<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">தொப்புள் கொடி</h3> <p style="text-align: justify; ">கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவது தொப்புள் கொடிதான். இதன்மூலம்தான் தாயிடம் இருந்து ஆக்ஸிஜன் (பிராண வாயு), உணவு போன்றவை குழந்தைக்குச் செல்கின்றன. மேலும், கரியமில வாயுக் கழிவை குழந்தை வெளியேற்றுவதும் இதன்மூலம் தான்.</p> <p style="text-align: justify; ">குழந்தை பிறந்தவுடன் தாயின் கர்ப்பப்பையோடு இணைந்திருக்கும் தொப்புள் கொடியை வெட்டிவிட்டு முனையில் முடிச்சு போடுவார்கள். அப்போது தொப்புள் கொடியில் காயம் ஏற்பட்டாலோ, ரத்தம் உறையாமல் இருந்தாலோ, ரத்த உறைவதற்குத் தேவையான வைட்டமின் போன்ற அத்தியாவசியச் சத்துக்கள் குறைவாக இருந்தாலோ தொப்புள் கொடியில் இருந்து ரத்தம் கசியலாம்.</p> <p style="text-align: justify; "><span>மேலும், பிறந்த குழந்தையின் உடலில் நோய்க் கிருமிகள் பரவியிருந்தாலும், தொப்புள் கொடியில் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் ரத்தம் கசியும்.</span></p> <p style="text-align: justify; ">தொப்புள் கொடி ஆறு முதல் எட்டு நாள்களுக்குள் தானாகவே கீழே விழுந்துவிடும். விழுந்தவுடன் அந்த இடத்தில் மெல்லிய தோல் மூடும். அதன் மீது வடு உண்டாகும். அதுவும், 12-15 நாள்களுக்குள் ஆறிவிடும்.</p> <p style="text-align: justify; ">தொப்புள் கொடி இருந்த இடத்தில் மெல்லிய தோல் மூடாவிட்டால், சொதசொதப்பான திசுவில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கும்.</p> <h3>சிகிச்சை</h3> <p style="text-align: justify; ">வைட்டமின் போன்ற அத்தியாவசியச் சத்துகள் குறைபாட்டால் ரத்தம் கசிந்தால், அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify; ">ரத்தம் கசியும் தொப்புள் பகுதியை ஆல்கஹாலில் மெல்லிய துணியை நனைத்து பலமுறை சுத்தம் செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify; ">கல் உப்பை (Common Salt) மூலம் சொதசொதப்பாக இருக்கும் தொப்புள் பகுதியில் சிகிச்சை செய்தால் விரைவில் குணம் பெறலாம்.</p> <p style="text-align: justify; ">ரத்தக் கசிவு மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்துகொள்வது தான் நல்லது.</p> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் </strong>: தினகரன் நாளிதழ்</p> </div>