<div id="Middlecolumn_internal"> <h3>பச்சைப் பட்டாணி</h3> <p style="text-align: justify;">காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த பச்சைப்பட்டாணி குளிர்காலத்தில் மட்டுமே வளரும். பச்சைப்பட்டாணியில் 1300 இனங்கள் இருந்தாலும் வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும் வகையே புகழ்பெற்றது. பச்சைப் பட்டாணிக்கு தோட்டப் பட்டாணி என்றும் பெயர் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் பயன்படுத்திய பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது.</p> <p style="text-align: justify;">எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்த காய்கறி, பச்சைப்பட்டாணி ஆகும். பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும் தெற்கு ஐரோப்பாவும் ஆகும். கி.மு. 2000 ஆம் ஆண்டிலேயே சீனர்கள் பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிளில் பச்சைப் பட்டாணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இங்கிலாந்தில் கி.பி.1600 ஆம் ஆண்டு இறுதியில்தான் பச்சைப் பட்டாணி அறிமுகமானது.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/greenpeas.jpg" /></p> <h3 style="text-align: justify;">பச்சைப் பட்டாணியின் சத்துக்கள்</h3> <p style="text-align: justify;">மாமிச உணவுக்கு மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.</p> <p style="text-align: justify;">பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோபிலவின், போன்றவை காணப்படுகின்றன.</p> <h3>செரிமான உறுப்புகள்</h3> <p style="text-align: justify;">கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது. உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது. நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற ‘பி’ குரூப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு பயன்படுகிறது.</p> <h3>மூளை வளர்ச்சி</h3> <p style="text-align: justify;">சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.</p> <h3>உடல்</h3> <p style="text-align: justify;">ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.</p> <h3>நுரையீரல் நோய்</h3> <p style="text-align: justify;">நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி. எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றும் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமலிருக்கவும், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.</p> <h3>மனநோய்</h3> <p style="text-align: justify;">பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள். சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும்.</p> <p style="text-align: justify;">பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: ஒன் இந்தியா நாளிதழ்</p> </div>