு எந்தவிதமான மதுவும் அருந்தக்கூடாது என்று கலந்தாலோசகர் கூற வேண்டும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>ஆதாரம் : </b>தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்</p> </div>