<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">யோகா</span></h3> <p style="text-align: justify;">உடல் எடை குறைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சியை விட யோகாவே சிறந்ததாக விளங்குகிறது. யோகா ஒரு பழமையான கலை என்று நம் இந்திய வேத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">முனிவர்களின் ஞானம் மற்றும் தற்போதைய நவீன விஞ்ஞானத்தின் கலவையான யோகா, மற்ற உடற்பயிற்சிகளை விட உங்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும். யோகா என்றால் வெறும் ஆசனங்களும் இருக்கைகளும் மட்டுமல்ல. சிலருக்கு மட்டும் தெரிந்த முத்திரைகளும் கூட யோகாவில் உள்ளது. இந்த யோகாசன முத்திரைகளும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது.</p> <p style="text-align: justify;">ஒவ்வொரு யோகாசன முத்திரையும் தனித்துவம் பெற்றது. அதனால் அவைகளை சரியான வழியில் செய்திட வேண்டும். இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும். அதே போல் வாயு முத்திரை காற்றை குறிக்கும். உடலில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அது சமநிலைப்படுத்தும்.</p> <p style="text-align: justify;">அனைத்து யோகாசன முத்திரைகளும் கை அசைவுகளே. அவைகள் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய நன்மைகளை அளிக்கும். ஆனால் இந்த முத்திரைகளை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடாது. ஒவ்வொரு முத்திரையை செய்யவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. குறிப்பிட்ட வகையில் அமர்வது, நிற்பது, படுப்பது போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளது. உடல் நல பயன்களை பெறுவதற்கு இந்த விசேஷ கை சைகைகளை பயன்படுத்துங்கள். அடிப்படையான யோகாசன முத்திரைகளையும் அதனால் உங்கள் உடலுக்கு ஏற்படும் பயன்களையும் இப்போது பார்க்கலாம்.</p> <h3 style="text-align: justify;">யோகா முத்திரைகள்</h3> <p style="text-align: justify;"><strong>க்யான் முத்திரை </strong></p> <p style="text-align: justify;">அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.</p> <p style="text-align: justify;"><strong>வாயு முத்திரை </strong></p> <p style="text-align: justify;">உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரையாகும். உட்காரும் போது, நிற்கும் போது அல்லது படுக்கும் போது, அந்த நாளில் எந்நேரம் வேண்டுமானாலும் இதை செய்யலாம். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வழியை குறைக்க இது உதவும்.</p> <p style="text-align: justify;"><strong>அக்னி முத்திரை </strong></p> <p style="text-align: justify;">உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை; இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.</p> <p style="text-align: justify;"><strong>வருண முத்திரை </strong></p> <p style="text-align: justify;">இந்த யோகாசன முத்திரை உடலில் உள்ள நீர் தனிமத்தை சமநிலைப்படுத்துவதற்காக செய்வதாகும். மேலும் உங்கள் அழகை மேம்படுத்த இந்த முத்திரை உதவும். உங்கள் உடலில் உள்ள நீரோட்டம் நன்றாக வைப்பதாலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் உங்கள் சருமம் மின்னிடும்.</p> <p style="text-align: justify;"><strong>பிராண முத்திரை </strong></p> <p style="text-align: justify;">வாழ்க்கையை குறிக்கும் முத்திரை இது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யக்கூடிய முத்திரை இது. இந்த யோகாசன முத்திரை உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி, உங்கள் கண்பார்வையின் கூர்மையை அதிகரித்து, சோர்வை எதிர்த்து ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும்.</p> <p style="text-align: justify;"><strong>ப்ரித்வி முத்திரை </strong></p> <p style="text-align: justify;">அண்டத்தில் உள்ள உலக தனிமத்தை உங்கள் உடலுக்குள் ஊக்குவிக்கவே இந்த முத்திரை. இந்த முத்திரையினால் கிடைக்கும் உடல்நல பயன்கள் - இரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.</p> <p style="text-align: justify;"><strong>சூன்ய முத்திரை </strong></p> <p style="text-align: justify;">சைபர் அல்லது சூன்ய முத்திரை என்பது உங்கள் காதுகளுக்கானது. இந்த முத்திரை உங்கள் காது வலிகளை போக்கும். மேலும் வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கும் கூட இது உதவும்.</p> <p style="text-align: justify;"><strong>சூரிய முத்திரை </strong></p> <p style="text-align: justify;">சூரியனின் ஆற்றல் திறனை அனுசரிப்பதே சூரிய முத்திரையின் அடிப்படையாகும். சூரியனின் ஆற்றல் திறனை பெறுவதற்கு இந்த முத்திரையை விடியற்காலையில் செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>லிங்கா முத்திரை </strong></p> <p style="text-align: justify;">இந்த முத்திரை ஆண்களின் விரைக்குறியை குறிக்கும். அதனால் தான் என்னவோ உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது இது. இந்த முத்திரை உங்கள் ஆண்மையை அதிகரித்து, சளி சம்பந்தப்பட்ட உடல்நல பிரச்சனைகளை போக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>அபான் முத்திரை </strong></p> <p style="text-align: justify;">பல்துறை முத்திரையான இது அனேகமாக அனைவருக்குமே பயனை அளிக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை இந்த அபான் முத்திரை சுத்தப்படுத்தும். சிறுநீரக கோளாறுகளை கையாள உதவும் இம்முத்திரை. அதே போல் மலம் கழித்தலையும் சீராக்கும்.</p> <h3 style="text-align: justify;">செய்முறை</h3> <p style="text-align: justify;"><strong>1. அறிவு முத்திரை</strong></p> <p style="text-align: justify;">ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.</p> <p style="text-align: justify;"><strong>2. பூமி முத்திரை</strong></p> <p style="text-align: justify;">மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.</p> <p style="text-align: justify;">நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.</p> <p style="text-align: justify;"><strong>3. நீர் முத்திரை</strong></p> <p style="text-align: justify;">சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.</p> <p style="text-align: justify;"><strong>4. வாயு முத்திரை</strong></p> <p style="text-align: justify;">ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.</p> <p style="text-align: justify;"><strong>5. சூன்ய முத்திரை</strong></p> <p style="text-align: justify;">நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.</p> <p style="text-align: justify;"><strong>6. சூரிய முத்திரை</strong></p> <p style="text-align: justify;">மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.</p> <p style="text-align: justify;"><strong>7. வாழ்வு முத்திரை</strong></p> <p style="text-align: justify;">சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.</p> <p style="text-align: justify;"><strong>8. ஜீரண முத்திரை</strong></p> <p style="text-align: justify;">நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>9. இதய முத்திரை</strong></p> <p style="text-align: justify;">நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.</p> <p style="text-align: justify;"><strong>10. லிங்க சக்தி முத்திரை</strong></p> <p style="text-align: justify;">இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.</p> <h3 style="text-align: justify;">முத்திரை - விளக்கம்</h3> <p style="text-align: justify;">முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸமஸ்க்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது. முத்ரா என்ற சொல் ஒரு காரணப் பெயர். முத் என்ற வினைச் சொல் மகிழ்வூட்டும், மனநிறைவளிக்கும் என்று பொருள்படுவது. த்ரா என்ற பதத்துக்கு விரைந்து வெளியேற்றுதல் என்று பொருள். எனவே, தேவதைகளுக்கு மகிழ்வையும் மன நிறைவையும் அளிப்பதுவும், விரைவாகப் பாவங்களை அகற்றுவதும் ஆன கிரியைக்கு முத்ரா என்பதாகக் காரணப் பெயர் அமைந்துள்ளது.</p> <p style="text-align: justify;">முத்திரைகளின் பெருமையை விளக்கிக் கூறும் ச்லோகங்கள் இவ்வாறு கூறுகின்றன: எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும், பாவத் தொடர்பைப் போக்குவதாலும் அவை முத்திரை என்று பெயர் பெறுகின்றன. முத்திரைகள் எல்லாக் காமங்களையும் (இன்பம்) (தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்பதே அறம், பொருள், இன்பம், வீடு என்றாகிறது), அர்த்தங்களையும் (செல்வம்), கூட்டுவிப்பதாகும். தந்த்ரங்களில் கற்பிக்கப்பட்ட முத்திரைகளைக் காட்டுவதால், மந்த்ர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள். அர்ச்சனை, ஜபம், த்யானம் முதலியவற்றின் போதும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப்பரதிஷ்டை , ரக்ஷணம், நைவேத்யம், முதலிய கிரியைகளின்போதும், அந்தந்த (பூஜா) கலபங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் காண்பிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">முத்திரைகளைப் பற்றிய சில விளக்கங்களை நம்மில் பலருக்குப் பரிச்சயமான ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண முறையை ஒரு உதாரணமாகக் கொண்டு காண்போம்.</p> <p style="text-align: justify;">மனனத்தால் (ஜபிப்பதனால்) ஸாதகனைக் (ஜபிப்பவனைக்) காப்பவை (மநநாத் த்ராயதே ) மந்திரங்கள் பலவகை: ஓர் அக்ஷரம் உள்ளவை பிண்டம்; இரண்டு அக்ஷரம் உள்ளவை கர்த்ரீ; மூன்று முதல் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டவை பீஜம்; ஒன்பதுக்கு மேல் அக்ஷரங்கள் கொண்டவை மந்த்ரங்கள்.</p> <p style="text-align: justify;">மந்திரங்கள் அனாதியானவை. இறைவனோடு மூச்சுக் காற்றென ஒன்றியவை. அவற்றை மானஉஷ சக்திகள் உருவாக்கவில்லை. அவை பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ரிஷிகள் மந்திரங்களை முதலில் கண்டறிந்து, அவற்றின் சக்தியை உணர்ந்து, உலக நன்மைக்காக அவற்றை வெளியிட்டவர்கள். ஒரு மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கும் முன் வலக்கையால் சிரஸ்ஸைத் தொட்டு, அந்த மந்திரத்தைக் கண்டறிந்து சொன்ன முனிவரை நினைவு கூர்ந்து, அவரை வணங்குவதாகப் பாவனை செய்வதுதான் குரு ந்யாஸம். இவ்வாறு சிரஸ்ஸைத் தொடும் செய்கை ஒரு முத்திரை.</p> <p style="text-align: justify;">மந்திரம் அமைந்துள்ள சொற்கட்டுக்கு (சந்தத்திற்கு) சந்தஸ் என்று பெயர். அதற்கு வணக்கம் செலுத்துவதே சந்தஸ் ந்யாஸம் என்பது, சந்தஸ்ஸை நினைவு கூர்ந்து, உதட்டின் மேல் வலது கையால் தொடும் முத்திரையே சந்தஸ் ந்யாஸம்</p> <p style="text-align: justify;">அந்தந்த மந்திரத்துக்கு உரிய தேவதையை இதயத்தில் அமர்த்துவதாகப் பாவித்து இதயத்தைத் தொடுவது தேவதா ந்யாஸம்.</p> <p style="text-align: justify;">மந்திரம் என்பது, மரம் போன்று பலன் தரும் வரிந்த சக்தி வடிவம். இதன் விதை போல, கருவாக, இதன் சூக்ஷ்ம சக்தி அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள சொல் வடிவமே பீஜம். அந்த பீஜத்தில் அடங்கியுள்ள வீர்யமே சக்தி. சக்தி தேவையின்றி வேறிடத்தில் செல்லாமல், அதனைப் பிணைத்து வைத்திருக்கும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் என்ற மாலா மஹா மந்திரத்துக்கு ஐம் என்பது பீஜம்; ஸெள: என்பது சக்தி; க்லீம் என்பது கீலகம்; (இந்த ஐம் ஸெள: க்லீம் என்ற மூன்று அக்ஷரங்களும் சேர்ந்து ஸ்ரீ பாலா மந்திரம் என்ற தனிப் பெயரும் பெற்றுள்ளன). ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணத்துக்கு முன்னால் ந்யாஸம் செய்யும்போது, இந்த அக்ஷரங்களைச் சொல்லி, அங்கங்களைத் தொட்டு, அங்கு அவை நிலைத்திருப்பதாக பாவனை செய்கிறோம். இந்த கிரியைகள் பீஜ ந்யாஸம், சக்தி ந்யாஸம், கீலக ந்யாஸம் எனப்படும். எந்த உறுப்புகளை எவ்வாறு தொடவேண்டும் என்பது அவரவரது குரு போதித்த ஸம்ப்ரதாயத்தைப் பொறுத்தது.</p> <p style="text-align: justify;">இவ்வாறே விநியோக ந்யாஸம், கர ந்யாஸம், அங்க ந்யாஸம் முதலியனவும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">மேற்கூறியவற்றால் (அ) மந்திரங்கள் உச்சரிக்கும்போது, முத்திரைகளுக்கு முக்கிய இடம் உண்டென்பதும், (ஆ) அந்த முத்திரைகளும் குரு பரம்பரைக்கு ஏற்ப பேதங்களாகும் என்பதும் பெறப்படும். அதே வகையில்தான், மந்திரங்களை ப்ரயோகித்து சிவாலய பூஜா கிரியைகள் நடக்கும்போது, பல வகையான முத்திரைகளுக்கு அக்கிரியைகளில் முக்கியத்துவம் தரப்படுகின்றது. அவற்றை சிவாச்சாரியார்கள் பயிற்சி பெறும்போது, குருமுகமாகக் கற்றறிவர். பின்னர் அவர்கள் அவற்றைப் பிழைகளின்றி, ச்ரத்தையுடன் ப்ரயோகிக்கும்போது, கிரியைகளைச் சூழ்ந்து வரும் மந்திரங்களின் பலன்கள் பூரணமாக ஸித்தியாகின்றன. முத்திரைகள் வெறும் அங்க சேஷ்டைகள் அல்ல; அவை பொருள் பொதிந்தவை; கிரியைகளுக்கு பூரணத்துவத்தை அளிப்பவை.</p> <p style="text-align: justify;">நல்ல செயல்முறைகளுக்குத் தந்த்ரங்கள் என்று பெயர். மந்திரங்களை உபயோகித்து பூஜை செய்யும் விதி முறைகளும் தந்த்ரங்களே. அத்தந்த்ரங்கள் எழுதப்பட்டுள்ள நூல்களையும் தந்த்ரங்கள் என்றே அழைப்பர். ஆகமங்கள் அனைத்தும் அத்தகு தந்த்ர நூல்களே.</p> <p style="text-align: justify;">வேதங்களில் ஓம் என்ற ப்ரணவமும், ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வெளஷட், வேட், வாத் முதலிய மந்திரங்களும், பூ; புவ; ஸுவ; என்னும் வ்யாஹ்ருதிகளும் முதல் முதலாகக் கூறப்படுகின்றன. பிற்காலத்துத் தந்த்ர சாஸ்திரங்களில் ஹம், ஹாம், ஹும், ஹூம், ஹ்ரீம், ஹ்ராம், ஹ்ரோம், ஸ்ரீம், ஐம், ஏம், க்லீம், பட் முதலிய ஒலிச் சேர்க்கைகள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் மந்திர சக்தி வாயந்தவை. இவற்றை ஆகம நூல்கள் பீஜாக்ஷரங்கள் என்று பெயரிட்டு திருக்கோவில் கிரியைகளுக்குப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. பூஜா மந்திரங்களை முறைப்படி குருவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது, பீஜாக்ஷர மந்திரங்களின் ப்ரயோகமும் கற்றுத் தரப்படும்.</p> <p style="text-align: justify;">யந்த்ரம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளையோ சக்தியையோ தேக்கி வைத்திருக்கும் கருவி, ஒரு செயல் புரிகையில் அதற்குப் பயன்படுத்தப்படும் கருவி, சாதாரண அறிவுக்கெட்ட சக்தியைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சாதனம் என்றெல்லாம் பொருள் காணப்படுகிறது. எனவே மந்திரங்களின் மூலம் பூஜா விதிகளைக் கூறும் தந்த்ர நூல்கள், யந்த்ரங்களின் விவரங்களையும், அவற்றை உபயோகிக்க வேண்டிய முறைகளையும் கூட வெளியிடுகின்றன. மந்திரங்களை ப்ரயோகித்துப் பலனடைய உதவும் தந்த்ரங்களாம் முத்திரைகமைச் சரியாக உபயோகிப்பதால், அம்மந்திரங்களுக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றனர் என்பதும், முத்திரைகள் காட்டும்போது அவை யந்த்ரங்களோடு சம்மபந்தப்பட்டிருந்தால், அந்த யந்திரங்கள் தாங்கியுள்ள, தாங்க வேண்டிய, சக்திக்கான தேவதைகளும் திருப்தி அடைவது உறுதி.</p> <p style="text-align: justify;">முத்திரைகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. பெரும்பாலான முத்திரைகள் அப்போது ஓதப்பட்டுக்கொண்டிருக்கும் மந்திரச் சொற்களின் பொருளையும், வழிபாட்டு உபாங்கத்தையும் அனுசரித்தே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நடைபெறும் சிவ பூஜா கிரியைகளை, மந்திரங்களின் வாயிலாக அறிய முடியாதவர்களும்கூட, முத்திரைகளைக் கண்ணுற்று, அவற்றை ஊகித்து உணரலாம்.</p> <p style="text-align: justify;">சிவாலயங்களில் பயன்படுத்தப்பெறும் பல்வகையான முத்திரைகளில் சில, தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முத்திரைகளின் சித்திரத்தைக் வைத்துக்கொண்டு, அவற்றில் பயிற்சியற்றோர் தேர்ச்சி பெறலாம் என்ற நோக்கில் அவை இங்கு சேர்க்கப்படவில்லை ! முத்திரைகளை பூஜா விதிகளோடு சேர்த்து, குரு மூலமாகத்தான் கற்றறிய வேண்டும்; அச்சிலேறி வருவதைப் பார்த்துக் கற்றுக் கொண்டு முத்திரைகளை ப்ரயோகிக்க இயலாது; ப்ரயோகித்தாலும் அவை பலன் தராதென்பதோடுகூட, அவ்வழி பெரும் தவறுங்கூட. இந்த புத்தகத்தில் காணப்படும் முத்திரைகளின் படங்களும் விளக்கமும், ஆலய வழிபாட்டிற்குச் செல்வோர், சிவாச்சாரியார் செய்யும் கிரியைகளின் பொருளை, முக்கியத்துவத்தை, உணர்ந்து கொள்ள உதவுவதற்காகவே அச்சேறி வருகின்றன.</p> <h3>முத்திரைகளின் விளக்கம்</h3> <p style="text-align: justify;">1. <strong>குரு வந்தன முத்திரை: ஸுமுகம்: </strong>விரித்து, பக்க வாட்டில் சேர்ந்த இரு கைகளையும் உள்ளங்கைகள் நம் முகத்தைப் பார்க்குமாறு உயர்த்திப் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">2. <strong>குரு வந்தன முத்திரை: ஸுவ்ருத்தம்: </strong>ஸுமுக (1) முத்திரையில் விரல்களை மடக்குதல். கட்டைவிரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">3. <strong>குரு வந்தன முத்திரை: சதுரச்ரம்:</strong> மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் கைகளை விரித்து (இடது கை கீழே) மணிக்கட்டு அருகே சேர்த்தல்.</p> <p style="text-align: justify;">4. <strong>குரு வந்தன முத்திரை: முத்கரம்: </strong>கட்டைவிரல்கள் தன்னை நோக்க, இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.</p> <p style="text-align: justify;">5. <strong>குரு வந்தன முத்திரை: யோனி:</strong> இரு மோதி விரல்களையும், நடுவிரல்களின் பின்பக்கமாக வளைத்துக் கொண்டுவந்து, ஆட்காட்டி விரல்களால் பிடித்துக் கொள்ளவும்; இடது சுண்டுவிரலை வலது சுண்டுவிரலால் பிடித்துக் கொள்ளவும்; கட்டைவிரல் நுனிகளால் நடுவிரல்களின் நடுப்பகுதியைத் தொடவும்.</p> <p style="text-align: justify;">6. <strong>குரு வந்தன முத்திரை:</strong> <strong>ம்ருகீ:</strong> இரு கைகளின் கட்டை விரல், நடு விரல். மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">7. <strong>அர்க்ய ஸ்த்தாபன முத்திரை:</strong> <strong>மத்ஸ்யம்:</strong> வலது உள்ளங்கை கீழ் நோக்க, இடது உள்ளங்கை அதனைத் தாங்க, கட்டை விரல்களை மட்டும் மீனின் செதில்களைப் போல் அசைத்துக் காட்டுதல்.</p> <p style="text-align: justify;">8. <strong>அர்க்ய ஸ்த்தாபன முத்திரை: அஸ்த்ரம்:</strong> வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.</p> <p style="text-align: justify;">9. <strong>அர்க்ய ஸ்த்தாபன முத்திரை: அவகுண்டனம்:</strong> கைமுட்டிகளைக் கீழே காட்டி, வலது ஆட்காட்டி விரலால் ப்ரதக்ஷிணமாகவும், இடது ஆட்காட்டி விரலால் அப்ரதக்ஷிணமாகவும் இலக்கைச் சுற்றிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">10. <strong>அர்க்ய ஸ்த்தாபன முத்திரை:</strong> <strong>தேனு</strong> - அம்ருதீகரணம்: ஒரு கையின் சுட்டு விரல் மற்றதின் மோதிர விரலைத் தொடவும், ஒன்றின் நடுவிரல் மற்றதின் ஆள்காட்டி விரலைத் தொடவும் செய்வது. (பால் இறங்கி நிற்கும் பசுவின்மடி போல் காணப்படும்.)</p> <p style="text-align: justify;">11. <strong>அர்க்ய ஸ்த்தாபன முத்திரை:</strong> <strong>காலினீ: </strong>இடது கை மேல் நோக்க, வலது கையைக் கவிழ்த்து, விரல்களை வளைத்துப் பிடித்தல். இடது கட்டை விரலும் வலது சுண்டுவிரலும் சேர்ந்து காணும் இடைவெறி மூலம் விசேஷார்க்யத்தப் பார்க்க உதவும் முத்திரை.</p> <p style="text-align: justify;">12. <strong>ஆவாஹனாதி முத்திரை: ஆவாஹனீ:</strong> ஸுமுக (1) முத்திரையில் கட்டை விரல்களால் மோதிர விரல்களின் அடிப்பாகத்தை தொட்டு அசைத்தல்.</p> <p style="text-align: justify;">13. <strong>ஆவாஹனாதி முத்திரை: ஸம்ஸ்தாபனீ (ஸ்தபனீ):</strong> ஆவாஹனீ (12) போலவே கீழ் நோக்கிச் செய்தல்.</p> <p style="text-align: justify;">14. <strong>ஆவாஹனாதி முத்திரை: ஸந்திதாபனீ:</strong> கைமுட்டிகளை விரல்களின் நடுப்பகுதியில் சேர்த்து, கட்டை விரல்களை மேல் நோக்கிப் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">15. <strong>ஆவாஹனாதி முத்திரை: ஸந்நிரோதினீ:</strong> கட்டைவிரல்கள் உள்ளே மறைய, மற்ற நான்கு விரல்களின் நகங்கள் ஒன்றுக்கொன்று உரச, முட்டிகளைச் சேர்த்துப் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">16. <strong>ஆவாஹனாதி முத்திரை: ஸம்முகீகரணீ:</strong> விரல்கள் மடங்கிய நிலையில், கைமுட்டிகளை பக்க வாட்டில் சேர்த்து, நிமிர்த்திப் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">17. <strong>ஆவாஹனாதி முத்திரை: வந்தனீ:</strong> கைகூப்பி, விரல்கள் வளையாது, மார்புக்கு நேரே வந்தனம் செய்தல்.</p> <p style="text-align: justify;">18. <strong>ஆவாஹனாதி முத்திரை: தத்வம்:</strong> மற்ற விரல்கள் நிமிர்ந்திருக்க, இடது கை மோதிர விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.</p> <p style="text-align: justify;">19. <strong>ஆவாஹனாதி முத்திரை: சின் முத்திரை (அ) ஜ்ஞாந முத்திரை:</strong> வலது உள்ளங்கை வெளியே நோக்க, மூன்று விரல்கள் நிமிர்ந்திருக்க, ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.</p> <p style="text-align: justify;">20. <strong>ஆவாஹனாதி முத்திரை: ஸம்ஹாரம் (நிர்யாணம்):</strong> இடக்கை கீழ் நோக்க, அதன் மேலே வலக்கையினை மேலே நோக்குமாறு வைத்து விரல்களைப் பிடித்துக்கொண்டு அசைத்துக் காட்டுதல்.</p> <p style="text-align: justify;">21. <strong>நியாஸ முத்திரை: முகம்:</strong> நான்கு வலக்கை விரல்களால் உதடுகளைத் தொடுதல்.</p> <p style="text-align: justify;">22. <strong>நியாஸ முத்திரை: கரசம்புடம்:</strong> ஸம்புடம் போல், கைகளை எதிர்முகமாகக் குவித்துப் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">23. <strong>நியாஸ முத்திரை: அஞ்ஜலி (நமஸ்காரம்):</strong> இரண்டு கைகளையும் சேர்த்து, விரல்களை இணைத்து, பெருவிரல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னியுற வைப்பது.</p> <p style="text-align: justify;">24. <strong>நியாஸ முத்திரை: ஹ்ருதயம்:</strong> வலக்கையில் நடுவிலுள்ள மூன்று விரல்களால் இதயப் பகுதியைத் தொடுதல்.</p> <p style="text-align: justify;">25. <strong>நியாஸ முத்திரை: சிரஸ்:</strong> வலக்கையில் நடு மற்றும் மோதிர விரல் நுனிகளால் தலை உச்சியைத் தொடுதல்.</p> <p style="text-align: justify;">26. <strong>நியாஸ முத்திரை: சிகை:</strong> வலக்கை கட்டை விரல் நுனியால் சிகை (குடுமி) இருக்க வேண்டிய இடத்தைத் தொடுதல்.</p> <p style="text-align: justify;">27. <strong>நியாஸ முத்திரை: கவசம்:</strong> கைகளை மாற்றி, அனைத்து விரல்களாலும் தோள்களைத் தொடுதல்.</p> <p style="text-align: justify;">28. <strong>நியாஸ முத்திரை: நேத்ரம்:</strong> வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால், இரு கண்கள், அவற்றின் நடுப்பகுதி ஆகியவற்றைத் தொடுதல்.</p> <p style="text-align: justify;">29. <strong>நியாஸ முத்திரை: அஸ்த்ரம்:</strong> வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.</p> <p style="text-align: justify;">30. <strong>நியாஸ முத்திரை: ந்யாஸம்:</strong> வலது கை கட்டை விரலால் மடங்கிய மூன்று விரல்களைச் சேர்த்தபின், ஆட்காட்டி விரலால் அங்கங்களைத் தொடுவது.</p> <p style="text-align: justify;">31. <strong>நிவேதன முத்திரை: க்ராஸம்: </strong>மேல் நோக்கும் இடது கையால், கிண்ணத்தில் அன்னம் இருப்பது போல் பாவனையாகக் காட்டுவது.</p> <p style="text-align: justify;">32. <strong>நிவேதன முத்திரை: ப்ராணன்:</strong> வலது கை நடுவிரலையிம் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">33. <strong>நிவேதன முத்திரை: அபானன்:</strong> வலது கை மோதிர விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதன் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">34. <strong>நிவேதன முத்திரை: வ்யானன்:</strong> வலது கை சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">35. <strong>நிவேதன முத்திரை: உதானன்:</strong> வலது கை மோதிர விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">36. <strong>நிவேதன முத்திரை:</strong> <strong>ஸமானன்;</strong> வலது கையின் அனைத்து விரல்களையும் சேர்த்துப் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">37. <strong>கணேச வந்தன முத்திரை: தந்தம்:</strong> வலக்கையின் நடுவிரலை மட்டும் மேலே நீட்டி, மற்றவற்றை மடக்கிப்பிடித்தல்.</p> <p style="text-align: justify;">38. <strong>கணேச வந்தன முத்திரை: பாசம்:</strong> இரு கை முட்டிகளையும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் தொடுமாறு சேர்த்து, கட்டை விரல் நுனிகளும் அவற்றைச் சந்திக்கச் செய்தல்.</p> <p style="text-align: justify;">39. <strong>கணேச வந்தன முத்திரை: அங்குசம்: </strong>வலக்கை நடு விரல் நேராக நீட்டப்படும்; ஆள்காட்டி விரல் அதன் நடுப்பகுதி வரை வந்து முன் நோக்கி வளையும்.</p> <p style="text-align: justify;">40. <strong>கணேச வந்தன முத்திரை: விக்னம்: </strong>இறுகப்பிடித்த வலக்கை முட்டி கீழ் நோக்க, நடு விரல் மட்டும் நீட்டப்படுவது.</p> <p style="text-align: justify;">41. <strong>கணேச வந்தன முத்திரை: பரசு:</strong> உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று நோக்க, குறுக்கு வாட்டில் சேர்த்து, விரல்களை நீட்டுதல்.</p> <p style="text-align: justify;">42. <strong>கணேச வந்தன முத்திரை: லட்டுகம்:</strong> கையிலடங்கிய லட்டு அல்லது கொழுக்கட்டையைக் காண்பிப்பது போன்ற பாவனை.</p> <p style="text-align: justify;">43. <strong>கணேச வந்தன முத்திரை: பீஜாபூரம்:</strong> மாதுளம்பழம் போலக் கையைக் குவித்துப் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">44. <strong>சிவ வந்தன முத்திரை: லிங்கம்:</strong> உயர்த்திய வலது கட்டை விரலை முதலில் இடது கட்டை விரலால் பற்றிக் கொண்டு, பிறகு மற்ற இடக்கை விரல்களாலும் சுற்றிப் பிடித்து, இறுதியாக வலது கைவிரல்களால் இடக்கையை இறுகப் பிடித்து, இதயத்தின் அருகே பரிசுத்தமான மனத்துடன் வைத்துக் கொள்வது.</p> <p style="text-align: justify;">45. <strong>சிவ வந்தன முத்திரை: யோனி:</strong> மோதிர விரல்களுடன் சேர்த்து நீட்டிய நடு விரல்களின் மேல், கட்டை விரல்களை வைத்தல்.</p> <p style="text-align: justify;">46. <strong>சிவ வந்தன முத்திரை: திரிசூலம்</strong>: மடக்கிய வலக்கை சுண்டு விரலைக் கட்டை விரலால் அழுத்திக்கொண்டு, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">47. <strong>சிவ வந்தன முத்திரை: அக்ஷமாலா</strong>: வளைந்த வலக்கை ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டை விரல் நுனி தொட, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.</p> <p style="text-align: justify;">48. <strong>சிவ வந்தன முத்திரை: வரம்</strong>: கீழ் நோக்கி மலர்ந்து நீண்ட வலது கை.</p> <p style="text-align: justify;">49. <strong>சிவ வந்தன முத்திரை: அபயம்:</strong> மேல் நோக்கி மலர்ந்து நீண்ட இடது கை.</p> <p style="text-align: justify;">50. <strong>சிவ வந்தன முத்திரை: ம்ருகீ:</strong> இரு கைகளின் கட்டை விரல், நடு விரல், மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து , மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">51. <strong>சிவ வந்தன முத்திரை: கட்வாங்கம்:</strong> கையின் ஐந்த விரல்களையும் மேல் நோக்கிச் சேர்த்து, சற்று வளைத்துப் பிடித்தல்.</p> <p style="text-align: justify;">52. <strong>சிவ வந்தன முத்திரை: கபாலம்:</strong> இடது கையில் மண்டை ஓடு இருப்பது போல் பாவனை செய்து, அந்தக் கையை இடது பக்கமாக பிøக்ஷ கேட்பது போல் நீட்டுதல்.</p> <p style="text-align: justify;">53. <strong>சிவ வந்தன முத்திரை: டமருகம்: </strong>சற்றே விரிந்த வலக்கை முட்டியை, நடு விரலை மட்டும் சற்றுத் தூக்கிப் பிடித்து, காதிற்கு அருகே உடுக்கு அடிப்பது போல பாவனை செய்தல்.</p> <p style="text-align: justify;">54. <strong>பொதுவான முத்திரை: சாபம் (வில்): </strong>உயர்த்திய வலக்கை நடுவிரல் நுனியை, ஆட்காட்டி விரல் நுனியைத் தொடுமாறு செய்தல்.</p> <p style="text-align: justify;">55. <strong>பொதுவான முத்திரை: சங்கம்: </strong>இடது கைக் கட்டை விரலை வலது முட்டியால் பற்றிக்கொண்டு, வலக்கை கட்டை விரலைச் சங்கு ஊதுவதுபோல் பாவனை செய்தல்.</p> <p style="text-align: justify;">56. <strong>பொதுவான முத்திரை: கட்கம்: </strong>வலது கட்டைவிரலால் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, மற்ற இரு (ஆள்காட்டி, நடு விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேராமல் நீட்டுதல், (ஆள்காட்டி, நடு) விரல்களைச் சேர்த்து வைத்து நீட்டுவதே கட்க முத்திரை என்றும் சேர்க்காமல் நீட்டுதல் கோவிடாண முத்திரை என்றும் கொள்வதுண்டு)</p> <p style="text-align: justify;">57. <strong>பொதுவான முத்திரை: சர்மம் (கேடயம்):</strong> இடது கையைக் குறுக்காக நீட்டி விரல்களை மடக்குதல்.</p> <p style="text-align: justify;">58. <strong>பொதுவான முத்திரை: முஸலம்: </strong>இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.</p> <p style="text-align: justify;">59. <strong>பொதுவான முத்திரை: வீணா: </strong>விணை வாசிப்பது போல் கைகளால் பாவனை செய்து தலையையும் அசைப்பது.</p> <p style="text-align: justify;">60. <strong>பொதுவான முத்திரை: புஸ்தகம்: </strong>கை முஷ்டியைத் தன்னை நோக்கிப் பிடிப்பது.</p> <p style="text-align: justify;">61. <strong>பொதுவான முத்திரை: கும்பம்: </strong>வலது இடது கட்டை விரல்கள் பக்க வாட்டில் உரசுமாறு இரு கை முட்டிகளையும் சேர்த்து நீட்டுதல்.</p> <p style="text-align: justify;">62. <strong>பொதுவான முத்திரை: ப்ரார்த்தனா: </strong>இரு கை விரல்களையும் விரித்துப் பக்க வாட்டில் தன்னை நோக்கிச் சேர்த்து இதயத்தில் வைத்துக் கொள்ளுதல்</p> <p style="text-align: justify;">63. <strong>பொதுவான முத்திரை: பசுமுத்திரை: </strong>சுண்டு விரல்களின் அடிப் பகுதியை கட்டை விரல் நுனிகளால் தொட்டுக்கொண்டு, இருகைகளையும் ஒன்று சேர்த்துக் குவித்து வணங்குவது. இது முத்தேவியருக்கும் மிகவும் உகந்தது.</p> <p style="text-align: justify;">64. <strong>நிரீக்ஷண முத்திரை: </strong>கட்டை விரல் மோதிர விரலை வளைத்துப் பிடிக்க மற்ற விரல்களை நீட்டுவது.</p> <p style="text-align: justify;">65. <strong>அப்யுக்ஷண முத்திரை:</strong> விரல்களை சேர்த்து நீட்டி, கட்டை விரலை அவற்றுடன் இணைத்து, கவிழ்த்துப் பிடிப்பது. இது சோத்திக முத்திரை, மற்றும் கவிழ்ந்த பதாகை எனவும் வழங்கப்பெறும்.</p> <p style="text-align: justify;">66. <strong>கோவிடான முத்திரை: </strong>ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணையாமல் நீட்டி, சுண்டு விரல் மோதிர விரல்களை மடக்கி இவற்றை கட்டை விரல்லால் அழுத்திப் பிடிப்பது.</p> <p style="text-align: justify;">67. <strong>சோடிகா முத்திரை; </strong>விரல்களை மடக்கி, ஆள்காட்டி விரலால் கட்டை விரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிப்பது.</p> <p style="text-align: justify;">68. <strong>சாண முத்திரை: </strong>நடுவிரல்கள் மூன்றையும் இணைத்து, மற்ற விரல்களை விலக்கி நீட்டுவது.</p> <p style="text-align: justify;">69<strong> மஹா முத்திரை:</strong> கைவிரல்கள் நீண்டிருப்பது.</p> <p style="text-align: justify;">70. <strong>ப்ரஸன்ன முத்திரை: </strong>இரண்டு கைகளையும் கூப்பி, இரண்டு கட்டை விரல்களையும் இணைத்து, அவற்றின் நுணிகள் மோதிர விரலின் அடியில் பொருந்த, உள்ளே மடக்குவது. இதை ஆவாஹன முத்திரை எனவும் கூறுவர்.</p> <p style="text-align: justify;">71. <strong>அதிஷ்டான முத்திரை: </strong>இரண்டு கைக் கட்டை விரல்களாலும் உள்ளங்கையைத் தொடுவது.</p> <p style="text-align: justify;">72. <strong>உஷ்ணீக முத்திரை: </strong>கட்டை விரல் நுணியை ஆள்காட்டி விரல் நுணியால் தொடுவது.</p> <p style="text-align: justify;">73. <strong>யோக முத்திரை: </strong>நடுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது. இதை மோக முத்திரை என்றும் கூறுவர்.</p> <p style="text-align: justify;">74. <strong>ஆக்ர முத்திரை: </strong>சுண்டுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது.</p> <p style="text-align: justify;">75. <strong>கடா முத்திரை: </strong>இரண்டு கைகளையும் இணைந்து, நடு விரல்கள் மூன்றினாலும் உள்ளங்கைகளைத் தொடுவது.</p> <p style="text-align: justify;">76. <strong>உஷ முத்திரை:</strong> ஒரு கை மோதிர விரலால் மற்றொரு கையில் உள்ளங்கையைத் தொடுவது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: ஒன் இந்தியா நாளிதழ்</p> </div>