<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை.</p> <p style="text-align: justify;">கருப்பையின் உட்சுவர் சீராக (Endometrium) வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">கருப்பையின் உட்சுவர் மெலிதாக (homogeneous) இருந்தால், அது படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்குச் சிறந்தது. ஸ்கேனில் heterogeneous அல்லது Triple layer எனக் குறிப்பிடும் வளர்ச்சி கருவுறுவதற்கு வசதியாக அமையும்.</p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">உளுந்து</span></h3> <p style="text-align: justify;">கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சிக்குப் பெண்களுக்கு இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் மூலிகைகளில் உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.</p> <p style="text-align: justify;">உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென்னிந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுத்தங் கஞ்சியை வைத்திருந்தார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது பலனளிக்கும்.</p> <h3 style="text-align: justify;">ஆலம் விழுது பால் கசாயம்</h3> <p style="text-align: justify;"><strong>செய்முறை:</strong></p> <p style="text-align: justify;">ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக <span style="text-align: justify;">காலை மாலை இரு வேளையும்</span> அருந்தலாம் (காபி, டீக்குப் பதிலாக).</p> <p style="text-align: justify;">பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் (proanthocyanidin சத்துக்காக) சாப்பிடவும்.</p> <h3>கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை</h3> <p style="text-align: justify;">* உடல், உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.</p> <p style="text-align: justify;">* குறைந்தது 45 நிமிட நடைப்பயிற்சி அல்லது திறந்த வெளி விளையாட்டு <span style="text-align: justify;">உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும்</span></p> <p style="text-align: justify;">* எளிய யோகாப் பயிற்சிகள்.</p> <p style="text-align: justify;">* மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும். <span style="text-align: justify;">ஹார்மோன் செயல்பாடுகளை மன உளைச்சல் பாதிக்கும்.</span></p> <h3>சித்த மருத்துவ சிகிச்சை</h3> <p style="text-align: justify;">* முறையான சித்த மருத்துவர் ஆலோசனையுடன் கற்றாழையால் செய்யப்படும் குமரி லேகியம், குமரி பக்குவத்தை உண்டுவரலாம்.</p> <p style="text-align: justify;">* மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் சதாவேரி லேகியம். ஆல விதைப் பொடியுடன் அயச்செந்தூரம் தேனில் கலந்து உண்ணலாம்.</p> <p style="text-align: justify;">* மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இம்மருந்துகளை உண்ண வேண்டும்.</p> <p style="text-align: justify;">* இலந்தை இலை சுத்தம் செய்தது ஒரு கைப்பிடி, பூண்டு ஐந்து, மிளகு மூன்று ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து மோரில் கலந்து குடிப்பது நல்லது (மாதவிடாய் நாட்களில் இரு வேளை).</p> <p style="text-align: justify;">* இவற்றில் தங்களுக்கு ஏற்ற மருந்துகளை, மருத்துவர் ஆலோசனையுடன் தொடரவும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம் : தி ஹிந்து</p> </div>