உலக ஹீமோபிலியா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17 அன்று கொண்டாடப்படுகிறது. இரத்தப்போக்கு கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகளாவிய சுகாதார முயற்சியாக இந்த நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. உள்ளூர் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து ஹீமோபிலியாவை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதையும் தடுப்பதையும் ஊக்குவிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பின்னணி 1989 ஆம் ஆண்டு முதல், ஹீமோபிலியா மற்றும் பிற இரத்தப்போக்கு கோளாறுகள் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதற்காக ஏப்ரல் 17 ஆம் தேதி உலக ஹீமோபிலியா தினம் கொண்டாடப்படுகிறது. உலக ஹீமோபிலியா கூட்டமைப்பு (WFH) நிறுவனர் பிராங்க் ஷ்னாபலின் பிறந்த நாள் அன்று அவர் நினைவாகத் இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹீமோபிலியா ஹீமோபிலியா என்பது ஒரு இரத்தப்போக்கு கோளாறு. இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்களுக்கு, இரத்த உறைவு செயல்முறை சரியாக வேலை செய்வதில்லை. இதன் விளைவாக, இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்களுக்கு இயல்பை விட நீண்ட நேரம் இரத்தப்போக்கு ஏற்படலாம். ஹீமோபிலியா மரபுரிமையாகவோ அல்லது சிலா காரணிகளால் பெறப்பட்டதாகவோ இருக்கலாம். இரத்தப்போக்கு கோளாறின் அறிகுறிகள் பின்வருமாறு: மூட்டுகள், தசைகள் மற்றும் மென்மையான திசுக்களில் இரத்தப்போக்கு அதிகப்படியான சிராய்ப்பு நீடித்த, கனமான மாதவிடாய் காலம் (மெனோராஜியா) காரணம் விவரிக்க முடியாத மூக்கில் இரத்தப்போக்கு சிறிய வெட்டுக்கள், இரத்தம் மாதிரி எடுத்தல் அல்லது தடுப்பூசிகள், சிறிய அறுவை சிகிச்சை அல்லது பல் சிகிச்சைகளுக்குப் பிறகு நீடித்த இரத்தப்போக்கு. 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் 2025 ஆம் ஆண்டு உலக ஹீமோபிலியா தினத்திற்கான கருப்பொருள், 'அனைவருக்கும் சமமான பராமரிப்பு: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் இரத்தப்போக்கு உண்டு' என்பதாகும். இது இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறந்த நோயறிதல் மற்றும் சிகிச்சையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், பெண்களுக்கு சமமான பராமரிப்பு அணுகலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்றும், இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் இன்னும் குறைவாகவே கண்டறியப்பட்டு, போதுமான சிகிச்சை அளிக்கப்படாமல் உள்ளனர். உலகளாவிய இரத்தப்போக்கு கோளாறுகள் சமூகம், இதை மாற்றும் சக்தியையும் பொறுப்பையும் கொண்டுள்ளது. நோயின் அங்கீகாரம், கண்டறிதல், சிகிச்சை மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும். பெண்களில் இரத்தப்போக்கு கோளாறுகளின் அறிகுறிகள் பின்வரும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால் உங்களுக்கு இரத்தப்போக்கு கோளாறு இருப்பதற்கான வாய்ப்புள்ளது: அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் - தொடங்கியதிலிருந்து நிற்கும் வரை 7 நாட்களுக்கு மேல் இரத்தப்போக்கு. மாதவிடாய் நாட்களில் பெரிய இரத்தக் கட்டிகள் வெளியேறுதல் அதிக இரத்தப்போக்கு உள்ள நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அல்லது அதற்கும் குறைவாக, சானிட்டரி பேட்களை மாற்ற வேண்டிய அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்போக்கு கோளாறு உள்ளது. பல் அறுவை சிகிச்சை, பிற அறுவை சிகிச்சை அல்லது பிரசவ காலங்களில் அதிக இரத்தப்போக்கு. 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அடிக்கடி ஏற்படும் மூக்கில் இரத்தப்போக்கு. வெட்டுக்களிலிருந்து 5 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் இரத்தப்போக்கு. மேலும் அறிய ஒரு மருத்துவரை /சுகாதார நிலையத்தைப் அணுகவும். மூலம்: உலக ஹீமோபிலியா கூட்டமைப்பு