<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">பக்கவாதம்</h3> <p style="text-align: justify;">மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டாலோ அல்லது ரத்தக் குழாய் வெடித்து ரத்தம் மூளைக்குள் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. ஒரு பக்கமாக கை, கால் செயலிழத்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் ஏற்படுதல், பேச முடியாமல் போதல், பேச்சில் தடுமாற்றம், திடீரென ஒரு பக்கமாக கை, கால்களில் உணர்ச்சி குறைதல், ஒரு கண்ணில் பார்வை மறைதல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது இரட்டையாக தெரிதல், நடையில் திடீர் தள்ளாட்டம், திடீர் விக்கல் ஏற்பட்டு சாப்பிடும்போது புரை ஏறுவது, திடீர் தலைசுற்றல் ஏற்பட்டு நினைவு இழப்பது ஆகிய அறிகுறிகளில் எது தென்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக நரம்பியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.</p> <p style="text-align: justify;">இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 48 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். 15 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 88 சதவீதம் பேர் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்துக்கு ஆளாகின்றனர்.</p> <h3 style="text-align: justify;">காரணங்கள்</h3> <p style="text-align: justify;">பக்கவாதம் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், நீரிழிவு நோய், இதய நோய்கள், புகைப் பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், உடலளவில் குறைவாக வேலை பார்த்தல், தூக்கமின்மை ஆகியவை பிரதான காரணம். இவற்றுடன் வயது அதிகமாகும்போது பக்கவாத பாதிப்பு நேரிடுவதற்கான வாய்ப்பும் அதிகம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை 3 மணி நேரத்தில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் மூளை நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">செய்ய வேண்டியவை</h3> <ul> <li style="text-align: justify;">பக்கவாத சிகிச்சைக்குப் பிறகு, மது, புகைப் பழக்கம் இருக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். இறைச்சிகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.</li> <li style="text-align: justify;">ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாய் ஆகியற்றைத் தவிர்க்க வேண்டும். உணவிலும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;"><strong>பக்கவாதத்தில் இருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும்?</strong></p> <p style="text-align: justify;">சிலர் முற்றிலும் குணம் அடையலாம். சிலர் குணம் அடைவதில்லை. உடனடியாக மருத்துவத்தோடு புனர்வாழ்வு சிகிச்சையும் அளித்தால் பெரும்பான்மையோர் விரைவில் குணமடைவர்.</p> <p style="text-align: justify;"><strong>வெகு காலத்திற்கு முன்னர் எனது தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. எனக்கும் உண்டாகும் வாய்ப்பு உண்டா?</strong></p> <p style="text-align: justify;">குடும்ப வரலாறும் பக்கவாதத்திற்கு ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாகும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.</p> <p style="text-align: justify;"><strong>பக்கவாதத்துக்குத் தடுப்பு மருந்து உண்டா?</strong></p> <p style="text-align: justify;">இல்லை. பக்கவாதத்துக்குத் தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.</p> <p style="text-align: justify;"><strong>பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின் வாகனம் ஓட்டலாமா?</strong></p> <p style="text-align: justify;">முழு குணம் அடையும் வரை வாகனம் ஓட்டக் கூடாது.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>நரம்பியல் நிபுணர் வேணி</p> </div>