<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">முதுமையின் அறிகுறிகள்</h3> <p style="text-align: justify; ">இயற்கையின் அனைத்து உயிரினங்களும் பிறந்து, வளர்ந்து, முதிர்ந்து இறக்கின்றன. இதுதான் இயற்கையின் நியதி. மனிதரும் இதில் விதிவிலக்கல்ல. இளம் வயதில் இருந்து உடலையும், மனதையும் போற்றி பாதுகாத்து வந்தவர்கள் முதுமையில் சிரமமின்றி வாழ முடிகிறது. உடலையும்-மனதையும் பராமரிக்காமல் இருந்தவர்கள் முதுமையில் கூடுதலான சிரமங்களை சந்திக்கின்றார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட காலத்தில் முடிநரைப்பதும், கண் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு காட்ராக்ட் (கண்ணில் புறைவிழல்) நோய்கள் உருவாகிறது,. குறிப்பாக காது கேளாமை, நடப்பதில் தடுமாற்றம், நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது. இறுதியில் மரணம் ஏற்படுகிறது.</p> <h3 style="text-align: justify; ">முதுமையில் ஏற்படும் பிரச்சனைகள்</h3> <strong>கண் சம்மந்தமான பிரச்சனை</strong> <p style="text-align: justify; ">40 வயதிற்கு மேற்படும் போது பார்வைக்குறைபாடு ஏதாவது ஒரு வடிவில் உருவாகும். அருகில் உள்ள பொருட்களை கூட பார்ப்பதில் சிரமம் ஏற்படும். புத்தகங்கள், செய்தித்தாளை முன்பு போல் தெளிவாக படிக்க முடியவில்லை என்ற வருத்தமும், சிரமமும் ஏற்படலாம். இது போன்ற சமயத்தில் இயல்பாக கண்களை விட்டு தூரத்தில் படிக்கும் நிலை உருவாகும். இதனை விழிலென்ஸ் திறனிழப்பு (பிராப்பியோபியோ) என்பர். விழி ஆடி தடித்து எளிதில் சுருங்கி விரிய இயலாமல் போவதால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க இயலாது. இத்துடன் கண்களுக்குள்ள சில சிரமங்களை சில அறிகுறிகள் அடையாளம் காட்டும். தலைவலி, கண் சிவத்தல், கண்ணெரிச்சல், போன்றவையாகும். இது போன்ற சமயங்களில் கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வையோ இருக்கலாம். எனவே கண்ணாடி தேர்வு செய்யும் முன் கண் மருத்துவரின் ஆலோசனையுடன் கண்ணாடியை தேர்வு செய்ய வேண்டும். அடிக்கடி தலைவலி ஏற்படுதல், பார்வையில் மாறுபாடு, நிற மாறுபாடு, ஒளிக்கூச்சம், பக்கப்பார்வையிழப்பு போன்ற அறிகுறிகள் கண்புரை கிளாக்கோமா நோய்களின் அறிகுறிகளாகும்.</p> <strong>திடீரென ஏற்படும் விழி இறுக்கம் </strong> <p style="text-align: justify; ">திடீரென தலைவலியுடனும் – கண்ணில் கடுமையான வலியுடனும் தொடங்கும். கண் சிவந்து பார்வை மங்கும், விழிக்கோளம் கோழிக்குண்டு போல் கடினமாய் இருக்கும். வாந்தி இருக்கும். இயல்பாக இருக்கும் கண்ணின் கண்மணியை விட பாதிக்கப்பட்ட கண்ணின் கண்மணி பெரியதாக இருக்கலாம். சிலருக்கு விளக்கை சுற்றி வண்ண வளையங்கள் தெரியலாம். இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும் போது உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.</p> <strong>கண் புறை (காட்ராக்ட்)</strong> <p style="text-align: justify; ">கண்மணிக்கு பின்புறமுள்ள லென்ஸ் மங்கலாகி கண்மணி சாம்பல் நிறமாகவோ, வெள்ளை நிறமாகவோ தெரியலாம். முதுமை ஏற்படும் பெரும்பாலானவர்களுக்கு கண்பிறை ஏற்படும். இச்சமயத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டிருக்கும். இது சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் பார்வையடைய முடியும்.</p> <strong>நினைவாற்றல் குறையும் – செயல்பாடுகளும்</strong> <p style="text-align: justify; ">வயதானவர்களுக்கு ஞாபக சக்தி படிப்படியாக குறைந்து வரும். இதனால் தாம் பேசிய – கூறியவற்றினை மறந்து விடுவர். தாம் செய்யக் கூடிய காரியங்களை மாற்றி, மாற்றி செய்வர். இதனால் பலசமயம் குடும்பத்தில் உள்ளவர்கள் எரிச்சல் படுவர். ஆனால் முதியோர் தாம் சரியாகத்தான் செய்தோம் என்ற உணர்வுடன் இருப்பர். குடும்பத்தில் உள்ள உறவினர்கள் இதனை புரிந்து கொள்வது அவசியமானது.</p> <strong>கால் வீக்கம்</strong> <p style="text-align: justify; ">வயதுமுதிர்ந்த காலத்தில், குறைந்த ரத்த ஓட்டத்தினாலும், இதயக் கோளாறினாலும் கால் வீக்கம் ஏற்படும். இது போன்ற சமயங்களில் படுக்கையில் பிற உடலுறுப்புகளை விட கால்களை உயரத்தில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நடப்பதும் வீக்கத்தையும்-வலியையும் குறைக்கும். நல்ல பலன் அளிக்கும். நீண்ட நேரம் நின்று கொண்டோ அல்லது காலைத் தொங்க போட்டுக் கொண்டோ இருக்காமல் கால்களை உயரத்தில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கூடுதலான வீக்கம் இருக்கும் போது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.</p> <strong>கால்களிலும் பாதங்களிலும் ஏற்படும் நாள்பட்ட புண்</strong> <p style="text-align: justify; ">கால் புடைப்புகள் வலித்தரக்கூடியாதாக இருக்கும். கால் புடைப்புகளை தாங்கிப் பிடித்துக் கொள்ள உதவியாய் நெகிழும் தன்மையுடைய காலுறைகள் அல்லது கட்டுத்துணிகளால் கட்டுவது மூலம் ஓரளவு வலியிலிருந்து விடுபட முடியும். மறக்காமல் இரவில் கட்டினை அவிழ்த்து விட வேண்டும். காலில் புண்கள் இருந்தால் அழுகல் நிலைக்கு கொண்டு செல்லும். காயத்திற்கு அருகில் தோலில் கறுப்பு நிற கொப்புளம் இருக்கலாம். காயம் (அ) புண் ஏற்பட்ட 6 மணி நேரத்தில் இருந்து 3 நாட்களுக்குள் புண் மிக அதிக அளவில் வெளிப்படும். இது போன்ற புண்களை உடனுக்குடன் கவனித்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்தம் போதுமான அளவிற்கு கால்களின் வழியாக போதுமான அளவு வேகத்தில் செல்வதில்லை. இதுபோன்ற புண்கள் மிகப்பெரியதாகவும், புண்ணைச்சுற்றியுள்ள தோல் மெலிதாகவும், கருநீலநிறத்தில் பளபளப்பாகவும் வீக்கமாகவும் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் எவ்வளவு உயரம் முடியுமோ அவ்வளவு உயரத்தில் 10-20 நிமிட நேரம் உயர்த்தி வைத்தல் வேண்டும். ஓரே இடத்தில் நிற்பது, காலை கீழே தொங்கப்போட்டு உட்காருவதும் மிகவும் சிக்கலைத் தரும். சிறிது உப்பு போட்ட வெந்நீரில் ஒத்தடம் கொடுத்தல் வேண்டும். சுத்தமான துணியால் புண்மீது தளர்வாக கட்டவும் வேண்டும். ஈ, கொசு மொய்க்காதபடி கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். புண் மிக கூடுதலாக இருக்கும் போது மருத்துவ சிகிச்சை அளித்தல் வேண்டும்.</p> <strong>படுக்கை புண்</strong> <p style="text-align: justify; ">படுக்கையில் புரண்டு படுக்க முடியாத அளவிற்கு நோய்வாய்பட்டவர்களுக்கும், மிகவும் மெலிந்து தளர்வான, வயதானவர்களுக்கு படுக்கை புண் ஏற்படுகிறது. படுக்கையில் உடம்பின் எலும்பு பகுதிகளிலும் தோல் சதை அழுத்தும் இடங்களிலும் படுக்கைபுண் ஏற்படுகிறது. பெரும்பாலும் முதுகு, முழங்கை, புட்டம் போன்ற பகுதிகளில் காணப்படும். சிலசமயங்களில் புண்களில் புழுக்கள் உருவாகி முதியவருக்கு மிக்க சிரமத்தை அளிக்கும்.</p> <strong>படுக்கை புண்ணுக்கு சிகிச்சை </strong> <p style="text-align: justify; ">ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நோயாளியை புரண்டுபடுக்க வைக்க வேண்டும். மல்லாந்தும், புரணடும் படுக்க வைக்க வேண்டும். குப்புறவும், ஒருபக்கம் சாய்த்தும்,பின் மறுபக்கம் சாய்ந்தும் மாற்றி மாற்றி படுக்க வைத்திடல் வேண்டும், மெல்லிய மிருதுவான துணி, படுக்கை விரிப்புகளையும்- தலையணைகளையும் பயன்படுத்தல் வேண்டும். வயதானவர்களின் எச்சில், சிறு நீர், மலம் போன்றவற்றால் அசுத்தமாகும். எனவே அசுத்தமாகும் ஒவ்வொரு முறையும் விரிப்பு, போர்வை ஆகியவற்றினை மாற்றிடல் வேண்டும். தினமும் குளிக்க வைத்திடல் வேண்டும். புண்கள் மீது ஸ்பிரிட்டை தேய்த்து சுத்தமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம்.</p> <strong>காசநோய்</strong> <p style="text-align: justify; ">தொடர்ந்து இருமிக்கொண்டிருப்பர், மூச்சு விடுவதில் சிரமும் ஏற்படும். இருமும் போது ரத்தம் வந்தால் அவர்களுக்கு காசநோய் இருக்கலாம். எனவே அதற்கான பரிசோதனையும் – சிகிச்சையும் தேவை. புகை பிடிப்பவராயிருந்தால், புகைபிடிப்பதை கைவிட வேண்டும்.</p> <strong>வாதநோய்</strong> <p style="text-align: justify; ">முதிர்ந்த நிலையில்:</p> <ul style="text-align: justify; "> <li>கீல்வாத நோய் ஏற்படும்</li> <li>வலிதரும் மூட்டுகளையும் அதன் பகுதிகளையும் ஓய்வாக வைத்திருத்தல் வேண்டும்</li> <li>வெந்நீர் ஒத்தடம் கொடுத்தல் அவசியம்</li> <li>வலி தரும் மூட்டுகளுக்கு அவை இயங்கும் அளவு பயிற்சியை அளித்தல் அவசியம்</li> </ul> <strong>இருதய கோளாறு</strong> <p style="text-align: justify; ">பருமனாக இருப்பவர்கள், புகைபிடிப்பவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இருதய நோய் ஏற்படும்.</p> <ul style="text-align: justify; "> <li>இருதய கோளாறு உள்ளவர்கள் நெஞ்சில் வலி – சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். கடினமான பணிகளை செய்யக் கூடாது.</li> <li>கொழுப்பு மிகுந்த எண்ணெயில் தயாரிக்கப்படும் பலகாரங்களை உண்ணக் கூடாது.</li> <li>பருமனாக இருந்தால், எடை கூடுதலாக இருந்தால் குறைத்தல் மிக முக்கியம்</li> <li>முதியவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பின் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். மிகக் குறைந்த அளவு உப்பையே பயன்படுத்தல் வேண்டும்.</li> <li>நெஞ்சு வலி கூடுதலாக இருந்தால் மருத்துவ உதவி அவசியம் தேவை</li> <li>பொதுவாகவே முதியோர்களுக்கு ரத்த அழுத்தம் உருவாகும். இது மிகுந்த பாதிப்பை தரும். வயதானவர்களின் ரத்த குழாய்கள் மிகக் கடினமாக இருப்பதால் ரத்த ஓட்டம் தடைபடும். இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும், புகைபிடிப்பவர்களுக்கும், பருமனாக இருப்பவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரவாய்ப்பு அதிகம். அதிக ரத்த அழுத்தத்தால் வாதம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இருதயம், சிறுநீரகமும் பாதிப்பு ஏற்படலாம்.</li> <li>கை-கால் செயலிழப்பு ஏற்படும்.</li> </ul> <strong>மூளை ரத்த நாளச்சேதம் (பாரிச வாயு) </strong> <p style="text-align: justify; ">மூளையினுள் ரத்தம் உறைதல் அல்லது ரத்தபோக்கு ஏற்படுவதால் வயதானவர்களுக்கு பாரிச வாயு அல்லது மூளை ரத்த நாளம் சேதமடையும். இதனை ஆங்கிலத்தில் “ஸ்ட்ரோக்” என்பர். எந்த அறிகுறியும் இன்றி உருவாவதால் ஸ்ட்ரோக் என்பர். திடீரென்று சுயநினைவை இழந்து கீழே விழுந்து விடலாம். முகம் சிவந்திருக்கும். சுவாசிக்கும் போது கரகரப்பான சப்தம் ஏற்படும். நாடித்துடிப்பு சீரற்று இருக்கும். பல மணி நேரம் (அ) பல நாட்கள் சுயநினைவற்று இருப்பர். அவர் உயிர்பிழைத்தால் அவருடைய பேச்சு, பார்வை, சிந்திக்கும் திறன் பாதிக்கலாம். முகம் அல்லது உடலின் ஒருபகுதி செயலிழந்து போகலாம். பாரிச வாயு கடுமையாக ஏற்படாத போது தன்சுயநினைவை இழக்காமலேயே உடல்நலம் பிரச்சனைகள் உருவாகலாம்.</p> <strong>நீரிழிவு நோய்</strong> <p style="text-align: justify; ">ஆண் – பெண் – குழந்தை என வயது பேதமின்றியாருக்கும் வரக்கூடியது நீரிழிவு நோய் ஆகும். ஆனால் இதில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மிக அதிகமாக பாதிக்கும் வாய்ப்பு உண்டு. (மேலும் விபரங்களுக்கு இதே இணையதளத்தில் உள்ள நீரழிவு நோய் பற்றிய கட்டுரையை பார்க்கவும்).</p> <strong>காது இரைச்சல் – செவிட்டுத் தன்மை</strong> <p style="text-align: justify; ">ஒரு காதோ (அ) இரு காதோ கேட்காமலிருக்கும், சில சமயங்களில் கடுமையாக தலைசுற்றல் இருக்கும். பலத்த இரைச்சல், சப்தம் கேட்கலாம். அவ்வாறு இரைச்சல், சப்தம் கேட்டால் மெனியர் காது நோயாகவும் இருக்கலாம். இந்த பாதிப்பு உள்ளவர் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது.</p> <strong>தூக்கமின்மை</strong> <p style="text-align: justify; ">முதிர்ந்த வயதில் மிக அதிக சிரமத்தை அளிப்பது தூக்கமின்மைதான். இரவில் குறைந்த நேரமே தூங்குவர், இந்த தூக்கம் வராத நேரத்தில் நிறைய யோசிப்பர். அதனால் அவர் மன அழுத்தத்தால் மிகவும் சிரமப்படுவர்.</p> <p style="text-align: justify; "><strong>நன்றாக தூங்க:</strong></p> <ul style="text-align: justify; "> <li>பகல் பொழுதில் தூங்காமல், ஓய்வு எடுக்காமல் வேலை செய்திடல் வேண்டும்</li> <li>மாலையிலும் – இரவிலும் தேனீர் அருந்துவதை தவிர்த்தல் வேண்டும்.</li> <li>தூங்கச் செல்லும் முன்பு வெந்நீரில் நன்கு குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பதால் நன்கு தூக்கம் வரும்.</li> <li>தூங்கச் செல்லும் போது ஒரு டம்ளர் பால் அருந்துதல் வேண்டும்</li> </ul> <strong>கல்லீரல் சிதைவு</strong> <p style="text-align: justify; ">வேளாவேளைக்கு சரியாக சாப்பிடாமல் உள்ளவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் தமது முதுமைப் பருவத்தில் கல்லீரல் சிதைவு நோயினை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.</p> <p style="text-align: justify; "><strong>நோயின் அறிகுறி: </strong>உடல் பலவீனம், பசியின்மை, வயிற்றுக்கோளாறு, உடல் மெலிதல், மற்றும் வலது பக்கம் கல்லீரலுக்கு அருகில் வலி ஏற்படும். நோய் தீவிரமடைய மேலும் மெலிந்துகொண்டே வருவார். ரத்த வாந்தி, கால் வீக்கம், வயிறு நிரம்பி திரவம் , வாயு உற்பத்தியால் பானை போல வயிறு உப்பி விடுகிறது. மஞ்சள் காமாலையும் ஏற்படலாம்.</p> <p style="text-align: justify; "><strong>நோய்தடுப்பும் சிகிச்சையும்: </strong>கடுமையான கல்லீரல் சிதைவு நோய், மரணத்தை உண்டாக்கிவிடும். கல்லீரலை பாதிக்கச் செய்திடும் புகை, மது பழக்கம், போன்றவற்றால் க்ல்லீரல் பாதிக்கிறது.</p> <ul style="text-align: justify; "> <li>சத்தான உணவு சாப்பிடாதது.</li> <li>உணவே சரியாக சாப்பிடாதது போன்ற காரணங்களாலும் கல்லீரல் சிதைவு நோய் உருவாகிறது.</li> </ul> <p style="text-align: justify; "><strong>தடுப்பு சிகிச்சை: </strong>கடுமையான கல்லீரல் சிதைவால் பலர் இறந்துள்ளனர்.எனவே கல்லீரல் சிதைவு நோய்க்கு உட்பட்டவர்கள் சரியான உணவு ப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை செய்வது மிகவும் அவசியமானது.</p> <ul style="text-align: justify; "> <li>கல்லீரலை மது அரித்து அழித்து விடும். எனவே மது அருந்தக் கூடாது.</li> <li>புரதம் – வைட்டமின் “டி” அடங்கிய உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.</li> <li>கீரைகள் , பழங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.</li> </ul> <strong>பித்தப்பை கோளாறுகள்</strong> <p style="text-align: justify; ">பித்தப்பை கல்லீரலுடன் இணைந்திருகும் ஒரு பை போன்ற சிறிய உறுப்பாகும். இது கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை செரிக்க உதவும். பச்சை நிறத்தில் இருக்கும் பித்தநீர் இந்த பையில்தான் சேர்கிறது. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் பித்தப்பை நோய் காணப்படுகிறது.</p> <p style="text-align: justify; "><strong>நோயின் அறிகுறி: </strong>வயிற்றின் வலது விலா ஓரத்தில் வலி ஏற்படும். சில சமயங்களில் மேல் முதுகின் வல்ப்பக்கம் வரை வலி பரவுகிறது. சீரணமாவதற்கு கடினமான உணவுகளை சாப்பிட சிறிது நேரத்திலேயே வலி ஏற்படலாம். சிலருக்கு கடுமையான வலியுடன் வாந்தியும் ஏற்படுத்தும். சில சமயங்களில் காய்ச்சல் இருக்கும். சிலருக்கு மஞ்சள் காமாலையும் ஏற்படலாம். பித்தப்பை கோளாறுகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். உணவில் கரிசலாங்கண்ணி, பீட்ரூட் சாறினை சாப்பிடுவது மிகவும் நல்லது.</p> <strong>மனநோய்</strong> <p style="text-align: justify; ">வயது முதிர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் மிகவும் துன்பமடைகின்றனர். தமது கடந்த கால அனுபவங்கள், தவறுகளை எண்ணி வருத்தமடைவதும், சலிப்படைவதும் இருக்கும். நிகழ்காலத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கண்டு திகைப்படைவர். ஏற்றுக் கொள்வதில் முரண்பாடான நிலையில் இருப்பர். தமது வெற்றிகரமான அனுபவங்களை ஏற்க மறுக்கிறார்கள் என்ற ஏமாற்றம் இருக்கும்.குடும்பத்தில் தமக்கு போதியவாய்ப்பும் அங்கீகாரமும் இல்லை என மன அழுத்தம் கொள்வர். தாம் எதிர்பார்க்கும் அன்பும் – ஆதரவும் கிடைக்காத சூழலில் கவலையுடன் காணப்படுவர். இது போன்ற சமயத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதும், சரியான, போதுமான அளவு உணவும் எடுத்துக் கொள்ளமாட்டார். இதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் உடல் நிலை மோசமடையும். இச்சமயத்தில் குடும்பத்தில் உள்ள முதியவர்களிடம் அன்புடனும் ஆதரவுடனும் இருத்தல் வேண்டும். அவருடைய வெற்றி – தோல்வி இரண்டையும் தெரிந்து கொள்ளுவதன் வாயிலாக அவரது அனுபவங்கள் நமக்கு பயன்படும் என்பதனை மறந்து விடக்கூடாது. மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முதியவருக்கு உதவ வேண்டும்.</p> <h3 style="text-align: justify; ">முதுமையில் உடல் நலத்தை பேணுதல்</h3> <ul style="text-align: justify; "> <li>வயதான பின் ஆரோக்கியமாக வாழ வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைபிடித்திடுவது முதியவர்களின் கையில் தான் உள்ளது.</li> <li>வயதாகி விட்டது என நீங்கள் எண்ணும் போதுதான் நீங்கள் வயதாகி விட்டது என உணருவீர்கள். உடலுக்கு வயதாகி இருந்தாலும் மனது இன்னமும் இளமையுடனும், மகிழ்வுடனும் உள்ளதாக எண்ணுங்கள். நம்பிக்கைதான் வாழ்வு, நம்பிக்கைதான் நம்மை வழி நடத்தும்.</li> <li>குடும்ப உறவினர்கள், இளைஞர்களின் செயல்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தயார் செய்து கொள்ளவும்.</li> <li>நகங்களை காயம்படாமல் வெட்டிக் கொள்வதும், தலைமுடி கட்டிங், முக சேவிங் போன்றவற்றை செய்து கொள்வதும் புத்துணர்வை தரும். வாழ்வே முடிந்துவிட்டது என எண்ணாமல் உடலை பராமரித்தல் முக்கியம்.</li> </ul> <h3 style="text-align: justify; ">உணவுப்பழக்கம்</h3> <p style="text-align: justify; ">நல்ல உணவுடன், உடற்பயிற்சியும் மேற்கொள்ளும் வயதானவர்களின் மூளை நன்கு செயலாற்றுவதனை நாம் உணர முடியும். வயது முதிர்வுக்கேற்றவாறு நமது உணவுப்பழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.</p> <ul style="text-align: justify; "> <li>பழங்கள், காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.</li> <li>இனிப்பு, புளிப்பு, உப்பு குறைந்த அளவே பயன்படுத்தல் வேண்டும்.</li> <li>நார்ச்சத்து மிகுந்த கீரைகளை உணவில் அதிகம் சேர்த்தல் வேண்டும். இது மலச்சிக்கல் வராமல் தடுக்கும். பெருங்குடல் நோய்களையும், பெருங்குடல் புற்றுநோயும் வராமல் தடுக்கும்.</li> <li>உணவில் கொழுப்பு, சோடியம் அளவை குறைத்திடல் வேண்டும். இதய நாள நோய்கள் வராமல் தடுக்க முடியும்.</li> <li>வயதாகும் போது தாகம் எடுப்பது குறையலாம். எனவே தினசரி குறைந்த பட்சம் 8 டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும்.</li> <li>ஈறுநோய்கள், ரத்த அழுத்தம், நுரையீரல் புற்று, புற்றுநோய் உருவாவதற்கு புகைபிடிப்பது ஒரு முக்கிய காரணம். எனவே புகையிலை பழக்கம், புகைப்பழக்கத்தை சிரமப்பட்டாவது நிறுத்தி விடல் வேண்டும்.</li> <li>மதுபழக்கம் உள்ளவர்கள் தான் அருந்தும் மதுவின் அளவை படிப்படியாக குறைத்து , இறுதியில் முற்றிலுமாக நிறுத்திவிடல் நல்லது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோயிலிருந்தும் முதியவரை காக்க முடியும்.</li> </ul> <h3 style="text-align: justify; ">முதியவர்களின் இறுதிக்காலம்</h3> <p style="text-align: justify; ">முதியவர்களின் இறுதிக்காலம் துன்பம் நிறைந்ததாக இருந்துவிடக்கூடாது. அவரது அருகில் உள்ளவர்களும், அவரை பராமரிக்கும் நபர்களும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியதே அவரது நினைவு அடிக்கடி தவறும். எதைஎதையோ பேசியபடி இருப்பர். சிறுநீர் பிரியலாம். மலமும் அடிக்கடி கழிப்பர். இது போன்ற சமயங்களில் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை அடிக்கடி கொடுத்தல் நல்லது.முதியவரை கடிந்து கொள்வது, அலட்சியப் படுத்துவது அவரை மனரீதியாக பாதிக்கச் செய்து விடும். இருக்கின்ற சிறிது காலம் அவர் அமைதியுடனும் மன நிறைவுடனும் இருந்திட அனைவரும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.</p> <ul style="text-align: justify; "> <li>அடிக்கடி மருத்துவரை மாற்றுவது என்பதனை தவீர்த்து முதியவர் சிரமமின்றி, அவருக்கு வீட்டுக்கவனிப்புதான் மிகுந்த ஆறுதலைத் தரும்.</li> <li>நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருப்பதை விட, தான் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்திலேயே இறப்பதைத்தான் முதியவர்கள் விரும்புவர்.</li> <li>மரணப்படுக்கையில் உள்ளவர்களின் எண்ணம், உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify; ">தமது குடும்பம் கடன்சுமையில் உள்ளது. குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர். தமது மனைவி/கணவர், பிள்ளைகள் நமக்குப் பின் சண்டை சச்சரவின்றி இருப்பார்களா? என கவலையும், வேதனையும் அடைவர்.</p> <p style="text-align: justify; ">அனைவருக்குமே மரணம் என்பது உறுதி என்பதனை முதியவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். படுக்கையில் உள்ளவர்கள் சிலர் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. சிலர் மரணத்தை கண்டு அஞ்சுவார்கள். தான் வாழ்ந்த இடம், மனிதர்கள், உறவுகளை விட்டு பிரிவதில் மிகவும் கவலையடைவர். மரணத்திற்கு பிந்தைய வாழ்வு பற்றிய குழப்பமடைவர்.</p> <p style="text-align: justify; ">இது போன்ற சூழலில் நாம் அவருக்கு ஆறுதலாகவும், அன்புடனும் அணுகுவதுதான் முதியவருக்கு நாம் செய்யும் பெரும் உதவியாகும். சில சமயங்களில் ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மரணம் என்பது உறுதியானது. வாழ்வின் இறுதி சமயங்களில் அவர் மிகவும் நேசிக்கும் நபர்கள் அருகிலேயே இருந்து நம்பிக்கையூட்டுவதும், அனுசரனையாக இருப்பதும் இறுதி நாட்களில் அவருக்கு நாம் அளிக்கும் மரியாதையாகும். நண்றிக்கடனும் ஆகும். அது மட்டுமல்ல மனிதத் தன்மையும் கூட.</p> <p style="text-align: justify; ">கட்டுரை: மேக்னம், தமிழ்நாடு</p> </div>