<div id="MiddleColumn_internal"> <h3 class="MsoNoSpacing" style="text-align: justify;">நோக்கம்</h3> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப் போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">பரு வலியை ஏற்படுத்துவதுடன் மனத் துன்பத்தையும் கொடுக்கும். ஒன்று மறைந்தால் இன்னொன்று வரும். ஒழுங்காகச் சிகிச்சை செய்தால், முழுமையாகக் குறைத்துவிடலாம். முடி நாளங்களின் திறப்புகள் எண்ணெய்க் கசிவு போன்ற பொருளால் அடைக்கப்படும்போது வரும் பரு blackheads எனப்படுகிறது. இந்தப் பருவானது உருண்டு, மேலெழுந்து, சிவந்து உள்ளே சீழுடன் சிறு கட்டிகளைப் போலக் காணப்படும்.</p> <h3>காரணங்கள்</h3> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் பரு வரலாம். அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். இளம் வயதினருக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பருக்கள் வரலாம்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">பரு தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும். வடு இருக்காது.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;"><strong>கிள்ளுவது ஆபத்து</strong></p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும். கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக் கட்டி உடைந்து, அதனால் சுற்றுப்புற அழற்சி அதிகமாகி முகமெல்லாம் வீங்கி, காய்ச்சல், கடும் வேதனை போன்றவை ஏற்பட்டுப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுவதும் உண்டு.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;"><strong>குளியல்</strong></p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">இனிப்புப் பண்டங்கள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சாக்லேட், பாலேடு இனிப்புகளைத் தவிர்க்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லேசான மலமிளக்கிகளைச் சாப்பிடலாம்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">குளிக்கும்போது உடலைத் தினமும் ஈரிழைத் துண்டால் அழுத்தித் தேய்த்துக் குளிப்பது நல்லது. முகத்துக்கு அதிகம் சோப்பு தேய்ப்பதைக் குறைத்துவிடுவது நல்லது.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">பயறு, கடலை, அரிசி போன்ற மாவுகளைத் தேய்த்து எண்ணெய்ப் பிசுக்கை அகற்றலாம். முகத்தையும் ஈரிழைத் துண்டால் தேய்த்துவிடுவதால் வியர்வைக் கோளங்களைச் சுற்றியுள்ள தசைகள் வலுவுற்று துவாரங்கள் அதிகம் பெருக்காமலும், கொழுப்பின் கசிவு, அழுக்கு தங்காமலும் அழற்சி அடையாமலும் பாதுகாக்க முடியும்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;"><strong>மருந்துகள்</strong></p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">முகம் கபத்தின் ஸ்தானமாகும். அங்குக் கொழுப்பும், ரத்தமும் எண்ணெய்ப் பசையால் சீர்கேடு அடைவதால் பரு வருகிறது. இங்குக் கொழுப்பை மாற்றுகிற, ரத்தத்தைச் சமனம் செய்கின்ற, கசப்பை ஆதாரமாகக் கொண்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">ஆயுர்வேத கண்ணோட்டப்படி மலசுத்தி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு சாதாரண தோல் நிறத்தை ஏற்படுத்தவும், குழிகளை அடைக்கவும், வர்ணத்தை ஏற்படுத்தவும் மருந்துகள் இணைக்கப்படுகின்றன.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">இதை ஆயுர்வேதத்தில் முகதூக்ஷிகா என்று அழைப்பார்கள். முகப்பரு நோயில் பாச்சோற்றிப்பட்டை, கொத்தமல்லி, வசம்பு, கோஷ்டம், ஆலம்மொட்டு ஆகியவற்றை அரைத்துப் பூசுவார்கள். மூக்கு வழி மூலிகை சிகிச்சையான நஸ்யம் செய்வதும் உண்டு. சில நேரங்களில் வேப்பம்பட்டை அரைத்து வாந்திக்குக் கொடுக்கலாம். சரக்கொன்றைப் பொடியை அரைத்துப் பூசினால் உடனடி பலன் கிடைக்கும்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;"><strong>பருக்கள் மறைய</strong></p> <ul> <li style="text-align: justify;">துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.</li> <li style="text-align: justify;">நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.</li> <li style="text-align: justify;">வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.</li> <li style="text-align: justify;">பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.</li> <li style="text-align: justify;">சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.</li> </ul> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">முகம் பளபளப்பாக: முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;"><strong>வசீகரம் பெற</strong></p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சமஅளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள் வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;"><strong>வறண்ட சருமத்துக்கு</strong></p> <p class="MsoNoSpacing" style="text-align: left;">உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வர வேண்டும்.</p> <p class="MsoNoSpacing" style="text-align: justify;">ஆதாரம்: தி -இந்து தமிழ் நாளிதழ்</p> <div id="_mcePaste" style="text-align: justify;"> </div> </div>