<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பியிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்களில் பலருடைய உடலை நீரிழிவு, மிகை - குறைந்த ரத்தஅழுத்தம், உடல்பருமன் பிரச்சினைகள் வெளியே தெரியாமல் தின்றுகொண்டிருந்தன.</p> <p style="text-align: justify;">இத்தனைக்கும் அந்த நிறுவனத்தில் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி மையம், ஏரோபிக்ஸ் கூடம், நீச்சல் குளம் போன்ற பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இத்தனை வசதிகள் இருந்தும் ஊழியர்களுக்கு உடல் சார்ந்து இத்தனை பிரச்சினைகள் இருப்பதற்கு என்ன காரணம், இதை எப்படிச் சரிசெய்வது எனப் பல கேள்விகள் தோன்றுகின்றன.</p> <h3>பிரச்சினைகள் பலவிதம்</h3> <p style="text-align: justify;">“பன்னாட்டு நிறுவனங்களில் 25 முதல் 45 வயதுவரை உள்ளவர்களே அதிகம் பணிபுரிகின்றனர். 35-லிருந்து 45 வயதுவரை இருந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, தைராய்டு, பி.சி.ஓ.டி. என 150 ஊழியர்களுக்கு வெவ்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடற்பயிற்சியோ, வேறு வகையான முயற்சிகளோ எதுவுமே பயன்தரவில்லை என்பதுதான் இன்றைய நிலை.</p> <h3>சரிவிகித உணவு</h3> <p style="text-align: justify;">புரதம் அதிகம் தேவைப்படுவோருக்குப் புரதச்சத்தும் நார்ச்சத்து அதிகம் தேவைப்படுவோருக்கு நார்ச்சத்து மிகுந்த உணவும் அளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் பி.எம்.ஐ. அளவின் அடிப்படையில் ரத்தஅழுத்தம், நீரிழிவின் வகை ஆகியவற்றைக் கொண்ட ஒரு மருத்துவ அட்டவணையைத் தகுந்த மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையோடு உருவாக்கிக்கொள்ள முடியும். அந்த அட்டவணையின் அடிப்படையிலும் ஒருவருக்கான சரிவிகித உணவின் பட்டியலை, (உணவின் அளவு மற்றும் கலோரி அளவோடு) அவர்கள் அறிவுறுத்துவர்.</p> <p style="text-align: justify;">உணவில் சர்க்கரை, மைதா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். பாரம்பரியத் தானியங்களால் செய்யப்பட்ட உணவு, கோதுமை தோசை, வரகு, சாமை, தினை போன்றவற்றால் ஆன உணவுப் பண்டங்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம்”</p> <p style="text-align: justify;"><strong>சரிவிகிதம் முக்கியம்</strong></p> <ul> <li style="text-align: justify;">சரிவிகித உணவை உண்பது எப்படி முக்கியமோ, அதைவிட முக்கியம் எப்போது சாப்பிட வேண்டும் என்பதும். நீங்கள் எந்தப் பணியைச் செய்பவராக இருந்தாலும் சரி, இரவில் தாமதமாகச் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் இரவு உணவைச் சாப்பிட்டுவிட (அரை வயிறு அளவுக்கு) வேண்டும். சாப்பிட்டு ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.</li> <li style="text-align: justify;">வீட்டில் விசேஷம், பார்ட்டி போன்ற காரணங்களால் உங்களுக்கு ஒவ்வாத புதிய உணவு வகைகளை, எளிதில் ஜீரணமாகாத உணவை உண்பதற்கு முயற்சிக்காதீர்கள். அதனால் எந்தப் பலனும் இல்லை. ஒருநாள்தானே என்று உங்களை நீங்களே சமாதானம் செய்துகொள்ளாதீர்கள்.</li> <li style="text-align: justify;">அவசர அவசரமாக உண்பதும் அதிகமாக உண்பதும் வயிற்றுக்கு உபாதையாக முடியும்.</li> <li style="text-align: justify;">இரைப்பைக்கு ஓய்வு அவசியம். இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உணவு செரித்துவிட்டால். அது நல்ல நித்திரைக்கு வழிவகுக்கும்.</li> <li style="text-align: justify;">அதிகக் காரம், அதிகப் புளிப்பு மிகுந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">தயிர், நீர்ச்சத்து நிறைந்த உணவை இரவில் தவிர்க்க வேண்டும். மதிய உணவில் கீரைகளைச் சேர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, இரவு உணவில் சேர்த்தால் ஜீரணக் குறைபாடு ஏற்படும்.</li> <li style="text-align: justify;">உணவைப் பொறுமையாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது குளிர்பானங்களோ, நீரோ அருந்தக் கூடாது.</li> <li style="text-align: justify;">இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானம் அருந்துவது நல்லது. மாலையிலும் சுக்கு மல்லி கலந்த பானம் சிறந்தது.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தி-ஹிந்து தமிழ் நாளிதழ்</p> </div>