<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">"ஏலக்காயை பாயசம் மற்றும் பிரியாணிக்கு எதற்காக சேர்க்கிறீர்கள்?" எனக் கேட்டால், பெரும்பாலோனோர் வாசனைக்காக என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.</p> <p style="text-align: justify;">ஏலக்காயின் பிறப்பிடம் இந்தியாதான். இயற்கை எழில் கொஞ்சும் காடு சார்ந்த பகுதிகளில் விளைகிறது. இது இஞ்சி வகையை சார்ந்தது. வாசனைப் பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு.</p> <p style="text-align: justify;">ஜீரண உறுப்புகளின் கோளாறுகளை போக்குவதற்கு, வாய்ப் புண், வாய் அல்சர், மன அழுத்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">சிறுநீரக மண்டலம்</h3> <p style="text-align: justify;">ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், நச்சுக்களை சிறுநீரகம் மூலமாக வெளியேற்றிவிடும். மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறு நீரகப்பை, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் ஆகியவற்றை சுத்தமாக்கும்.</p> <h3 style="text-align: justify;">மூக்கடைப்பு</h3> <p style="text-align: justify;">ஜலதோஷத்தால், மூக்கடைப்பு ஏற்பட்டால் குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்போது, நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.</p> <h3 style="text-align: justify;">மன அழுத்தம்</h3> <p style="text-align: justify;">ஏலக்காய் கலந்த தேநீர் குடிப்பதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபடலாம் என்று மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">புற்று நோய்</h3> <p style="text-align: justify;">ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்ளும்போது புற்று நோய் செல்கள் உடலில் உருவாவது தடுக்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">இரத்த உறைதல்</h3> <p style="text-align: justify;">இதயத்தில் ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">அஜீரணம், வாய்வு</h3> <p style="text-align: justify;">ஜீரண பிரச்சனைகளுக்கு, வாய்வு, ஏப்பம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் என சகல உணவுக் குடல் மற்றும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு ஏலக்காய் பலன் தரும்.</p> <h3 style="text-align: justify;">தலைசுற்றல்</h3> <p style="text-align: justify;">வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு சில ஏலக்காய்களை தட்டி, அரை டம்ளர் நீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சவும். அதில் சிறிது பனை வெல்லம் போட்டு வெதுவெதுப்பாக குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.</p> <h3 style="text-align: justify;">வாய்வுத் தொல்லை</h3> <p style="text-align: justify;">ஏலக்காய் இயற்கையான ஆன்டாசிட் ஆக செயல்படுகிறது. 3 ஏலக்காயை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, உணவு உண்பதற்கு முன் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.</p> <h3 style="text-align: justify;">விக்கல் நிற்க</h3> <p style="text-align: justify;">விக்கல் நிற்காமல் தொடர்ந்துகொண்டிருந்தால், 2 ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலைகளை சிறிது எடுத்து, நீரில் போட்டு, காய்ச்சி குடித்தால், விக்கல் நின்று விடும்.</p> <p style="text-align: justify;">ஏலக்காயின் பலன்கள் இன்னும் ஏராளம். சில தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் பாலில் கலந்தோ, அல்லது தேநீரிலோ, உணவிலோ சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படட்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: ஒன்இந்திய நாளிதழ்</p> </div>