<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">முதல் உதவி</h3> <p style="text-align: justify;"><strong>கே. முதலுதவிப் பெட்டிக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">முதலுதவிப் பெட்டிக்குள் பின்வருவன இருக்க வேண்டும்:</p> <ul style="text-align: justify;"> <li>அவசரகால மருத்துவ சேவைக்காக தொலைபேசி எண்கள் 1092/102/108</li> <li>புண்களின் மேல் வைக்க கிருமி அகற்றப்பட்ட சிறிதும் பெரிதுமான சதுர வலைத்துணிகள்</li> <li>டெட்டால், சேவியோன் போன்ற கிருமிநாசினிகள்</li> <li>வலி அகற்றும் (இபுபுரூஃபன்), மற்றும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள்</li> <li>கட்டும் துணிகள்</li> <li>ஒட்டும் டேப்புகள்</li> <li>பல் அளவுகளில் ஒட்டும் டேப்புகள்</li> <li>கத்தரி</li> <li>இடுக்கிகள்</li> <li>சேஃப்டி ஊசிகள்</li> <li>சோப் போன்ற ஆண்டிசெப்டிக்குகள்</li> <li>காய்ச்சல்மானி</li> <li>முகமூடி போன்ற காப்புத்தடைகள்</li> <li>அதிக இரத்தப்போக்கு</li> </ul> <p style="text-align: justify;"><strong>கே. நோயாளிக்கு இரத்தப் போக்கு அதிகமாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?</strong></p> <ul style="text-align: justify;"> <li>இரத்தப்போக்கை மட்டுப்படுத்தக் கூடியதாகக் கிடைப்பதைக் காயத்தின் மேல் வைத்து அழுத்தவும்.</li> <li>அருகில் உள்ள அவசர கால தொலைபேசி எண்ணில் அழைக்கவும் அல்லது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல யாரிடமாவது உதவி கேட்கவும்.</li> <li>உதவி வரும் வரை காயத்தின் மேல் அழுத்தத்தை விட்டுவிட வேண்டாம்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>கே. நோயாளி வெளிறி, குளிரையும் தலைசுற்றலையும் உணர்கிறார். இதற்குப் பொருள் என்ன?</strong></p> <p style="text-align: justify;">உடலில் இரத்த ஓட்டம் போதுமான அளவுக்கு இல்லை என்று அர்த்தம். இது உயிருக்கு ஆபத்தான நிலை. ஏனெனில் இது வெகு விரைவில் உடல்திசுக்களில் உயிர்வளிக்குறைவு, மாரடைப்பு அல்லது உறுப்புகள் சிதைவு போன்ற பிற நிலைமைகளுக்கு இட்டுச் செல்லும். காயம் அல்லது நோயால் ஏற்படும் இந்நிலை அதிர்ச்சி என அழைக்கப்படும். இப்படி அதிர்ச்சிக்குள்ளாகும் யாரையாவது நீங்கள் பார்த்தால் உடனே அவரைப் படுக்க வைத்து கால்களை உடலைவிட அதிக உயரத்தில் இருக்குமாறு வைக்கவும். அதாவது கால்கள் இதயத்தை விட அதிக உயரத்தில் இருக்க வேண்டும். இதனால் மூளைக்கும் இதயத்துக்கும் அதிக இரத்தம் பாயும்.</p> <p style="text-align: justify;"><strong>கே. காயத்தைக் கழுவலாமா?</strong></p> <p style="text-align: justify;">சிறு வெட்டுக்காயம் அல்லது சிராய்ப்புகளில் அழுக்கைக் கழுவலாம். அதிகமாக இரத்தம் வழியும் காயத்தைக் கழுவக் கூடாது. குழாயின் அடியில் கழுவினால் இரத்த உறைவு பொருட்கள் அகன்று இன்னும் அதிகமாக இரத்தம் வழியும்.</p> <p style="text-align: justify;"><strong>அதிக இரத்தப் போக்கின் போது செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்</strong></p> <p style="text-align: justify;">அதிக இரத்தப்போக்கின் போது செய்ய வேண்டியவை</p> <ul style="text-align: justify;"> <li>உதவி வந்து கொண்டிருப்பதாகக் கூறி காயம்பட்டவருக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்</li> <li>மருத்துவ ஊர்தியை உடனே அழைக்க வேண்டும்</li> <li>காயம்பட்டவரின் நிலையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்</li> <li>இரத்தப் போக்கை நிறுத்தக் காயத்தின் மேல் நேரடியான அழுத்தம் கொடுக்க வேண்டும்</li> <li>காயம்பட்டவரின் மூச்சுப் பாதை தடைகள் இன்றி இருக்கிறதா என்று நோக்கவும்</li> <li>நாடித்துடிப்போ மூச்சோ இல்லை என்றால் செயற்கை முறை சுவாசம் அளிக்கவும்</li> <li>நோய்க்கிருமிகள் பரவலைத் தடுக்க மரப்பால் கையுறை பயன்படுத்தவும்.</li> <li>உடலின் மேற்பகுதியில் இரத்தப் போக்கு இருந்தால் தலையை உயர்த்தி வைக்கவும்.</li> <li>உடலின் கீழ்ப்பகுதியில் இரத்தப்போக்கு இருந்தால் காலை உயர்த்தி வைக்கவும்</li> </ul> <p style="text-align: justify;">அதிக இரத்தப் போக்கின் போது செய்யக் கூடாதவை</p> <ul style="text-align: justify;"> <li>தேவைப்படாவிட்டால் நோயாளியை நகர்த்த வேண்டாம்</li> <li>எப்போதும் முதுகெலும்புக் காயம் இருப்பதாகவே கருதவும் (நோயாளியை நகர்த்த வேண்டாம்)</li> <li>எலும்பு முறிவுகளை சரி படுத்த முயல வேண்டாம் (நோயாளியை அசையாமல் வைத்தால் போதுமானது)</li> <li>இரத்தப் போக்கை கட்டுப்படுத்த நேரடி அழுத்தத்தைப் பயன்படுத்தவும்.</li> <li>கண்களில் விழுந்த பொருட்களை அகற்ற வேண்டாம்</li> <li>தீக்காயக் களிம்புகளைப் பயன்படுத்த வேண்டாம்</li> <li>அவசரகால உதவிகளை கூடிய மட்டும் விரைவாக அழைக்கவும்</li> </ul> <h3 style="text-align: justify;">தலைக்காயம்</h3> <p style="text-align: justify;"><strong>கே. குளிர் ஒத்தடம் எவ்வாறு வினை புரிகிறது ?</strong></p> <p style="text-align: justify;">குளிர் ஒத்தடம் வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>கே: தலைவலிக்கு வலி நிவாரணி அளிக்கலாமா?</strong></p> <p style="text-align: justify;">கூடாது. ஏனெனில் அவை அபாயகரமான தலைக் காயத்தின் அறிகுறிகளை மறைத்து விடக்கூடும்.</p> <p style="text-align: justify;"><strong>கே. மூளையதிர்ச்சி என்றால் என்ன?</strong></p> <p style="text-align: justify;">தலையில் அடிபடும்போது மண்டையோட்டிற்குள் இருக்கும் மூளை குலுங்கக் கூடும். இதுவே மூளையதிர்ச்சி எனப்படும். சிறிது நேரம் நினைவிழக்க நேரலாம் (சில வினாடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை). பெரும்பாலானோர் முற்றிலுமாக மீண்டு விடுவர். ஆனால் ஒருசில சமயங்களில் இந்நிலை கவலைக்கிடமாக மாறும். யாருக்காவது மூளையதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை அழைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>கே. மூளையதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை?</strong></p> <p style="text-align: justify;">மூளை அதிர்ச்சியின் அறிகுறிகளாவன:</p> <ul style="text-align: justify;"> <li>மயக்கம்</li> <li>தலைலவலி</li> <li>மனக்குழப்பம்</li> <li>நோயுற்ற உணர்வு</li> <li>கண்மயக்கம்</li> <li>என்ன நடந்தது என்பதை மறந்துபோதல்</li> </ul> <h3 style="text-align: justify;">தீப்புண்கள்</h3> <p style="text-align: justify;"><strong>கே. தீப்புண்ணைக் குளிர்விக்கப் பனிக்கட்டியைப் பயன்படுத்தலாமா?</strong></p> <p style="text-align: justify;">கூடாது. தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பனிக்கட்டி தோலை மேலும் சிதைவடையச் செய்யும்</p> <p style="text-align: justify;"><strong>கே. தீப்புண்ணில் தொற்று பரவாமல் இருக்கக் கட்டு இடலாமா?</strong></p> <p style="text-align: justify;">ஒட்டும் கட்டுகளைப் புண்ணின் மேல் இட்டால் தோலுக்கு மேலும் சேதாரம் ஏற்படும். தொற்று பரவாமல் தடுக்க ஒரு பிளாஸ்டிக் மென்படலம் அல்லது பையை பயன்படுத்தலாம்.</p> <p style="text-align: justify;"><strong>கே. தீப்புண்ணில் துணித்துண்டுகள் சிக்கி இருந்தால் எடுக்க முனையலாமா?</strong></p> <p style="text-align: justify;">கூடாது. தீய்ந்த பகுதிக்கு அருகில் உள்ள துணி அல்லது நகை போன்றவற்றை அகற்றலாமே தவிர தீக்காயத்தில் ஒட்டி இருக்கும் எதையும் அகற்ற முயற்சி செய்யக் கூடாது. ஏனெனில் மேலும் சேதாரம் ஏற்படலாம்.</p> <p style="text-align: justify;"><strong>கே. தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை</strong></p> <ul style="text-align: justify;"> <li>காயம் கடுமையாக இருந்தால் மருத்துவ ஊர்தியை அழைக்கவும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், மின்சாரத்தினால் அல்லது வேதிப்பொருட்களினால் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், காயம் முகம் அல்லது பிறப்புறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.</li> <li>காயம் பட்டவர் இயல்பாக சுவாசிக்கவில்லை என்றால் செயற்கை சுவாசம் அளிக்கவும்.</li> <li>காயம் பட்ட இடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை என்றால் மட்டுமே நகைகளையும் துணிகளையும் அகற்ற முயற்சி செய்ய வேண்டும்.</li> <li>10 நிமிடத்தில் இருந்து அரைமணி நேரம் வரை தீக்காயத்தை மென்மையாப் பாயும் தன்ணீரில் காட்டவும்.</li> <li>வேதிப் பொருட்களால் காயம் ஏற்பட்டிருந்தால் விழித்திரை பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் அல்லது உப்பு நீரால் உடனடியாகக் கழுவவும்.</li> <li>அவயவங்களில் இரண்டாம் நிலை தீப்புண் இருந்தால் அவற்றை இதயத்தை விட உயர்ந்த நிலையில் வைக்கவும்.</li> <li>அதிர்ச்சியைக் குறைக்கவும், உடல் வெப்ப இழப்பைத் தவிர்க்கவும், சுத்தமான, உலர்ந்த, பஞ்சு போல் அல்லாதத் துணியை புண் மேல் மென்மையாக இடவும்.</li> <li>மருத்துவ ஊர்திக்காக காத்திருக்கும் போதும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் போதும் காயம் பட்டவரை, குளிர்ச்சியான, ஈரமான, பஞ்சுத்ததன்மையற்ற துணியால் மூடவும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>தீக்காயம் பட்டால் செய்யக் கூடாதவை</strong></p> <ul style="text-align: justify;"> <li>தீக்காயத்தின் மேல் தைலம், வெண்ணெய், கிரீஸ், எண்ணெய் போன்றவற்றைத் தடவுதல்</li> <li>ஐஸ் பயன்படுத்துதல் (பனிக்கடுப்பு உண்டாக்கும்)</li> </ul> <h3>மயக்கம்</h3> <p style="text-align: justify;"><strong>கே. நோயாளி மயக்கத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">நோயாளி மயக்கத்தில் இருந்தால் அவரது தலையைப் பின்பக்கமாக சாய்த்து வைக்க வேண்டும். காற்றுப் பாதையை நாக்கு விழுந்து அடைத்து விடக் கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. தலையைப் பின்புறமாக சாய்த்து நாக்கைப் முன்புறமாக இழுத்து வைக்கும்போது காற்றுப் பாதை தடங்கல் இல்லாமல் இருக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>கே. ஒருவருக்கு முதுகு அல்லது கழுத்துக் காயம் இருக்கிறது என்று சந்தேகப்பட்டாலும் நோயாளியைப் பக்கவாட்டாகப் படுக்க வைக்கலாமா?</strong></p> <p style="text-align: justify;">முதுகு அல்லது கழுத்துக் காயம் இருக்கிறது என்று சந்தேகப்பட்டாலும் நோயாளியைப் பக்கவாட்டாகப் படுக்க வைப்பது சிறந்தது. அவர்கள் சுவாசித்துக் கொண்டிருப்பதே முதனமையானது. அவர்களைப் புறட்டும்போது முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். புறட்டும் போது முடிந்தால் யாரையாவது துணைக்கு அழைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>கே. மயக்கம் வருவாதாக நோயாளி நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">ஒருவர் தமக்கு மயக்கம் வருவதாக நினைத்தால் அவரை மல்லாந்து படுக்க வைத்து இரத்த ஓட்டம் மூளைக்குச் செல்லும்படியாகக் கால்களை உயர்த்தி வைக்கவும். மூளைக்கு இரத்தம் செல்வது தற்காலிகமாகக் குறைவு படும்போது குறைந்த நேரத்திற்கு மயக்கம் ஏற்படுகிறது. மயக்கம் அடைந்தவர் வெகு விரைவாக நினைவு திரும்பி எழ வேண்டும். இல்லாவிட்டால் அவரை நினைவிழந்தவராகக் கருத வேண்டும்.</p> <h3>மாரடைப்பு</h3> <p style="text-align: justify;"><strong>மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை:</strong></p> <ul style="text-align: justify;"> <li>நோயாளியை உட்கார்ந்து ஓய்வெடுக்க வைத்து அமைதிப்படுத்த வேண்டும்</li> <li>இறுக்கமான ஆடைகளைத் தளர்த்தவும்</li> <li>அறிந்த இதய கோளாறுகளுக்காக நோயாளி நைட்ரோகிளிசரின் போன்ற மருந்துகளை எடுத்து வருபவராக இருந்தால் அதை உட்கொள்ள உதவி செய்யவும்.</li> <li>ஓய்வெடுத்த பின்னும், நைட்ரோ கிளிசரின் உட்கொண்டு மூன்று நிமிடத்துக்குப் பின்னும் வலி நிற்கவில்லை என்றால் அவசர மருத்துவ உதவியை அழைக்கவும்.</li> <li>நோயாளி நினைவற்றும் செயலற்றும் இருந்தால் அவசர மருத்துவ உதவியை அழைப்பதோடு செயற்கை சுவாசமும் அளிக்க வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>மாரடைப்பின் போது செய்யக்கூடாதவை:</strong></p> <ul style="text-align: justify;"> <li>நோயாளியைத் தனியே விடக்கூடாது</li> <li>நோயாளி அறிகுறிகளை மறைக்க அனுமதிக்கக் கூடாது</li> <li>நோயறிகுறிகள் விலகுகின்றனவா என்று காத்திருந்து கவனிக்கவும்</li> <li>இதய நோய்க்கான மருந்து (நைட்ரோகிளிசரின் போன்றவை) கொடுக்கப்படும் வரை வாய் வழியாக எதையும் நோயாளிக்குக் கொடுக்க வேண்டாம்.</li> </ul> <p style="text-align: justify;">இதய இயக்க மீட்பு (CPR) இது ஓர் அவசரகால உயிர்காப்பு முறை. அதில் அடங்கியவை:</p> <ul style="text-align: justify;"> <li>நோயாளியின் இரத்த ஓட்டத்தைத் தொடரவைக்க நெஞ்சை அழுத்துதல்.</li> <li>மூச்சைத் திருப்பிக் கொண்டுவருவதால் நோயாளியின் நுரையீரல்களுக்கு உயிர்வளி அளித்தல்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>நெஞ்சை அழுத்துதல்</strong></p> <ul style="text-align: justify;"> <li>ஒரு கரத்தின் உள்ளங்கையை நோயாளியின் நெஞ்செலும்பின் கீழ் அரைப்பகுதியில் வைக்கவும்.</li> <li>வைக்கப்பட்ட கரத்தின் மேல் மறு உள்ளங்கையை வைத்து விரல்களைப் பின்னவும்.</li> <li>மென்மையாகவும் உறுதியாகவும் 30 தடவை அழுத்தவும் (நெஞ்சாழத்தில் மூன்றில் ஒரு பகுதி)</li> <li>வாயோடு வாய் வைத்துக் கீழ்க்கண்டவாறு செயற்கை மூச்சு இரு தடவை அளிக்கவும்</li> <li>தனியாகவோ துணையோடோ 30 அழுத்தத்துக்கு இரு செயற்கை சுவாசம் என்பதே விகிதம்.</li> <li>ஒரு நிமிடத்துக்கு 100 அழுத்தம் என்பதே இலக்காக இருக்கட்டும்.</li> </ul> <p style="text-align: justify;">பலனளிக்கக் கூடிய நெஞ்சழுத்தம் என்பது களைப்பு தருவதாகும். ஓய்வெடுக்கவும் நெஞ்சழுத்தத்தை பலனளிக்கும் முறையில் செய்யவும் பிறர் உதவியை நாடுவது நல்லது.</p> <p style="text-align: justify;"><strong>வாயோடு வாய் செயற்கை சுவாசம்</strong></p> <ul style="text-align: justify;"> <li>நோயாளி இயல்பாக சுவாசிக்கவில்லை என்றால், உறுதியான தளத்தில் மல்லாந்து படுக்க வைக்கவும்.</li> <li>நாடியை உயர்த்தி தலையைப் பின்புறமாக சாய்த்து மூச்சுப்பாதையைத் திறந்து வைக்கவும்.</li> <li>அவருடைய நாசியை ஒரு விரலாலும் பெருவிரலாலும் மூடவும்.</li> <li>வாயை நோயாளியின் வாயில் வைத்து ஊதவும்.</li> <li>இரண்டு முறை முழுமையாக ஊதவும் (இது உயிர்மீட்பு சுவாசம் எனப்படும்). ஊதும்போது நோயாளியின் நெஞ்சு உயர்ந்து தாழ வேண்டும். இல்லை என்றால் அவரது மூக்கை நன்றாக அழுத்தி வாயோடு வாயை நன்றாகப் பொருத்தி ஊதவும். திரும்பவும் மூச்சு இல்லை என்றால் மூச்சுப்பாதை அடைபட்டுள்ளதா என்று சோதிக்கவும்.</li> <li>30 அழுத்தத்துக்கு இருமுறை செயற்கை சுவாசம் என நிபுணர் உதவி வரும் வரைத் தொடரவும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>1-8 வயது குழந்தைகளுக்கு இதய இயக்க மீட்பு</strong></p> <ul style="text-align: justify;"> <li>ஒரு உள்ளங்கையைப் பயன்படுத்தி நெஞ்சாழத்தின் மூன்றில் ஒரு பகுதி வரை அழுத்தவும்.</li> <li>மேற்கண்ட அடிப்படை முறைகளைக் கையாளவும்</li> </ul> <p style="text-align: justify;"><strong>குழந்தைகளுக்கு (12 மாதம் வரை) இதய இயக்க மீட்பு</strong></p> <ul style="text-align: justify;"> <li>குழந்தையை மல்லாந்து படுக்க வைக்கவும். அவர்களின் நாடியை உயர்த்தி தலையைப் பின் புறமாக சாய்க்க வேண்டிய அவசியமில்லை (ஏனெனில் அவர்களது உடலோடு ஒப்பிடும்போது தலை இன்னும் பெரியதாகவே இருக்கும்).</li> <li>மூக்கை அழுத்தி வாயோடு வாய் வைத்து ஊதவும்- அதிக அழுத்தம் தேவை இல்லை.</li> <li>ஒரு கையின் இருவிரல்களை மட்டும் பயன்படுத்தி மூன்றில் ஒரு பங்கு நெஞ்சாழத்திற்கு நெஞ்சை அழுத்தவும்.</li> <li>மேற்குறிப்பிட்ட இதய இயக்க மீட்பு நடவடிக்கைகளைத் தொடரவும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>கே. இதய இயக்க மீட்பை எப்போது நிறுத்த வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">பொதுவாக இதய இயக்க மீட்பு நடவடிக்கை கீழ்வரும் சூழ்நிலைகளில் நிறுத்தப்படும்:</p> <ul style="text-align: justify;"> <li>நோயாளி மீண்டு தானாகவே சுவாசிக்கும் போது</li> <li>மருத்துவ உதவி வந்தவுடன்</li> <li>மீட்பளிப்பவர் களைப்படைந்தவுடன்.</li> </ul> <h3>மூக்கில் இரத்தம் வடிதல்</h3> <p style="text-align: justify;">மூக்கில் இரத்தம் வடிதலின் அறிகுறிகள்</p> <ul style="text-align: justify;"> <li>ஒன்று அல்லது இரண்டு மூக்கிலும் இரத்தம் வடிதல்</li> <li>சில வேளைகளில் காதுகள்/வாயில் இரத்தம்</li> </ul> <p style="text-align: justify;"><strong>கே. மூக்கில் இரத்தம் வடிதலுக்குக் காரணங்கள் என்ன?</strong></p> <ul style="text-align: justify;"> <li>மூக்கு உலர்தல்</li> <li>அதிக அழுத்தத்துடன் மூக்கு சீந்துதல்</li> <li>ஆஸ்பரின் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துதல்</li> <li>மூக்கு குடைதல்</li> <li>மூக்குக்குள் எதையாவது நுழைத்தல்</li> <li>மூக்கில் காயம்/அடி</li> <li>மூக்கில் தொற்று நோய்</li> <li>தமனித்தடிப்பு</li> <li>குருதி உறைவுக் கோளாறு</li> </ul> <p style="text-align: justify;"><strong>கே. மூக்கில் இரத்தம் வடிதலுக்கான முதலுதவி சிகிச்சைகள் யாவை?</strong></p> <ul style="text-align: justify;"> <li>பயப்படக்கூடாது. தலையைச் சற்றே முன்னோக்கி வைத்து நேராக நோயாளியை உட்கார வைக்கவும்.</li> <li>மூக்குப் பாலத்தின் கீழ் உள்ள மென்மையான பகுதியில் பெருவிரல் அல்லது ஆள்காட்டி விரலால் அழுத்தம் கொடுக்கவும்.</li> <li>இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்கவும்.</li> <li>மூக்கில் அழுத்தம் கொடுக்கும் போது நோயாளி வாயால் மூச்சுவிட வேண்டும்.</li> <li>கழுத்தில் இருக்கும் இறுக்கமான ஆடைகளைத் தளர்த்தவும்</li> <li>10 நிமிடத்திற்குப் பிறகு அழுத்தத்தை விலக்கி இரத்தம் நின்றுவிட்டதா என்று நோக்கவும்</li> <li>இரத்தம் வடிதல் தொடர்ந்தால் மருத்துவ உதவியை நாடவும்</li> </ul> <p style="text-align: justify;">குறிப்பு: பதினைந்து நிமிடத்திற்கு நோயாளியை மூக்கை சீந்தாது இருக்கும்படி கூறவும்</p> <p style="text-align: justify;"><strong>கே. ஒரு குழந்தைக்கு அடிக்கடி மூக்கில் இரத்தம் வடிந்தால் என்ன செய்வது?</strong></p> <p style="text-align: justify;">ஒரு குழந்தைக்கு அடிக்கடி மூக்கில் இரத்தம் வடிந்தால் மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிய வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம் : <a class="external-link ext-link-icon" href="https://ta.nhp.gov.in/" target="_blank" rel="noopener">தேசிய சுகாதார இணையதளம்</a></p> </div>