<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">தொடர் மழையின் போது நீர் மாசுபடுவதால், பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், நோய்கள் பரவாமல் தடுக்க ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">தொடர் மழையால், நீர் ஆதாரங்கள் அனைத்தும் மாசுபடும். எனவே பருவமழையின் தாக்கம் சிறிது குறைந்ததும், நீர் மாசுபாடு தொடர்பான பல்வேறு நோய்கள் பரவக் கூடும்.</p> <h3 style="text-align: justify;">நோய்கள்</h3> <p style="text-align: justify;">கொசுக்களால் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. நீர் மாசுபடுவதால் டைபாய்டு, மலேரியா, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, காலரா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;">குடிக்கப் பயன்படுத்தும் நீரை கொதிக்க வைத்து மட்டுமே பருக வேண்டும். மழைநீர் ஆங்காங்கே தேங்கியிருந்தால், அதில் நடமாடும்போது உடலில் பாக்டீரியாக்கள் நுழையும் அபாயம் உள்ளது. எனவே வெளியே சென்று வந்த உடனே கை, கால்களை சுத்தமாகக் கழுவ வேண்டும்.</p> <p style="text-align: justify;">தெருவோர உணவு, திறந்தவெளியில் சமைக்கப்படும் உணவு, ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மழைக் காலங்களில் புதியதாகத் தயாரிக்கப்பட்ட, சூடான உணவை உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளைத் தவிரிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">குழந்தைகளுக்கான பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">நீர் மாசுபடுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்குக் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவர்.</p> <p style="text-align: justify;">குழந்தைகளுக்கு சளி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரக்கூடும். எனவே குழந்தைகளை மழை நேரத்தில் தண்ணீரில் விளையாட அனுமதிக்கக் கூடாது.</p> <p style="text-align: justify;">காய்ச்சிய குடிநீரை குடிக்கப் பழக்க வேண்டும். இரவு நேரங்களில் கம்பளி ஆடை போன்ற கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். குழந்தைகள் வெளியிலோ, கழிவறைக்கோ சென்று வந்தததும் கை, கால்களை சுத்தப்படுத்த வேண்டும். துரித உணவுகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தினமணி</p> </div>